Tuesday, May 22, 2007

கருத்துக் கணிப்பு அரசியல் - Inside Story?

முதலில் திஸ்கி :)

"""எனக்கு தெரிந்த ஒரு நம்பகமான அரசியல் ஆர்வலர் நண்பரின் வாய்வழி செய்தி..இதற்கு எந்த ஆதாரமோ அல்லது தகவல்களோ என்னிடம் கிடையாது.எனவே இதை ஒரு காற்றில் உலவும் செய்தியாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.""

சிறிது காலமாகவே முதல்வர் வயிறு சம்மந்தப் உடல் நலக் கோளாரால் அவதிப் பட்டு அதனால் நடக்க கஷ்டப்பட்டு வருகிறாரம்.அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரைவில் வெளிநாடு பயணம் செய்ய (அமெரிக்கா அல்லது லண்டன்)திட்டமிடப்பட்டுள்ளதாம். வயதை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கு செல்லும் முன் ஸ்டாலினை தனது வாரிசாக கோடி காட்டிவிட்டு சூழ்நிலை சரியாக இருப்பின் துணை முதல்வராக அறிவித்து விட்டு செல்ல திட்டமிடப் பட்டிருந்ததாம்.

இதை கலைஞர் தனது பொன்விழா மேடையில் அறிவிப்பதாக இருந்ததாம்.ஆனால் இங்குதான் இன்னொரு கணக்கு புகுந்து குழப்பி விட்டது.கட்சியில் சமீப காலமாக மற்றொரு power centre ஆக உருவெடுத்து வரும் மாறன் குடும்பத்தினர் கலைஞருக்கு பிறகு கட்சியில் தங்களது பிடிமானத்தை நிலை நிறுத்திக் கொள்ள காய் நகர்த்தியுள்ளனர் என்கிறார்கள்.

அதன் தொடக்கமே இந்த கருத்துக் கணிப்பு நிகழ்வு. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்பது foregone conclusion என்பதாலும் அப்படி போடுவது கருத்துக் கணிப்பின் credibility யை அதிகப்படுத்தும் என்பதாலும் அதை போட்டு அடுத்த இடத்தில் யார் யார் என்று சொல்லாமல் "மற்றவர்கள்" என்று பொத்தம் பொதுவாக போட்டு தயாநிதி மாறனை மறை முகமாக குறிப்பது போல் தோற்றம் உண்டாக்கவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவுமே அழகிரி மூன்றாவது இடத்தில் குறிப்பிடப் பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பை கலைஞரிடம் காட்டி,அவரது வாரிசு அறிவிப்பிற்கு இது ஒரு முன்னோடியாக அமையும் என்று எடுத்தியம்பிய போதும் இதிலுள்ள முரண்கள் அதனால் கட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பின் விளைவுகளை கணக்கில் கொண்ட கலைஞர் கருத்துக் கணிப்பை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் பொன்விழாவில் கலைஞர் அடுத்தது யார் என்று கோடி காட்டுவதற்கு முன் கருத்து கணிப்பை வெளியிட்டு "நாங்கள் சொன்னது சரிதான்" என சொல்லி அதற்கு பக்கபலம் சேர்ப்பதற்காக calculated risk எடுத்து மாறன் தரப்பு இந்தக் கருத்து கணிப்பை அவசரமாக (பொன்விழாவிற்கு முன்) வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் எதிர்பார்க்கப் பட்டதற்கும் மேலாக மதுரை reaction அமைந்து அதனால் மூவரின் உயிரிழப்பு ஏற்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.இதனால் தன் பொன் விழாவில் வாரிசு பற்றி கோடி காட்டும் சந்தர்ப்பம் முற்றிலும் கை நழுவிப் போனதாலேயும், மதுரை சம்பவத்தில் அழகிரியின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் தனது வாரிசுகளின் மேல் தேவையில்லாத நேரத்தில் Wrong Focus ஏற்பட்டு விட்டதாலும்தான் எப்போதும் "மறப்போம் மன்னிப்போம்" பாலிசியை கடைப்பிடிக்கும் கலைஞர் டென்சன் எகிற மாறன் குடும்பத்தின் எந்த சமாதான முயற்சிக்கும் செவி சாய்க்காமல் /இடம் கொடுக்காமல் இருக்கிறாறாம். இது இப்போதைக்கு தொடரும் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து மாறன் குடும்பத்தினர் எப்படி காய் நகர்த்தப் போகிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.எது எப்படியோ இந்த சூழலை பயன் படுத்தி , விஷயங்களை தெளிவு படுத்த , கலைஞர் கூடிய விரைவில் ஸ்டாலினை வாரிசாக கோடி காட்டி விட்டு வெளி நாடு பயணப் படுவார் என்று சொல்லப் படுகிறது ...உண்மை என்னவோ யான் அறியேன் பராபரமே

அன்புடன்...ச.சங்கர்

Monday, May 21, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-9 திருஆலவாய்

மதுரை என்று வழங்கும் திருஆலவாய் அன்றும் இன்றும் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவே திகழ்ந்து வந்துள்ளது.

இங்குள்ள மீனாட்சி அம்மன், சொக்கநாதர் கோவில் பாண்டியராலும் பின்னர் நாயக்கர்களாலும் உருப்பெற்று பொலிவு பெற்றும் உள்ளது...மாலிக்காபூர் போன்ற அனேக வேற்று நாட்டவர் படையெடுப்புகளையும், உள்நாட்டுப் போர் முதலியவற்றையும் தாங்கி காலத்தால் அழியாத சின்னமாக நிற்கிறது.

கோவிலும் நகரமும் எங்கு அமைய வேண்டும் என ஈசனே மலைப்பாம்பு வடிவில் வந்து எல்லைகளை காட்டியதால் "திரு ஆலவாய்" எனப் பெயர் பெற்றது என்பது தல வரலாறும் சிவ பெருமான் திருவிளையாடல்களில் ஒன்றாக சொல்லப் படுவதும் ஆகும்.

ஒவ்வொரு முறை இந்தக் கோவிலுக்குள் செல்லும் போதும் அதன் விஸ்தீரணமும்..புதிது புதிதாக நான் தெரிந்து கொள்ளும் கலை , இலக்கிய, வரலாற்று, ஆன்மீக, சிற்பங்கள் மற்றுப் பல விஷயங்கள் என்னைப் போன்ற பாமரனை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒன்றல்ல பல கதைகள் வழக்கிலுள்ளன...அது போல் நூற்றுக்கணக்கான சிற்பங்கள்..இவ்வாறு இந்தக் கோவிலின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் :)

இத்திருத்தலத்தின் விஸ்தீரணத்தையும் சிறப்புகளையும் சில புகைப்படங்கள் சொல்லி விளக்கி விட முடியாது என்பதே உண்மை.


மேற்கு கோபுரமும் கோபுரவீதியும்

நான்கிலும் மிக உயரமான தெற்கு கோபுரம்
கோபுரப் பின்னணியில் பொற்றாமரைக் குளம்
கோவில் விதானங்களும் கிழக்கு மற்றும் வடக்கு கோபுரங்கள்
கோபுரத்திலுள்ள சிற்பங்களின் ஒரு பகுதி




அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-8 திருவாதவூர்

மதுரைக்கு அருகில் 22 கிமி தொலைவில் உள்ள இந்த ஊரில்தான் "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையாரு" இயற்றிய மாணிக்க வாசகர் பிறந்தார்.அதனால் வாதவூரார் என்றும் அழைக்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் "வாதபுரீஸ்வரர்" அதாவது வாயுவால் வழி படப் பட்டவர் என்று வழங்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் ஆலயத்தில் சனி பகவன் சந்நதி தனியே அமைந்திருப்பது பிரசித்தி.சனி பகவான் வாத நோயால் அவதிப் பட்ட போது இங்குள்ள சிவனை பூசித்து அதனால் வாதநோய் தீர்ந்ததால் "வாதவூர்" என்று தலம் பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.இன்றும் மக்கள் நோய் தீர இக் கோவிலுக்கு வருகின்றனர்.

கோவில் முகப்பு

கோபுரம்

மாணிக்கவாசகர் பக்தியியினால் குதிரை (பரி) வாங்க அரிமர்தன பாண்டிய மன்னன் தந்த காசை "திருப்பெருந்துறை" திருத்தலப் பணிகளுக்கு செலவு செய்து விட அதை அறிந்து கோபம் கொண்ட மன்னன் அவரை சிறையில் அடைத்து தண்டிக்கிறான்.

பக்தனை காக்க சிவ பெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பிடித்து பரியாக மாற்றி, தேவ கணங்களை பாகர்களாக்கி தானே குதிரை சேவகனாகவும் குதிரை சாத்தோடு வந்ததாய் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இதை

"குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்"

"அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்"

"மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் "


என்றெல்லாம் பாடியதிலிருந்து அறியக் கிடைக்கிறது

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-7 திருமோகூர்

இதுவும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற தலம். 108 திருத்தலங்களில் ஒன்று.பெருமாள் காளமேகம் என்றும் வழித்துணைப் பெருமாள் (மார்க்கபந்து) என்றும் தாயார் மோகனவல்லி என்றும் திரு நாமம் பெற்று விளங்குகிறார்கள். இக் கோவிலின் சக்கரத்தாழ்வாரை மிகவும் விஷேஷமாக கூறுகின்றனர். விஷ்ணு இங்குதான் மோஹினி அவதாரம் எடுத்ததாக கூறப்படும் புராண வரலாறு தெரிந்தவர் யாராவது எழுதலாமே :)

கோவிலின் முகப்பு
கோபுரத் தோற்றம்

கோவிலின் உட்புறம்


அன்புடன்...ச.சங்கர்

Sunday, May 20, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-6 அழகர் மலை

திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் அழகர் மலை திருமாலின் மற்றொரு பாடல் பெற்ற தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் ஆகும். அழகர் கோவிலுள்ள அழகர் மலையில்தான் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையில் நடக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் காணத்தான் இந்தக் கோவிலில் இருக்கும் அழகர் சித்திரை மாதம் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி பின் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்ட கோபத்தில் திரும்பச் செல்கிரார் என ஐதீகம்.

நான் போன போது உற்ச்சவர் கள்ளழகர் மதுரை போயிருந்தார்,மூலவருக்கு எண்ணைக் காப்பு சாத்தியிருந்தது, கோபுரத் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது, யானைக்கு உடல் நிலை சரியில்லாததால் யாரும் போக முடியா வண்ணம் கொட்டடியில் அடைத்து வைத்திருந்தனர் :)
சரி..அழகரை காணஅடுத்த தடவைதான் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும் போல :)

கோவில் கோபுர படம் என்னிடம் இல்லாததால் ப்ரசன்னா அவர்களது வலையிலிருந்து ஒரு படம் மட்டும் சுட்டு போட்டிருக்கிறேன்

















எனக்கு கிடைத்த கோபுர தரிசனம் :)


இந்தக் கோவில் தூண்களில் உள்ள சிலைகள் மிகவும் கலை அழகுடனும் நுட்பமாகவும் செதுக்கப் பட்டவை.கீழ்க்காணும் படங்களை நீங்களே பாருங்களேன்.
ஆனால் இதில் சில சிலைகளின் கைகள் முதலானவை சேதப் பட்டிருப்பது பல படையெடுப்புகளின் போதா இல்லை பராமரிப்பின்மையாலா தெரியவில்லை..எதாக இருந்தாலும் மிக துரதிர்ஷ்ட வசமானது :)

திருவிக்ரமர்






















கருட வாகனத்தில் விஷ்ணு பகவான்


















வராக மூர்த்தி

ஹிரண்யனுடன் சண்டையிடும் நரசிம்ஹ மூர்த்தி


ஹிரண்ய வதம் முடிந்ததும் குடலை மாலையாக சூடும் நரசிம்ஹர்













இந்த இரு நரசிம்ஹ அவதார சிற்பன்களிலும் சண்டையிடும் ஹிரண்யன் உயிரோட்டமாகவும்(முதல் படம்) வதம் செய்யப்பட்ட பிறகு உடல் தொய்ந்து தலை தொங்கி(இரண்டாம் படம்) தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-5 பழமுதிர்சோலை

மதுரை அருகில் அழகர் மலை மேல் பழமுதிர்ச்சோலை என்கின்ற முருகனின் ஆறாவது படைவீடு அமைந்துள்ளது.

ஒளவைப் பாட்டியிடம் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு பழம் உதிர்த்தளித்ததால் பழம் உதிர் சோலை என்று பெயர் வந்ததாக சொல்வோரும் உண்டு.



கோவிலின் முகப்பு


கோவில் கோபுரம்




கோவில் உட்புறத் தோற்றம்



மலை மேல் நூபுர கங்கை




முருகனை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர் ஒருவர்






அன்புடன்...ச.சங்கர்

Saturday, May 19, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-4 திருப்பரம்குன்றம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தலம்
குடைவரை கோவில் வகையை சார்ந்தது..இங்குதான் முருகன் தேவயானியை மணந்ததாக ஐதீகம்

கோபுரத் தோற்றம்





கோவிலின் முகப்பு



திருப்பரம்குன்றம் பற்றி மேலும் சில படங்களுடன் ப்ரசன்னா தனது வலைப்பதிவில் இங்கு எழுதியுள்ளார்.

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-3 திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே ஞாபகத்திற்கு வருவார்..ஆனால் திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு வேட்டைப்பெருமாளாக கத்தி முதலிய ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசர் என்ற நாமகரணத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இது மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் சிறு மலை மீதமைந்த கோவில் ..சுமார் 200 படிக்கட்டுக்கள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்

கோவிலிலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அழகுறத் தெரியும்

கோவில் கோபுரம்


கோவிலுக்கு செல்லும் பாதை





நடு வழியில் கண்ணன் கோவில்




கோவிலிலிருந்து பார்த்தால்




அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-2 திருவில்லிபுத்தூர்

பொதுவாக திருவில்லிபுத்தூர் என்றாலே வைணவ திருத்தலம் ,ஆண்டாள் கோவிலும் கோபுரமும் இதெல்லாமும் தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வரும். ஆனால் இதே திருவில்லிபுத்தூரில் சிவ பெருமானுக்கும் ஒரு சிறப்பான கோவில் "மடவார் விளாகம்" என்ற பெயரில் உள்ளது. அங்குள்ள சிவன் "வைத்தியநாதசுவாமி" என்ற பெயரில் காட்சி தருகிறார்

அந்தக் கோவிலின் சில புகைப்படங்கள் கீழே

கோவிலின் உயர்ந்த கோபுரம்



கோபுரம் மற்றும் குளத்தின் ஒரு பகுதி



பெருமானை வழிபட்டே தீருவது என்று கோவிலில் சன்னதிக்கு எதிரில் தலை கீழாக தொங்கும் சில பக்த கணங்கள் :)



அன்புடன்...ச.சங்கர்

பதுங்கு குழியில் இரண்டு ....



இந்த வார ஆ.வி.யில் உலக சினிமா பகுதியில் செழியன் " No man's Land " என்ற படத்தினைப் பற்றி எழுதியிருக்கிறார்.

அந்தப் படம் பற்றி தமிழ் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விமர்சனம் அளித்துள்ளார்..அதன் ஒரு பகுதி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
" எந்த உயிரினமும் பிறக்கும் போதே போர்க்குணத்தை தன் உயிரில் ஒளித்து வைத்துக் கொண்டு பிறக்கிறது.தன் ஞாயத்தை இன்னொரு உயிரினத்தின் நியாயத்தில் புகுத்த முயற்சி செய்து தோற்றுப் போதலே போர்!
ஒரு பதுங்கு குழியில் மாட்டிக் கொண்ட இரண்டு எதிரிகள்.தான் சொல்வதே ஞாயம் என்றும், தனது சொந்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே போராடிப் போராடி,தங்களைக் கொலை செய்து கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள்.அல்லது இரண்டு கொள்கைகள்..அல்லது இரண்டு தேசங்கள்.

"உங்களால்தான் இந்தப் போர் முதலில் ஆரம்பிக்கப்பட்டது" என்று இரண்டு கதாபாத்திரங்களும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொள்ள, என்னால் இந்தப் போர் இப்போதே நிருத்தப் பட வேண்டும் என்ற எண்ணம் படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்திலும் ஒலிக்க, இயக்குனர் உயரமாகிரார்.அவர் படைப்பின் ஆழம் புரிகிறது.

நண்பர்களே, தயவு செய்து இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். முடிந்தால் மறுமுறையும் பாருங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த விமர்சனம் தமிழ் வலைத்தளத்தின் இன்றைய நிலையை பற்றி மறை முகமாக சொல்வது போல் எனக்கு ஏன் தோன்றுகிறது ??? அல்லது இது எனது ப்ரமைதானா:)

அன்புடன்...ச.சங்கர்

Friday, May 18, 2007

திருத்தல புகைப்படங்கள்- 1...சங்கரன்கோவில்

கோவில் கோபுரம்

 

படத்தின் மீது க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்தால் கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகளை ரசிக்கலாம்



பிரசித்தி பெற்ற நாகப் புற்று ( சங்கரன் கோவில்)



அன்புடன்...ச.சங்கர்

Wednesday, May 16, 2007

வீனஸ் Vs மோஹினி

அழகின் தேவதைகள்

கிரேக்க புராணங்களில் அழகின் தேவதையாக சித்தரிக்கப்படுவது "வீனஸ்"தான்.வீனஸின் சிற்பங்கள் புராண காலந்தொட்டே பல பெரிய கலைஞர்களால் கற்பனை செய்யப்பட்டு, வடிக்கப் பட்டு என்று வரலாறு முழுவதும் காணப்படுகிறது.அந்த அழகின் தேவதையின் இரண்டு உலகப் புகழ் பெற்ற சிற்பங்கள் கீழே.




















இந்தியாவில் தென்னாட்டு சிற்பக்கலையும் இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதற்கான பல எடுத்துக்காட்டுகள் நமது கோவில்களில் காணப்படுகின்றன.ஹிந்து புராணங்களில் அழகுக்கு உதாரணமாக சொல்லப்படுவது மஹாவிஷ்ணு எடுத்ததாக சொல்லப்படும் "மோஹினி" அவதாரம்தான்.அழகிய மோஹினி அவதார சிற்பங்களை பல கோவில்களில் நாம் காண முடியும்.சமீபத்தில் குடுமியன் மலை சென்ற போது அங்கிருந்த மோஹினி அவதார சிலைகள் வடிவமைக்கப் பட்டிருந்தது தத்ரூபமாகவும் கலை நயத்துடன் காணப்பட்டது.அந்தப் படங்கள் கீழே.





















Tail Piece :
1.குடுமியன் மலை தமிழ் நாட்டில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது

2.குடைவரை குகைக் கோவில் வகையை சேர்ந்த இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தையது என்றும் அன்று தொடங்கி பல்லவர்,பாண்டியர்,சோழர்,விஜயநகர,ஹோய்சாள,நாயக்கர், சேதுபதி எனப் பல மன்னர்களாலும் பல நூற்றாண்டுகளாக புனரமைத்து வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

3.இங்குள்ள அனைத்து சிற்பங்களிலும் ஏதேனும் ஒரு பாகம்( முக்கியமாக மூக்கு) பின்னப்படுத்த /சேதப்படுத்தப் பட்டிருப்பது மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்று சொல்லப்பட்டாலும் இதற்கான சரித்திர ஆதாரம் எதுவும் ஆவணங்களில் இல்லை என்றும் சொல்லப் படுகிறது.(மேலே உள்ள மோஹினி சிற்பங்களின் மூக்கும் சிதைந்திருப்பதை பார்க்கலாம்)

4.மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு மோஹினி சிலைகளும் எதிரெதிர் தூண்களில் அமைக்கப் பட்டிருக்கிறது.இரண்டு சிலைகளுக்கும் உள்ள உடற்கூறு மற்றும் உருவ வேறுபாடுகள் துல்லியமாக வடிக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம்.ஒரு சிலை ஒல்லியாகவும்(இடது) சற்று உயரமாகவும் மற்றது சற்றே குட்டையாகவும் பருமனாகவும்(வலது)

5.இது என்னைப் பொருத்த வரை இரண்டு (மாடல் அழகிகள்) ஆடல் அணங்குகளை மாடலாக வைத்து செதுக்கப் பட்டிருக்கவேண்டும் என்று லாஜிக்கலாக தோன்றினாலும் கைடு சொன்ன தகவல் சற்று சுவாரசியமானது....அதாவது மஹாவிஷ்ணு இரண்டுமுறை மோஹினி அவதாரம் எடுத்தாரம்...பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது அசுரர்களை மயக்க ஒரு முறையும், மகிஷனை வதம் செய்த ஐயப்பனை உலகுக்கு தர ஒரு முறையும். அந்த வேறுபாடுகளே இந்த சிலை உறுவங்களில் துல்லியமாக வேறு படுத்திக் காட்டியிருப்பதாக...உண்மையா தெரியாது ஆனால் இது போன்ற லோக்கல் கதைகள் நமது புராணங்களுக்கு மேலும் சுவை கூட்டத்தான் செய்கின்றன.

6.வீனஸ் சிலையின் வயிற்று மடிப்புகள் போன்றவை துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருப்பது போலவே மோஹினியின் வயிற்று மடிப்பு, கை நரம்புகள்,கையிலுள்ள / மற்ற ஆபரணங்கள் போன்றவற்றை துல்லியமாக வடிவமைத்திருப்பது அந்தக் காலத்தைய நமது சிற்பக்கலை தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.


இதைப்போல் முருகன்,விநாயகர்,திருவிக்ரமர்,ரதி, மன்மதன்,பத்துத் தலையுடன் கூடிய ராவணன், வாலி, சுக்ரீவன், அனுமன் ,காளி என ஏகப்பட்ட சிற்பங்கள் மற்றும் குடுமியன் மலை என்ற பெயர்க்காரணம்,கர்நாடக சங்கீதத்தின் மூலம் (basic rules) பற்றியதான விரிவான கல்வெட்டுக்கள் (இது வரை குடுமியன் மலை கல்வெட்டுக்கள் மட்டுமே கர்நாடக இசைக்கு மூலாதாரமாக கிடைத்த பழமையான எழுத்து வழி வரலாற்று ஆவணங்கள் என்று கூறப்படுகிறது),இந்தக் கோவில் கஷ்டத்தில் இருக்கும் போது ஒரு தாசி இதை விலைக்கு வாங்கி பின் ஊருக்கு தானமளித்தது, கோவிலில் தாசி கட்டிய மண்டபம், மலையின் மேல் உயரத்தில் உமையாள் சகித ரிஷப வாகனத்தில் சிவன் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் சேர்ந்தார் போல் சிலையாக செதுக்கப்பட்டிருக்கும் ஆச்சரியங்கள் என பல சுவையான விஷயங்கள்,தகவல்கள்,வரலாறுகள் குடுமியன்மலைக்கு உண்டு.

அவை பற்றி புகைப் படங்களுடன் விரிவாக மற்றொரு பதிவில் :)

அன்புடன்...ச.சங்கர்