Wednesday, June 09, 2010

சிலப்பதிகாரம் -(நாவல் வடிவில்) By கே ஜி ஜவர்லால் - எனது பார்வையில்

சிலப்பதிகாரம் by கே ஜி ஜவர்லால்----- தமிழ் காப்பியத்தின் நாவல் வடிவம்.

என்னைப் பொருத்த வரை தமிழ் காப்பியங்களை நாவலாக்கும் முயற்சியில் எழுதுவதில் கஷ்டமானது மிகவும் சிம்பிளான சிலப்பதிகாரம்தான். :)

சின்னக் குழந்தையாக பாட்டி கதையாகக் கேட்டு 'தசரத ராஜாவுக்கு ராமர்,பரதன்,லச்சுமனன்,சத்ருக்கனன் அப்படீன்னு நாலு பிள்ளைங்க.ராமர் வில்லை படார்னு ஒடைச்சி சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டார்.ராவணன் சீதையைத் தூக்கிட்டு பறந்து போயிட்டான்.ராமர் சண்டை போட்டு ராவணை ஜெயிச்சு சீதையக் கூட்டிக்கிட்டு வந்தார் " என்று மழலை மாறாமல் ராமாயணத்தை கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ராமாயணம் நம்முடன் பயணப்பட ஆரப்பித்து விடுகிறது- சினிமாவாக, டி வி சீரியலாக ,நாடகமாக ,பிரசங்கமாக,பட்டிமன்றமாக, புத்தகமாக,பாட்டாக இன்னும் எத்தனையோ வழிகளில்.

அதே போல "கண்ணகி..கண்ணுல கண்ணீரோட.. தலை விரி கோலமா.. கையில சிலம்போட.." என்று சொல்லக் கேட்ட கதை வடிவிலும்,
"காவலனே அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை நீதி கேட்டு வந்திருக்கிறேன் என்று உன் மன்னனிடம் போய் சொல்" என்று பத்தாம் வகுப்பில் நல்லா தமிழ் பேசும் பார்க்க நல்லாவும் இருக்கும் ஃபிகரை வைத்து ஸ்கூலில் போடும் ஆண்டுவிழா ட்ராமா மூலமாகவும்.,
தமிழ் பரிட்சையில் "பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்" என்று மனப்பாடம் செய்து எழுதி மார்க் வாங்கிய போதும்
அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஆன பின் "கற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா" போன்ற பட்டிமன்றங்கள் மூலமும்
ஏதோ ஒரு ராத்திரியில் தூக்கம் வராமல் ஆக்சிடென்டலாக பொதிகை சானலில் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரியைப் பார்த்து " மாசறு பொன்னே , வலம் புரி முத்தே" என்று பாடும் படம் மூலமாகவும் ஏதோ ஒரு விதத்தில் சிலப்பதிகாரம் தமிழர் எல்லோருக்கும் அறிமுகம் ஆகியே இருக்கிறது.

இப்படி ஏற்கனவே அறிமுகமான ஒரு கதையை மீண்டும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் எழுத வேண்டும் என்பதனால்தான் நாவல் வடிவில் எழுதுவதில் கஷ்டமானது சிலப்பதிகாரம் என்று மேலே சொன்னேன். இதைக் கவனமாகக் கையாண்டு ஜவ(ஹ)ர் சிலப்பதிகார நாவல் வடிவை நன்றாகவே எழுதியிருக்கிறார்.பாராட்டுக்கள்

கதா பாத்திர அறிமுகத்திலேயே அந்தப் பாத்திரங்கள் பற்றி நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான சில விடயங்களை இட்டு அது ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி அறிமுகமாகச் செய்து நாவலினுள் புகும் ஆர்வத்திற்கு அழகாகத் தூண்டில் போட்டிருப்பதற்கு ...சபாஷ்.
ஆனால் இப்படி பாத்திர அறிமுகத்தில் வீசிய அனைத்துக் கேள்விகளுக்கும் நாவலில் அழகாக பதிலளித்திருந்தாலும் "இளங்கோ அடிகள் " கதையில் தோன்றும் காட்சி எது ? என்று கேட்டுவிட்டு அதற்கு அவர் நாவலில் பதில் சொல்லியிருப்பதாக நினைவில்லை.
ஒவ்வொரு பகுதி முடிவிலிம் ஒரு சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போடும் சாண்டில்யனின் ஸ்டைலில் பகுதிகள் முடிவை அமைத்திருப்பது நன்றாகவே இருக்கிறது.

கதையோட்டத்தினைக் கெடுக்காதவாறு தத்துவ விசாரங்களை அங்கங்கே அள்ளித் தெளித்துள்ள விதம் அருமை.படிக்கவும் நன்றாக இருக்கிறது.கவுந்தி அடிகள் கோவலனுக்கு சொல்லும் அறிவுரைகள் யதார்த்தம்.

நிறைய காட்சியமைப்பு வர்ணனைகள் சிறப்பாகவும் நயமாகவும் இருந்தாலும் ( குறிப்பாக கோவலன்,கண்ணகி முதலிரவு) சில இடங்களில் நேரடி மொழி பெயர்ப்பு மாதிரி அப்படியே பதவுரை எழுதிருப்பது தவிர்த்திருக்கலாம்.
உதாரணம் "முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம், வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது. " என்பதனை அப்படியே "சங்கும் , முரசும், மத்தளமும் முழங்கியது. வெண்குடைகள் சூழ்ந்து வந்தன.மன்னன் உலா வருவது போல மங்கல நாண்(தாலி) நகரெங்கும் ஊர்வலமாகச் சென்றது.நிறைவாக மண்டபத்தை அடைந்தது." என்று கோனார் தமிழ் உரை எழுதுவதை தவிர்த்து அவர் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் என்பது என் எண்ணம்.

அதே போல கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் மாதவி , கோவலனைத் தவிர வேரொருவனரை மனதாலும் நினையாமல் வாழ்ந்தவள் என்று படித்திருக்கிறேன் ஆனால் "போதாக்குறைக்கு ஆண்கள் அவளை ரசித்த போதெல்லாம் மாதவி உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது " (இது கோவலனுடன் அவள் வாழ்ந்த பிறகு நடக்கிறது)என்பது போன்ற சில , படித்ததற்கு முரணாக இருப்பது போல் தோன்றுகிறது.

நான் முன்னமே சொன்னது போல் தெரிந்த கதை என்பதால் இந்த நாவல் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் சாத்தியம் இருக்கிறது.

இது ஜவ(ஹ)ரின் முதல் முயற்சியா தெரியவில்லை.If so, very very good effort.

எது எப்படி இருந்தாலும் நாவல் வடிவாக அனைவரும் படிக்கும் படியாக சிலப்பதிகாரம் ஒரு "சிறப்பதிகாரமாகவே" வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் கே ஜி ஜவர்லால்.

அன்புடன்...ச.சங்கர்

Sunday, June 06, 2010

சீவகன் கதை - " பினாத்தலின்" முதல் நாவல்

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "சீவக சிந்தாமணி " நாவல் வடிவில் எழுதப் பட்டு வெளிவந்திருக்கிறது.நாவலாக எழுதியுள்ளவர் தமிழ்ப் பதிவுலகில் "பினாத்தல் சுரேஷ் " என்று அறியப்படும் பிரபல:) பதிவர்-ராம்சுரேஷ் என்ற பெயரில் எழுதியுள்ளார். வெளியிட்டிருப்பது - கிழக்கு பதிப்பகம்

கடினமான கவிதை அல்லது செய்யுள் வடிவிலுல்ள தமிழ்க்காப்பியங்களை அனைவரும் படிக்கும் எளியதமிழில் நாவல் வடிவில் தரவேண்டும் என்ற எண்ணத்துக்கு கிழக்கு பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காப்பியங்களில் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ள சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி என்ற மூன்றையும் நாவல் வடிவில் கொண்டு வந்துள்ளார்கள்.இது முதன் முதலில் தமிழில் செய்யப்படும் புதுமையான முயற்சி இல்லை..ஏற்கனவே தேவாரப் பாடல்களும், பெரிய புராணமும் கதை வடிவங்களாக வெளியிடப் பட்டிருக்கிறது.ஆனாலும் இத்தகைய முயற்சிகள் ஒவ்வொரு கால கட்டத்தில் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்தக்காவியங்கள் /காப்பியங்கள் அந்தந்த தலைமுறை மக்களுக்கு அவர்களது பயன் படு மொழியிலேயே சென்று சேர்வதால் நமது இலக்கியக் களஞ்சியமான இவற்றை அழியாமல் காப்பதிலும் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்லவும், இது பற்றி மேலும் அறிந்து கொள்ள மூல நூல்களைத் தேடிச் செல்லும் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தூண்டு கோலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதையே புத்தகங்களின் முன்னுரையிலே பதிப்பகத்தாரும் தங்கள் குறிக்கோளாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.அந்த வகையிலே பதிப்பகத்தாரும் மூன்று ஆசிரியர்களும் தங்களுடைய நோக்கத்திலே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும் .பாராட்டுகள்.

மூன்று புத்தகங்களையும் படித்து விட்டாலும் "சீவக சிந்தாமணி " பற்றி முதலில் எனது எண்ணங்கள் பதியக் காரணம் படிப்பதற்கு முன் இந்த மூன்று காப்பியங்களில் நான் அதிகம் அறிந்திராதது சீவக சிந்தாமணிதான் என்பதாலும், எழுதிய ராம் சுரேஷுக்கு இது முதல் நாவல் என்பதாலும் அன்றி அவர் எனக்குத் தெரிந்தவர் மற்றும் நண்பர் என்பதாலல்ல :)

தான் எழுதிய முதல் நாவல் என்று வாசகனுக்கு தெரியாத அளவிலே சீவகனின் கதையை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் தேர்ந்த எழுத்தாளர் போல் சொல்லியிருக்கிறார் ராம் சுரேஷ்.புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்து முடிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும்படி எழுதியிருப்பது எழுத்தாளரின் வெற்றியே .

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது தமிழில் அனேகமாக முதலில் தோன்றிய ஹீரோ சீவகந்தான் என்று .இன்றைய தமிழ் ஹீரோவை மையப்படுத்தி வரும் படங்களில் வாடிக்கையாக ஹீரோக்கள் செய்யும் / வரும் காதல், மோதல், சொத்தை இழத்தல், அனாதை,தாய்ப்பாசம், பிரிவு, மாற்றாந்தாய்,சூழ்ச்சி,பழிவாங்கல்,சபதம்,பழி தீர்த்தல்...அத்தனையும் சீவகன் கதையில் நீக்கமற நிறைந்திருக்கிறது.அதுவுமில்லாமல் சீவகனுக்கு 8 ஹீரோயின்கள்:). போதாக்குறைக்கு தன்னைக் காதலிக்கும் மற்றும் இரண்டு பெண்களை அறிவுரை சொல்லித் திருத்தி விடுகிறான் (எம்ஜியார் பாணி தங்கச்சி சென்டிமென்ட் சீவகனுக்கு எப்படித் தெரிந்தது:) ) இன்றளவும் தமிழ்ப்படங்களுக்கு கதைக்கரு தரும் வற்றாத அட்சய பாத்திரம் "சீவகசிந்தாமணி"தான் என்று சொல்லலாம் போல் இருக்கிறது.அதே நேரத்தில் கதை படித்தால் மஹாபாரதத்தையும், கிருஷ்ணன் கதையையும் , அர்சுனன் கதையையும் கலந்து அதில் சமண மத எஸன்ஸையும் சேர்த்து தயார்க்கப் பட்ட மிக்ஸட் ஃப்ருட் ஜாம் இந்த சீவக சிந்தாமணி என்ற எண்ணமும் வருகிறது.எப்படியிருப்பினும் சீவக சிந்தாமணி படிக்கச் சுவை குன்றாத ஒரு அழகிய காப்பியம் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக பண்டைக் காவியங்களை நாவலாக்கும் முயற்சியில் அல்லது சரித்திரக் கதைகளை எழுதும் போது எழுத்தாளர்கள் வருணனைகளில் அதிகம் புகுந்து விடுவது உண்டு.அப்படிப் பட்ட வருணனைகள் கதையின் ஓட்டத்தை மட்டுப்படுத்தக் கூடிய அபாயமும் நேர்ந்து விடுவதுண்டு.அதற்கு நேர் மாறாக சிலர் கதையை நேரடியாக வெட்டொன்று துண்டு இரண்டு என்னும் படியாக எழுதி விடும் போது அதில் கதை ஓட்டம் நன்றாக இருந்தாலும் படித்து முடிக்கையில் ஊட்டியின் இயற்கையான குளு குளு எஃபெக்ட் இல்லாமல் செயற்கையான ஏசி ரூமின் குளு குளு எஃபெக்ட் மட்டுமே கிடைகும். இது இரண்டுமில்லாது வர்ணனைகளை சரியான அளவிலும் ,தேவையான இடங்களிலும் கொடுத்து படிப்பதை சுவாரசியமாக ஆக்கியிருக்கிறார் ராம் சுரேஷ்.

கதையில் மொத்தம் 65 கதாபாத்திரங்களுக்கும் மேல்.அதுவும் உருத்திரதத்தன்,கந்துக்கடன், காந்தர்வதத்தை, அனங்கமாலை, கலுழுவேகன், அசனிவேகம்,அநங்கமாவீணை, அசலகீர்த்தி, அநங்கவிலாசினி, பவணமாதேவன் என்று பல் சுளுக்கும் பழந்தமிழ்ப் பெயர்களோடு. ஆனால் நாவல் படித்து முடித்தது கதா பாத்திரங்களை நினைவில் நிறுத்தும் வகையில் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டிருப்பது மூலத்தை வடித்த திருத்தக்கத் தேவரின் திறமையாகவும் இருக்கலாம் அல்லது நாவலாக்கிய ராம்சுரேஷின் திறமையா தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பாராட்டுக்கள்.

கிழக்கு பதிப்பகமும் நாவலை தரமான முறையிலே அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். நான் படித்த வரை மொத்த 253 பக்க கதையில் மூன்று இடங்களில் எழுத்துப் பிழை தவிர ( ஒரு இடத்தில் சீவகன் சேவகன் ஆகிவிட்டான் :) ) வேறு குறை கண்ணில் படவில்லை.

மொத்தம் 12 பாகங்களில் 80 பிரிவுகளாக பிரித்துக் கதை அமைத்திருக்கிறது. நிறைய பிரிவுகளின் தலைப்புகள் சுமார் ரகம். பொதுவாக கல்கி ,சாண்டில்யன் சரித்திரக் கதைகளில் பிரிவுகளின் தலைப்புகளே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் படி இருக்கும்.அடுத்தடுத்து எழுதும் கதைகளில் எழுத்தாளர் இதில் கவனம் செலுத்துவது நலம்.
பினாத்தல் சுரேஷாக எழுதும் போது எழுத்தில் இழையோடும் நகச்சுவை முத்திரை ராம் சுரேஷின் நாவலில் சில இடங்களில் மட்டுமே காண முடிந்தது.சரித்திர / இலக்கிய களம் என்ற தயக்கமோ அல்லது டெபுடன்ட் நாவல் எழுத்தாளர் என்ற பயமாக கூட இருக்கலாம். இனி வரும் காலங்களில் இயல்பாக அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

மொத்தத்தில் இந்தக் கதை படித்ததால் திருத்தக்கத் தேவரின் "சீவக சிந்தாமணி " நூலைப் படிக்கும் ஆவல் எழுந்துள்ளது என்பது உண்மை.அதை முழுதும் படித்த பின் ராம்சுரேஷின் நாவல் மீதான என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு தனி நாவலாக,தமிழின் ஒரு பெரும் காப்பியக் கதையை எளிய முறையில் அறிமுகப் படுத்தும் ஒரு நூலாக இந்தப் படைப்பு வெற்றி பெற்றுள்ளது.மேலும் இது ஒவ்வொரு உப பிரிவாக நம் குழந்தைகளுக்கு கதை போல் படித்துக்காட்டும் எளிமையான முறையிலும் அமைந்திருக்கிறது. இதை தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், நாவல் விரும்பிகளும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தைரியமாக பரிந்துரைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ராம் சுரேஷ் (அ) சுரேஷ் பாபு (அ) பினாத்தல் சுரேஷ்

அன்புடன்...ச.சங்கர்