Monday, December 08, 2008

குரங்கு புத்தி? மனுச புத்தி!!!!!

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் அப்பட்டீங்குறாங்க.ஆனா ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் போது குரங்கும் , மனிதனும் எப்படி செயல்படுகின்றனர் அப்படீன்னு பார்த்தா டார்வினின் கண்டுபிடிப்பு சரிதானா அப்படீன்னு தோணுது.

நீங்களே பாருங்களேன் ரெண்டு வீடியோக்களையும்




முதலை வாயில மாட்டிக்கிட்ட குரங்கு என்ன பண்ணுது, அதோட தோஸ்துங்கல்லாம் என்ன பண்ணுது அப்படீன்னு பாத்துக்கிட்டீங்களா ?

இப்ப நம்ம மனுசங்க என்ன பண்றாங்க அப்படீன்னு பாருங்க.

ஒரு வேளை இதுதான் பரிணாம வளர்ச்சியோ ? :)

இங்கிட்டு வந்ததுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போனா சந்தோசப்படுவோமுல்ல.

அன்புடன்...ச.சங்கர்

Thursday, November 13, 2008

ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ!!!

இன்றைய மெயிலில் " வாஷிங்டன்னுக்கு குடி போகும் புதிய அதிபர் பாரக் ஒபாமாவின் குடும்பம் " என்ற தலைப்பில் வந்த இந்த ஃபோட்டோவைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது :)

நீங்களும் பாருங்களேன்

















ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ :))

அன்புடன்...ச.சங்கர்

Saturday, October 04, 2008

நவராத்திரி, கொலு மற்றும் சில பதிவுகள்

நவராத்திரி என்றாலே வலையுலகில் சில ரெகுலர் பதிவர்கள் எழுதும் பதிவுகள் எனக்கு ஞாபகம் வரும்.குறிப்பாக துளசி டீச்சரின் நியூசிலாந்து கொலு படங்களுடன் கண்டிப்பாக இருக்கும் .:)


நான் படித்ததில் ஞாபகம் இருப்பது டீச்சரின் 2005 கொலுப்பதிவும் இந்த 2005 கொலுப்பதிவும் ,சமீபத்திய 2008 கொலுவின் இந்தப்பதிவும் .

பினாத்தல் (அவர்கள் வீட்டு) துபாய் கொலு பற்றி வெள்ளாந்தியாய் இந்தப் பதிவு போட்டிருந்தார்.அப்புறம் அவர் கொலு பற்றி ஏதும் பதிவு போட்டாரா தெரியாது.

அப்புறம் 2007 கொலு சமயத்தில் இட்லி வடையாரின் இந்த அரசியல் கொலு பதிவும் வந்தது ஞாபகத்தில் இருக்கிறது.

நவராத்திரி சீசனில் கொலு மலரும் நினைவுகள் பதிவுகளும் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக நினைவில் இருப்பவை முன்பே படித்த ஜெயஸ்ரீ அவர்களது சிறு வயது கொலு நினைவுகளாக இந்தக் கட்டுரையும் , சமீபத்தில் படித்த டுபுக்குவின் இந்த இளமைக்கால ஜொள்ளித்திரிந்த கொலுப்பதிவும் . இந்த இரண்டுமே நான் ரசித்துப் படித்த கொலு பற்றிய பதிவுகள்.

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவையும் வலை பதிந்து விடலாம் என்று சில படங்களை கீழே கொடுத்துள்ளேன்.வேலை மற்றும் ஊர் ஊராக சுற்றித் திரிவதால் எனது சிறு வயது மாதிரி பெரிய கொலுவெல்லாம் கிடையாது.ஜஸ்ட் மூன்று படிகள்.அதுவும் பையனுக்கு லீவு ஆகையால் அவனது ஆர்வத்தை தடை போடாமல் இருக்க.
























அப்புறம் கிரிக்கெட் செட்டையும் ,கிராமத்து விவசாய செட்டையும் தரையில் வைத்து விடுவோம். பையன் அதில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக (தத்தாவுடன் சேர்ந்து) ரோடு போட்டு,பார்க் வைத்து, ஒட்டி வெட்டி ஏதாவது க்ரியேட்டிவிடி காட்டிக்கொண்டிருப்பான்.இந்த வகையில் அவனை 9 நாள் லீவில் சமாளித்து விடலாம் என்பதாலேயே கொலு கண்டிப்பாக வைத்து விடுவோம்.:)
















3 படியோ 9 படியோ தினமும் வித விதமாய் சுண்டல் கண்டிப்பாய் உண்டு.:)

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.


அன்புடன்...ச.சங்கர்

பிறப்பின் கைதி--"A Prisoner of Birth - By Jeffrey Archer"


புத்தகம் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டபோதும் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தகம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் . அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் முன்னால் படித்த அல்லது கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தெரிவு செய்து படிப்பது வழக்கம். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது எனது ஆங்கில நாவல் படிக்கும் ஆவலை தூண்டி விட்ட எழுத்தாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்தில் வெளிவந்த "A Prisoner of Birth" படிக்கக் கிடைத்தது.

தொடர்வது அந்த நாவலைப் பற்றி எனது பார்வையில்......

லண்டனில் சாதாரண மெக்கானிக்காக இருக்கும் அதிகம் படிக்காத டேனி கார்ட்ரைட் தனது சிறு வயது தோழியும் ,காதலியுமான எலிசபெத்துடன் தனது திருமணம் நிச்சயமானதை சிறப்பாக கொண்டாட நினைக்கிறான்.அதற்காக எலிசபெத்துடனும் ,தனது உற்ற தோழனும் எலிசபெத்தின் அண்ணனுமான பெர்னார்ட் வில்சனுடன் பணக்காரர்கள் வாழும் பகுதியிலுள்ள ஒரு பாருக்கு செல்கிறான்.அங்கு 4 பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒருவர் தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர்.மற்ற மூவரும் கூட பிரபலமான மேல்தட்டு வர்க்கத்தினர்தான். குடி போதையில் அந்த நால்வரில் ஒருவன் (ஸ்பென்சர் க்ரெய்க்-ஒரு பிரபல வக்கீல்) எலிசபெத்தை ஆபாசமாக கேலி செய்ய கோபப்படும் எலிசபெத்தின் அண்ணனை சமாதானப் படுத்தும் டேனியும் எலிசபெத்தும் அண்ணனையும் கூட்டிக் கொண்டு பாரை விட்டு வெளியேருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தகறாறு செய்வதற்கென்றே வெளியே வரும் ஸ்பென்சர் க்ரெய்க்கும் அவனது கூட்டாளிகளுள் ஒருவனும் கை கலப்பில் இறங்க நடக்கும் அமளியில் எலிசபெத்தின் அண்ணன் பெர்னார்ட் வில்சன் (ஸ்பென்சர் க்ரெய்கினால்) கத்தியால் குத்தப்பட்டு இறக்கிறான். ( தமிழ் சினிமாக்களில் வருவது போல் குத்தப்பட்ட தனது நண்பனை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் நெஞ்சில் பாய்ந்த கத்தியை டேனி எடுக்க முயல கத்தியில் அவன் கைரேகை பதிந்து விடுகிறது.மற்றும் ஸ்பென்சர் க்ரெய்கே போலிஸுக்கு தகவல் முதலில் சொல்வதால் அது ஸ்பென்சர் க்ரெய்க்கிற்கு சாதகமாகவும் டேனிக்கு எதிராகவும் சாட்சியமாகிறது :))

ஆனால் ஸ்பென்சர் கிரெய்க் தேர்ந்த வக்கீல் என்பதால் சூழ்நிலையையும் , தனது நண்பர்களின் பொய் சாட்சியையும் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு டேனி கார்ட்ரைட்தான் கொலை செய்தான் என போலிஸை நம்ப வைத்து விடுகிறான்.கோர்ட்டிலும் நடிகர் உட்பட பிரபலமான நால்வரின் சாட்சியத்தின் முன் எலிசபெத்தின் சாட்சியம் அதுவும் தனது காதலனுக்கு சாதகமான சாட்சியம் எடுபடாமல் போக ஜூரிக்களால் டேனி கார்ட்ரைட் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு 22 வருட ஆயுள் சிறைதண்டனை விதிக்கப் பட்டு இங்கிலாந்திலேயே அதிகம் பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப் படுகிறான். அவனது மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

சிறையில் இவனது அறையில் சக கைதியாக வரும் முன்னாள் ராணுவ அதிகாரி நிக்கோலஸ் மான்க்ரிஃப்பிற்கும் டேனிக்கும் மிக அதிக அளவில் உறுவ ஒற்றுமை இருக்கிறது ( மீண்டும் தமிழ் சினிமா ஸ்டைல் :)) ஒன்றரை வருடத்தில் விடுதலை செய்யப்படப்போகும் நிக் சந்தர்ப்பவசத்தால்??!! சிறையில் கொலை செய்யப்பட கொலை செய்யப்பட்டது டேனி தான் என அனைவரும் நினைக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டேனி நிக்காக விடுதலை அடைகிறான்.( மீண்டும் தமிழ் சினிமா:)) நிக்காக வெளியில் வரும் டேனி நிக்கின் சித்தப்பாவுடனான சொத்துத் தகறாரை வென்று பெரும் பணக்காரனாகி விடுகிறான் :)பிறகு திட்டமிட்டு க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகளை தொழில் ரீதியாகவும்,அந்தஸ்து ரீதியாகவும் கீழிரக்கி அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து பழிவாங்கும் (கொலை செய்ய அல்ல) நடவடிக்கைகளில் இறங்குகிறான். நடுவில் பொய் வேடம் கலைந்து டேனி மாட்டிக் கொள்ள ஜெயிலிலிருந்து பொய் சொல்லி தப்பித்ததற்காக மீண்டும் அவன் மீது வழக்கு தொடரப் படுகிறது.

டேனி விடுதலை செய்யப் பட்டான? எலிசபெத்துடன் மீண்டும் இணைந்தானா? க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 வருடங்களுக்கு முன் செய்த கொலை மற்றும் பொய் சாட்சி சொன்ன குற்றம் மறுபடி எப்படி வெளிக்கொணரப்பட்டது? என்பதை தனக்கேயான பாணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் ஜெஃப்ரி ஆர்ச்சர். கோர்ட் நடை முறைகளையும், வாதப் பிரதி வாதங்களையும் விருவிருப்பாக சொல்லியிருக்கிறார்.

இங்கிலாந்து கோர்ட் நடைமுறையின் கீழ் குற்றவாளியின் வேறு வழக்கு நடக்கும் போது, ஏற்கனவே தீர்ப்பு சொல்லப்பட்டு முடிந்து போன முதல் வழக்கு பற்றி எந்த ஒரு ரெஃபரென்ஸும் தரவோ அல்லது கோடி காட்டவோ கூடாது என்ற நடை முறை இருப்பதை நீதிபதி இருதரப்பு வக்கீலையும் கூப்பிட்டு கடுமையாக எச்சரிக்க, ஆனால் அந்த முதல் வழக்கு ரெஃபரன்ஸும் , ஸ்பென்சர் க்ரெய்கின் பெயரும் குறிப்பிடப்பட்டு அவனை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தால்தான்ன் டேனி கொலையாளி இல்லை என்று நிரூபிக்கமுடியுமாதலால், டேனியின் வக்கீல் எப்படி அரசு தரப்பு சாட்சியங்களின் வாயிலாகவே அந்த சாட்சிகளின் பெயரை சொல்ல வைத்து ஸ்பென்சர் க்ரெய்க்கை வரவழைத்து இந்தக் கேசில் இணைக்கிறார் மற்றும் எப்பொழுதோ நடந்த கொலையை ஸ்பென்சர் க்ரெய்க் செய்திருக்கக்கூடும் என்று அவன் சாட்சியம் மூலமே நிரூபிக்கிறார் என்பது இந்தக் கதையின் ஹைலைட்.

ஜெஃப்ரி ஆர்ச்சரே சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கி 2 வருடம் சிறை தண்டனை அனுபவித்ததும், பெல்மார்ஷ் சிறையிலேயே சிலகாலம் இருந்ததும் கோர்ட் நடைமுறைகளையும், சிறை வாழ்க்கையையும் தத்ரூபமாக எழுத உதவியிருக்கிறது என்பது என் எண்ணம் :)

ஜெஃரி ஆர்ச்சரின் முந்தைய சில படைப்புகளான Not a penny more Not a penny less , kane&Abel, Shall we tell the president, A Matter of Honour அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் கதை சொல்லப்பட்ட விதமும் ஜெஃரி ஆர்ச்சருக்கே உரித்தான கவர்ச்சி நடையும் புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் முடிக்கத் தூண்டுகிறது.ஜெஃப்ரி ஆர்ச்சர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

கதை படித்து முடித்ததும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எம்ஜிஆரின் நாடோடி மன்னன்,ஒளிவிளக்கு, நீரும் நெருப்பும் அல்லது atleast ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாரோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.:)

ஒன்று மட்டும் உண்மை, ஆர்ச்சர் சொல்வது போல் "We all suffer in our different ways from being Prisoners of Birth"

அன்புடன்...ச.சங்கர்

Monday, June 23, 2008

பாங்காங் - சில புத்தர் கோவில் படங்கள்

சமீபத்தில் தாய்லாந்து சென்று வந்த போது எடுத்த சில புத்தர் கோவில் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


தாய்லாந்து மொழியில் "வாட் போ" அல்லது ஆங்கிலத்தில் "ரிக்ளைனிங் புத்தா" என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தர் நம்ம ஊர் அனந்த சயனப் பெருமாள் மாதிரி படுத்துக் கொண்டிருக்கிறார்( தாய்லாந்தில் நிறைய இடத்தில் "சயன கோலத்தில் புத்தர்" இருக்கிறார்). இந்த சிலையின் நீளம் 165 அடி மற்றும் உயரம் 45 அடியாம். 1788 ல் கட்டப்பட்டு அப்புறம் 1982-ல் புதுப்பிக்கப் பட்டதாம்.















"வாட் போ " கோவிலின் வெளிப்புறத் தோற்றம் கீழே














"வாட் ட்ரைமித்" அல்லது "டெம்பிள் ஆஃப் கோல்டன் புத்தா" வில் புத்தர் சிலை 5.5 டன் எடையுடன் முழுவதும் தங்கத்தால் ஆனதாம்.இந்த கோவிலை விட இந்த புத்தர் சிலை பற்றிய கதை சுவாரஸ்யமானது. 900 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட இந்த சிலை பர்மீஸ் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப் படாமல் தடுக்க மேலே சாந்துக் கலவையினால் பூசப்பட்டு மறைக்கப் பட்டதாம். பின் இது உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்திருக்கிறது.1957 ஆம் வருடம் ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்கு சிலையை மாற்றும் போது க்ரேனிலிருந்து தவறி விழுந்ததில் மேல் பூச்சு சிதற உள்ளிருந்த தங்க விக்கிரகம் வெளித் தெரிந்ததாம் :)

















கோவிலின் வெளிப்புறத் தோற்றம்












தாய்லாந்து (பாங்காங்) போனா கண்டிப்பா இந்த ரெண்டு கோவிலுக்கும் போயிட்டு வாங்க.

ஆனா இந்த ரெண்டு கோவிலுக்கும் வர்ரவங்க ஏதோ வேண்டுதல் மாதிரி " வர்ராங்க புத்தர் சிலைக்கு முன்னாடி நின்னு போட்டோ புடிக்கிறாங்க..அப்புறம் நடையைக் கட்டுறாங்க" (என்னையும் சேத்துதான் :(( )இதுல காமெடி என்னன்னா போட்டோ எடுக்குறவங்க கும்புட வந்தவங்களைப் பார்த்து " கொஞ்சம் தள்ளிக்குங்க..மறைக்குது " அப்படீன்னு சொல்லுறதுதான். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ...இல்லியா :)

அடுத்த பதிவுல வேறு சில புகைப்படங்கள் தருகிறேன்.

திஸ்கி : பதிய மேட்டர் இல்லாம இந்த மாதிரி படம் காட்டுறேன் அப்படீன்னு நெனைச்சீங்கன்னா உண்மை அதுதான் .

அன்புடன்...ச.சங்கர்

Sunday, June 15, 2008

பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்

பாலா ,

நன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

பாங்காங்கில் ஒருநாள் மாலை சுமார் 8 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் போய்க்கொண்டிருந்த போது 2 தாய்லாந்து இளைஞர்கள் இரண்டு அழகான தாய்லாந்து இளம் பெண்களை பலவந்தப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போது, நான் ஓடிப் போய் அடிதடியில் இறங்கி அந்த இருவரையும் காப்பாற்ற , அந்த இளம் பெண்கள் நன்றியுடன் என்னைக் கட்டிப் பிடித்து உதட்டில்.................என்று சுவாரஸ்யமாக கதை விட ஆசைதான். ...........ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு டூரிஸ்டுக்கே உரித்தான பரபரப்பான ஷெட்யூலுடன் சுற்றிப்பார்த்தல், ஷாப்பிங் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு வாரம் போனது என்பதுதான் உண்மை :)
என்னக் கவர்ந்த நிறைய விஷயங்களில் குறிப்பாக இரண்டு..பத்தாயா (pattaya)வில் பார்த்த "அல்கஸார்" என்ற காபரே நடனமும் , இரவு இரண்டு மணிக்கு வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஜாலியாக நடந்து போனதும்.

இந்த அல்கஸார் என்பது ஒரு வகையான குழு காபரே நடனம். குடும்பத்துடன் பார்க்கலாம்( நானும் 8 வயது பையன் உட்பட குடும்பத்துடந்தான் போனேன்)1 மணி நேர நிகழ்ச்சியில் கண் முன்னேயூ சர் சர் என்று மாறும் தத்ரூப செட்களும், அதன் பிரும்மாண்டமும், இசைக்கேற்ப நடனமாடும் அழகிகளும், ஐரோப்பிய, சீன , இந்திய( ஒரு ஹிந்தி பாட்டுக்கு ஆடினாங்க..பேக்ரவுண்ட் செட்டிங் சொல்லணுமா?!! தாஜ்மஹால்தான்) , தாய்லாந்து , அரேபிய என அனைத்து கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் நடனங்கள் உண்மையிலேயே உலகத்தரம்.அதுவும் ஒருவர் அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பாதி ஆண் உடையுடனும் மறு பாதி பெண் உடையுடனும் நடனமாடி ஆண்பெண் போல ஒரே நேரத்தில் அங்க அசைவு நளினம் காட்டியது ஹை லைட். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு மெயின் டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். காட்சி முடிவில் நடனம் புரிந்தோருடன் போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்(தனியாக காசு கட்ட வேண்டும்) . நிகழ்ச்சி முடிந்து பஸ்ஸில் செல்லும் போது எங்கள் கைடு ஆடிய அழகிகள் அனைவருமே " பெண்களாக மாறிய ஆண்கள் " என்று சொல்லி எங்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சில படங்கள் கீழே.




























அடுத்தது இரவு ஏழு மணி வரை மிகத் திராபையாக தூங்கி வழியும் "வாக்கிங் ஸ்ட்ரீட்" (தெரு பேரே அதனுங்கோ) அத்ற்கு மேல் புது மணப் பெண் கோலம் பூண்டு பார்கள், டிஸ்கோ ,மசாஜ் , மாஜிக் மற்றும் கடைகளில் அனைத்து கதவுகளிலும் விலை மாதர்கள் என அதிகாலை 2 மணி வரை உருமாறும் அதிசயம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். இவ்வளவு இருந்தும் இங்கு எந்த ஒரு விரசமோ அல்லது அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ திருவிழா போல நடந்து செல்வது அதுவும் பெண்கள் தனியாக நடந்து செல்வது பார்த்தாலும் நம்புவது கடினம்,


















2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

முதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் சொல்வதானால் " இன்னும் நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் " இப்போது அவர் மாதிரியே என் கம்யூனில் "என் குடும்பம் " மட்டுமே உள்ளது.இது நடுத்தர வர்கத்திற்குள் நடக்கும் ஒரு விஷயம்தான்.மேன்சனில் வசிக்கும் புதிதாக வேலைக்கு வந்த கொஞ்சமேனும் சமூக சிந்தனையுள்ள இளைஞர்கள் கம்யூனிச தாக்கம் இல்லாமல் இளமைப் பருவத்தை கடப்பது மிக அரிது. அப்படிப்பட்ட 10000 பேரில் 1 அல்லது 2 பேர்தான் கடைசிவரை அதே பாதையில் பயணிக்க முடிவதும் கண்கூடு.மற்றவரெல்லாம் சமூக நிர்பந்தம் மற்றும் சுற்றுப் புற சூழ்நிலைகளால் மாறி விடுகின்றனர். என்னை எந்த ஒரு தனி நிகழ்வும் மாற்றவில்லை.படிப்படியாக தாக்கம் குறைந்து விட்டது என்பதே உண்மை.

இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு கம்யூனிச குழுக்கள் (சிபிஐ,சிபிஎம்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் et all) கம்யூனிச சமுதாயம் நோக்கிய அவர்கள் பாதை என்ன என்று இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஓட்டு அரசியலில்(Electoral politics) இருக்கும் சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகளின் கூத்து உச்சகட்டம். 80களில் முதல் எதிரி "நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ " காங்கிரஸ் கட்சி என்றும் அப்படிப்பட்ட கட்சியுடன் எந்தக் கூட்டும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எதிரி மதவாத பாஜக . அதனை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டு என்று நிலைபாடு. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு (1980 முதல் 2000 வரை) இவர்களே (இவர்களது அந்தக் காலத்தைய கண் மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பே) முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். இவர்களது முக்கியமான பிற்போக்குத்தனமே "தங்களது தவறுகளை இவர்கள் ஒரு போதும் ஒத்துக் கொண்டதே இல்லை " மற்றவர்களைவிட (atleast on record) அதிகம் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மனோபாவமும் வந்துவிடுகிறது. "எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது என்று அர்த்தமோ ?" என்று நக்கீரன் பாணியில் கேட்கத் தோன்றுகிறது. மற்ற படி இவர்களை " போலிகள் " என்று எல்லாவிஷயத்திலும் ஒட்டு மொத்தமாக சொல்வது கொஞ்சம் அதிகப் படிதான் :)

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

இருக்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண் உறவில் சமநிலை என்று எதுவும் இல்லை. ஒன்று பெண் அடங்கி இருக்கிறாள் அல்லது ஆண். இரண்டும் இல்லாதது பெரும்பாலும் விவாகரத்தில் அல்லது விவகாரத்தில் போய் முடிகிறது. பெண்ணாதிக்கவாதிகளை (சொந்த / மற்றவர்) அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியதுதான். பெண்ணாதிக்கவாதிகளின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று இருக்கும் ( give or take some percentage)

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

தாராவிக்கு நீங்கபோகும் போதெல்லாம் fixed agenda இல்லாமல் போனது முதல் காரணம். பயம் இரண்டாவது ள் காரணம் Adventurist மனோபாவம் எனக்கு இயல்பிலேயே குறைவு என்று நினைக்கிறேன் :) . அது சரி .. இது சபையில் கேட்கவேண்டிய கேள்வியா ?

ஒரு வழியாக 4 கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்றதும் நினைவுக்கு வந்தவர் பினாத்தல் சுரேஷ் அவருக்கான நாலு கேள்விகள்.

1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?

2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள் ?

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?


டிஸ்கி : மேலே கொடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நானே நேரடியாக சுட்டது.( அட இணையத்தில் இருந்து இல்லைங்க. என் காமராவின் வழியாக.) அதனால் போட்டோ நன்றாக இருந்தால் நான் பொருப்பல்ல.

அன்புடன்...ச.சங்கர்

*****************

Saturday, April 12, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 2

பாரதியார் பற்றிய முதல் பதிவின் சுட்டி இங்கே

அதன் தொடர்ச்சியாகவும் அல்லது தனிப் பதிவாகவும் வாசிக்கலாம்.

பொருளுதவி வேண்டி சீட்டுக்கவி

பதினைந்தே வயது நிரம்பிய பாரதியார் திருநெல்வேலியில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த காலம்.எப்படியோ கஷ்டப்பட்டு அவரை திருநெல்வேலிக்கு படிக்க அனுப்பி விட்டார் அவருடைய தந்தை.ஆனால் பணம் அனுப்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.எட்டையபுரத்தின் ஜமின்தாரை நேரில் சந்தித்து பணம் கேட்க தயங்கியிருக்கிறார்.ஏனெனில் அவர் நடத்திய எட்டையபுரம் ஜின்னிங் ஃபாக்டரியில் நஷ்டம் காரணமாக ஜமீந்தார் பங்குதாரராக போட்ட பணத்தை இழக்க நேரிட்டதே.அதனால் பாரதியே தன் கவித்திறமையை வெளிப்படுத்தி பொருளுதவி வேண்டும் விண்ணப்பத்தை சீட்டுக் கவியாக எழுதி ஜமிந்தாரிடம் அனுப்பி வைத்தார்.

விண்ணப்பப் பாடலில் கூட தமிழ் மேல் அவர் கொண்டிருந்த பற்று வெளிப்பட்டது.ஆதரிப்பில்லாததால் தமிழ் மொழி நலிவுருமாறு இருந்த நிலையையும் ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்று இருந்த நிலையை

இன்னமு தினுஞ்சுவை யெய்வுறீஇ யமைந்த
செந்தமிழ்த் திருமொழி சிறிதுமா தரிப்பவர்
இன்மையி னிந்நா ளினிதுகற் பவர்க்கு
நன்மை பயவாது நலிந்திட மற்றைப்
புன்மொழி பலவும் பொலிவுற லாயின


என்று அழகாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

தனக்கு ஆங்கிலம் கற்க விருப்பமில்லை என்றாலும் , தந்தையார் வற்புறுத்துவதன் பேரில் கற்க வேண்டியிருப்பதையும் , தமிழ் மட்டுமே கற்றால் வேலை கிட்டுமோ என்ற ஐயப் பாட்டையும் அப்படியே விருப்பமின்றி கற்க முற்பட்டபோதும் பொருளிலாதாற்க்கு கல்வி இல்லை என்று "அன்றும்" இருந்த நிலையையும் குறிப்பிடுகின்றார்.


....... ........ உற்றவென் தந்தையார்
என்னையும் புறமொழி கற்கவென் றியம்புவர்.
என்னையான் செய்குவ தின்றமிழ் கற்பினோ
பின்னை யொருவரும் பேணா ராதலிற்
கன்னயா னம்மொழி கற்கத் துணிந்தனன்

எனினும்

கைப்பொரு ளற்றான் கற்ப தெவ்வகை?
பொருளா னன்றிக் கல்வியும் வரவில ;
கல்வியா னன்றிப் பொருளும் வரவில.

இது பாரதியால் எழுதப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்து விட்டது ( 1897-ல் எழுதியது) . இன்னும் நமது நாட்டில் அன்னிய மொழியின் தாக்கம் மற்றும் நல்ல கல்வி பெற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை போன்றவற்றில் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது :(

என்ன சொல்கிறீர்கள்?

இந்த சீட்டுக் கவி(தை)யைப் பொருத்தவரை இதுவே பாரதியார் எழுதிய முதல் பாடல் என்று கொள்ளத்தகும்.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

Tuesday, April 08, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 1

இதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு குறிப்பாக எனது பதிவில் சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும் சுவையான சம்பவங்கள் இருந்தாலோ பின்னூட்டத்திலோ அல்லது சுட்டியாகவே குறிப்பிடுங்களேன்.

இளமையில் புலமையின் சான்று

ஒரு சமயம் தமிழில் பண்டித்தியம் பெற்ற திரு . சோணாசலம் பிள்ளை அவர்களது மகன் திரு. காந்திமதி நாத பிள்ளை அவர்கள் தன்னை விட வயதில் இளையவரான பாரதியை மடக்க எண்ணி " பாரதி சின்னப் பயல் " என்ற ஈற்றடியைக் கொடுத்து அதற்கு பாட்டெழுதச் சொன்னாராம்.
உடனே பாரதி சாதுர்யமாய் காந்திமதி நாதப் பிள்ளையே வெட்கும் படி பின் வரும் பாடலை பாடினாராம்.


ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்
என்று பாடி, பிரித்துப் படித்தால் " காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப் பயல் " என்று பொருள் வரும்படி பாடினாராம்.

ஆனால் , என்னதான் இருந்தாலும் வயதில் பெரியவரான காந்தி மதி நாதப் பிள்ளையை ஏளனம் செய்வது தவறு என்று, சில வார்த்தைகளையே மாற்றி பாடலை அர்த்தம் அடியோடு மாறிப் போகும் படி பாடினாராம். அந்தப் பாடல் கீழே.

ஆண்டில் இளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்


இந்தப் பாடலை இயற்றும் போது பாரதியாருக்கு 15 அல்லது 16 வயதுதான்!!!!

இதே காந்திமதிநாதப் பிள்ளை பாரதியார் "இளசை ஒருபா வொருபஃது" என்ற பெயரிட்டு எழுதிய 11 பாடல்களடங்கிய பிரபந்தத்திற்கு புகழ்ந்து சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் பின்வருமாறு

பாலாகற் கண்டா பழம் பொருந்து மின்னமு
தாலாகும் பாகா தமிழுருவா - ஏலாதி
இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்
தொட்ட வொருவொருபஃது
.

சிறு வயதிலேயே பாரதியாருக்கு வாய்க்கப்பெற்றிருந்த புலமைக்கு இது ஒரு சான்று என்றால் மிகையில்லைதானே.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

Friday, April 04, 2008

கன்னட திரைப்படத் துறையினருக்கு சூபர் ஸ்டாரின் அட்வைஸ்

கற்பனைதாங்க :)
















சொல்ல நெனைச்சிருப்பாரு ..சொல்லாம விட்டுட்டாரு :)



அன்புடன்...ச.சங்கர்