Wednesday, September 07, 2005

Problem in publishing in unicode

யூனிகோடில் பதிக்க முடிகிறதா என்று ஒரு டெஸ்ட் !!!

Tuesday, September 06, 2005

ஆசிரியர் தினம் --சில சிந்தனைகள்

வலைத்தளங்களிலும், குழுமங்களிலும் ஆசிரியர் தினம் பற்றி பலர் கவிதை மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பற்றி எழுதியாகி விட்டது.

யோசித்துப் பார்த்ததில் எனக்கு நினைவுக்கு வந்த ஒரு ஆசிரியரை பற்றி எழுதலாம் என எண்ணினேன்.விளைவு இதோ!!!

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான் " ஏன் இன்னும் லிபியா விழவில்லை "
படைத்தளபதி பயந்து கொண்டே " சர்,அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது"
முசோலினி " யார் அவர்களை வழி நடத்துவது ?"
தளபதி " ஒமர் முக்தார் "
முசொலினி " ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!"


தளபதி " சர்,அவர் ஒரு ஆசிரியர்...He is a teacher "முசோலினி ஆச்சரியத்துடன் " a teacher ?!!" பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே " Even I was a teacher " என்கிறான்.

ஒரு படத்த்ல் இடம் பெற்ற காட்சி இது.உண்மையில் இப்படி நடந்ததா அல்லது சினிமாவுக்காக சித்தரிக்கப் பட்ட காட்சியா தெரியாது.ஆனால் பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட , கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய "ஓமர்-அல்-முக்தார்" பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.


கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த , இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த , பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா ?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்கு வரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது.தணியாத சுதந்திர வேட்க்கையும்,அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை.அவரே முன்னின்று போரிட்டார்.முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது,அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார்.இத்தாலியப் படை அவரை சலோக் நகரில் , 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி,அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது)



சிறையில் சிறை அதிகாரி "ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை ?"என்ற போது " ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும்நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும் " என்றாராம் ஒமர் முக்தார்.

வாழ்க இவர் போன்ற ஆசிரியர்கள்...அவர் மாதிரியான மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் ஒரு சல்யூட்.

பின் குறிப்பு :ஒமர் முக்தார் பற்றி " Omer Mukta-The Lion of Desert " என்ற படம் 1984 இல் வெளி வந்தது.Antony Quinn ஒமர் முக்தாராக அருமையாக நடித்திருப்பார்.பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.பல ஆஸ்கர்களை தட்டிச் செல்லும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்தப் படம் ஒரு முக்கிய ஆஸ்கர் கூட வாங்காதது துரதிஷ்டமே.

காரணம் அதே ஆண்டு (1984)ஒமர் முக்தார் போன்றே தன் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய ஆனால் மிகவும் வித்தியாசமான முறையில் போராடிய மற்றொரு உன்னதமான மனிதனைப் பற்றிய திரைப் படம் வெளிவந்து நடிப்பு,டைரக்ஷன் உட்பட பல ஆஸ்கர்களை(ஆறோ அல்லது ஏழோ) தட்டிச் சென்றது....
>>
>>
>>
>>
>>
>>
>>
>>

அந்தப் படம் " காந்தி "

அன்புடன்...ச.சங்கர்

Sunday, September 04, 2005

தமிழ் படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றிய பொது அறிவு

போன வாரம் ஜெயா T.V யில் குஷ்பு மாதா நடத்தும் " ஜாக்பாட் " தெரியாத்தனமாக?! பார்க்க நேர்ந்தது.
அதில் challange round என்று ஒரு கட்டம்.
அதில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி " எழுத்தாளர் அகிலனுக்கு ஞான பீடம் பரிசு எந்தப் புத்தகத்திற்கு வழங்கப் பட்டது ? "
பதில் சொல்லிக் கொண்டிருந்த அணி சொன்ன பதில் " சில நேரங்களில் சில மனிதர்கள் "
"தவறு" என்று சொல்லி விட்டு எதிரணியைப் பார்த்து " உங்களுக்கு தெரியுமா" என்றார் குஷ்பு.
அவர்கள் சொன்ன பதில் " பார்த்திபன் கனவு "இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது-
1."உண்மையிலேயா இந்தக் கேள்வி கஷ்டமானதா அல்லது பொதுவாகவே நமது மக்களின் தமிழ் படைப்புகள் பற்றிய பொது அறிவு இந்த மட்டில்தான் இருக்கிறதா "
2. இரண்டு அணிகளும் பதில் சொல்கிறேன் பேர்வழி என உளறிக் கொட்டியதை "முயற்ச்சியாவது செய்தார்களே " அதுவும் " தமிழ் புஸ்தகப் பெயர்களை சொன்னார்களே " என சந்தோஷப் படுவதா இல்லை தலையில் அடித்துக் கொள்வதா...புரியவில்லை...
3.சமீபத்தில் வலைப்பதிவுகளில் புத்தக மீ மீ என ஒரு விளையாட்டை விளையாடினார்களே அதில் நான் படித்தது,என்னிடம் உள்ளது என்று புத்தகப் பட்டியல் எழுதினார்கள் அதை விடுத்து படித்த நல்ல பத்து தமிழ் புத்தகங்கள்,அதன் ஆசிரியர்,பெற்ற விருதுகள் முடிந்தால் புத்தகம் எதைப் பற்றியது...கதைக் கரு,களம் பற்றி சுருக்கமாக எழுதினா படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் இருக்குமில்லையா?அதுக்காக ஒரே புத்தகத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பல பேர் எழுதக் கூடாது(வலைகளில் அன்னியன் விமர்சனம் மாதிரி)...போரடித்து விடும்.
யோசனை எப்படி இருக்கு...நீங்க சொல்லுங்க...நல்லா இருந்தா யாராவது படித்தவர்கள் பத்து புத்தகம் பற்றி atleast ஐந்து புத்தகம் பற்றி எழுதி ஆரம்பித்து வையுங்களேன்...
நானா...நான் அவ்வளவு படிக்கலையே மக்கா...
அன்புடன்...ச.சங்கர்

Sunday, August 14, 2005

சிறுகதைப் போட்டி - " என்ன செய்யப் போகிறாள் "

இன்ஸ்பெக்டர் பளார் என அவன் கன்னத்தில் அறைந்தார்.அவன் அடியின் வேகத்தால் பின்னால் நகர்ந்து நாற்காலி தடுக்கி கன்னத்தைப் பிடித்துக் கொண்டே கீழே விழுந்தான்.
அங்கே ஓரமாக உட்கார்ந்திருந்த கன்னியம்மா கூட "அட ஏன் தொரை அது இன்னா பண்ணிடிச்சீன்னு இந்த அடி அடிக்கிற..அதப் பாரு..பாஷை தெரியாத நீ கேக்குறது புரியாம பேந்தப் பேந்த முளிக்கிறத" என்றாள்.
"நீ உன் வேலைய மட்டும் பார்" என்று கன்னியம்மாளைப் பார்த்து கத்தி விட்டு மீண்டும் "ஏண்டா நாயே இப்படி செஞ்சே " என்று அவனை உதைக்க காலை ஓங்கினார்.
அவன் உதை படுவதை தவிர்க்க முடியாதாகையால் உதையின் வேகத்தைக் குறைக்கும் பொருட்டு உடலை குறுக்கிக் கொண்டு பயத்துடன் இன்ஸ்பெக்டரை பார்த்து "சாப்ஜி..சாப்ஜீ" என்று இறைஞ்சினான்.பிறகு நந்தினியைப் பார்த்து "பெஹன்ஜீ மாப் கரோ " என்ற படி காலைப் பிடிக்க வந்தான்.அவனுக்கு சுமார் 30 வயதிருக்கலாம்.கச்சலான தேகம். மிகச் சாதாரணமான தினம் பார்க்கும் லட்சோப லட்சம் முகங்களில் ஒன்று.


நந்தினி பதறிப் போய் பின்னால் நகர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து"அவனை ஏன் இப்படி என் கண் முன்னாலேயே அடிக்கிறீர்கள்?சட்டப்படி அவன்மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதன் படி செய்து தண்டனை கிடைக்கச் செய்தாலே போதுமானது " என்றாள்.


இன்ஸ்பெக்டர் நந்தினியைப் பார்த்து கொஞ்சம் கடுப்பாக " மேடம்...இவனை என்ன கொஞ்சச் சொல்றீங்களா?இந்த நாயெல்லாம் இப்படி அடிச்சாத்தான் திருந்தும்.நீங்க வேணும்னா பக்கத்து அறைல போய் உட்கார்ந்து , நடந்ததை ஒரு கம்ப்ளைன்டா எழுதிக் குடுங்க.நான் இவனை விசாரிச்சுட்டு வந்து ஒங்க புகாரை வச்சு ஒரு எ·ப் ஐ ஆர் போட்டுர்ரேன்.கான்ஸ்டபிள் இவங்களை கூட்டிட்டு போய் ஸ்டேட்மென்ட் வாங்கிக்குங்க " என்றார்.

கான்ஸ்டபிள் என்று விளிக்கப் பட்ட பெண் காவலர் பக்கத்து அறையில் நந்தினியை உட்கார வைத்து மின் விசிறியை போட்டு ஒரு வெள்ளை காகிதத்தை கொடுத்து " இதுல எழுதுங்கம்மா..பேனா இருக்குதா?" என்றாள்.


நந்தினி இருக்கிறது என்பது போல் தலை ஆட்டி விட்டு நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்.

நந்தினி பிரபல சென்னை பத்திரிக்கை ஒன்றில் நிருபர். இன்னும் கல்யாணமாகாத நன்கு படித்த 25 வயது பெண்.


சென்னை மெயிலில் நேற்றிரவு வரும் போது எதிர்பக்க மேல் பெர்தில்தான் அவன் படுத்திருந்தான்.கிட்டத்தட்ட நடு நிசி வேளையில் காலில் ஏதோ பூச்சி ஊர்வது போல் இருக்கவே சட்டென விழிப்பு வந்து பார்க்கையில் அவன் கால் நந்தினியின் கால்களை தடவிக் கொண்டிருந்தது.நந்தினி முழித்துக் கொண்டதைப் பார்த்ததும் சட்டென காலை நகர்த்திக் கொண்டான்.


முதலில் நந்தினிக்கு புரியவில்லை.அவன் தூக்கத்தில் தெரியாமல் கால் பட்டு பின் நகர்த்திக் கொண்டானா இல்லாவிட்டால் வேண்டுமென்றே செய்தானா என்று . நந்தினிக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை.சத்தம் போட்டு ஊரைக் கூட்டி பின் தெரியாமல் கால் பட்டது என நிரூபணமாகி விட்டால் வெறும் அவமானம் மட்டுமே மிஞ்சும்.அல்லாமல் நடந்து முடிந்ததற்காக எப்படி ஊரைக் கூட்டி ஞாயம் கேட்பது, மற்றவர்கள் அதை தவறு என நினைப்பார்களா அல்லது தெரியாமல் கால் பட்டதற்கு படித்த பெண்ணின் மிகையான அலட்டல் என கொள்வார்களா என்று யோசித்து நடந்ததை வெறும் சாதாரண நிகழ்சி போல் எண்ணி மறக்க முயன்றாள்.முடியவில்லை.


படித்த,பத்திரிக்கையில் வேலை பார்க்கும் அடுத்தவரை கேள்விகளால் துளைக்கும் தன் போன்ற பெண்ணிற்கே இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொள்ள துணிச்சல் இல்லையே என வேதனைப் பட்டு தன்மானம் தாழ்ந்து போய் கீழ்த்தரமாக உணர்ந்தாள்.எப்போது விடியும்,சென்னை வரும் என்று எண்ணியவாரே மறுபடி தூங்கிப் போனாள்.

மறுபடி அரை மணி நேரத்தில் யாரோ மார்பில் கை வைப்பது போல் உணரவே தனிச்சியாக "வீல்"என அலறி விட்டாள்.அவளது அலறல் சத்தத்தால் அனைவருவ் விழித்தது,பின் பரிசோதகரும் இரயில்வே போலிசும் அழைக்கப்பட்டு அந்தப் பையன் வலுக்கட்டாயமாக போலிசாரால் அழைத்து செல்லப்பட்டான்.நந்தினி பெண்ணாகவும் தமிழாகவும் இருந்ததால் பொது மக்களின் பச்சாதாபம் வேற்று பாஷைக்காரனாகவும் ஆணாகவும் இருந்த அவனுக்கெதிராக இருந்தது.


ஆனால் அதன் பின் நடந்த நிகழ்சிகள் நந்தினியை அதிர்சியடைய செய்தன.பரிசோதகர் வந்து அந்த பையனை இரயில்வே போலிசார் செமத்தியாக கவனித்து விட்டதாகவும் இனி புகார்,கேஸ் என்று போனால் நந்தினி உட்பட அனைவருக்கும் அனாவசிய நேர விரயமும் தொந்தரவும் எனவே இதை இப்படியே விட்டு விடுமாரும் சொன்னார்.நந்தினியை ஆதரித்த சக பயணிகள் சிலர் கூட அவர் சொல்வது யதார்த்தம் போலவும் நந்தனி அதைக் கேட்பதே நல்லது என்பது போலவும் பேசத் தொடங்கினர்.


நந்தினி பதில் ஏதும் பேசவில்லை. இந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு நடக்கும் எந்த அநீதியும் எவ்வளவு அலட்சியமாகவும், சர்வ சாதாரணமாகவும் அனைவராலும் கையாளப் படுகிறது என வேதனைப் பட்டாள்.


மறு நாள் காலை சென்னை சென்ட்ரலில் அந்தப் பையனை கைகளை அவன் சட்டையாலேயே பின்னே கட்டி போலிசார் அழைத்துக் கொண்டு வந்தனர்.நந்தினியிடம் வந்து "அம்மா,ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திடுங்க, மத்ததை நாங்க பார்த்துக்குரோம்" என்றார்கள்.

நந்தினி அவர்களுக்கு சற்று பின்னால் நடக்க முற்படுகையில் ஒரு இளைஞன் வந்து அவசர ஆங்கிலத்தில் தணிந்த குரலில் தான் அந்தப் பையனின் நண்பன் என்றும், " ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,மன்னித்து விடுங்கள்,அவன் அரசாங்க வேலை தேடி பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டது. அவன் மேல் கேஸ் நடந்து தண்டனை கிடைத்தால் அவன் எதிர்காலம் பாழாகி விடும் " என்றான்.

நந்தினி கோபத்துடன் " உன் அக்காள் ,தங்கைக்கு இதைப்போல் நடந்தால் இப்படித்தான் அறிவுறை கூறுவாயா " என ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த இளைஞன் முகம் கறுக்க அந்த இடத்தை விட்டு அகன்றான்.


போலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கூட முதலில் "மேடம், செமத்தியா நாலு சாத்து சாத்தி ரெண்டு நாள் ரிமாண்டுல வச்சு விட்டுரலாமே " என்றார். பின் நந்தினியின் கோபத்தையும் பத்திரிகை பின்னணியையும் பார்த்து சுறுசுறுப்பாய் கேஸ் போடுவதில் தீவிரமானார்."மேடம்,திட்டமிட்டு செய்தது என கேஸ் போட்டு ஒரு ஆறு மாதமாவது உள்ளே தள்ளி விடலாம் " என்றார்.
அடுத்த அறையில் அந்தப் பையனினிடம் விசாரணையும் அவனது பதில்களும் இந்த அறையில் தெளிவாக கேட்டன.


இன்ஸ்பெக்டர் " நாயே ...சொல்லேண்டா ...ஏன் இப்படி செய்தாய் " என்றார்


அந்தப் பையன் சன்னமான குரலில் ஹிந்தியில் பின்வருமாறு சொன்னான்.
"ஐயா, நான் நடுத்தர சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.கஷ்டப்பட்டு பி.ஏ வரை படிக்க வைத்தனர்.வீட்டில் புதிதாக கல்யாணமான அண்ணன்,அண்ணி.வயதான தாய் தந்தை இவர்களுடன் படுதா போட்டு பிரிக்கப்பட்ட ஒரே அறையில் படுக்கை.

மனதுக்குள் ஆயிரம் வாலிப கனவுகளை, உடலில் இளமை வேதனைகளை சுமந்து கொண்டு வேலையும் கிடைக்காமல் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்பது தெரியாமல் தினம் பாதி ராத்திரியில் படுதாவிற்கு அந்தப் பக்கமிருந்து கேட்கும் வளையல் ,மெட்டி ,சிணுங்கள் சத்தங்களால் சலனப்பட்டு தினம் தினம் சுய பச்சாதாபத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்.


சில சவடால் நண்பர்கள் பெண்களை இணங்க வைக்க வேண்டுமானால் முதலில் நீயாக உன் விருப்பத்தை அவர்களிடம் செயலில் காட்ட வேண்டும். பெண்கள் முதலில் விருப்பமில்லாதது போல் நடந்தாலும் பின் பணிந்து விடுவார்கள் என்றும் மற்றும் இது போன்று அவர்கள் நிகழ்த்திய சாகசங்களை சொல்லும் போது இப்படி ஏதும் செய்யாத ,அனுபவமில்லாத என்னை தினம் தினம் கேவலமாகப் பேசி இகழும் நண்பர்களிடம் எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் ஒரு நொடி சலனத்திலும் இவ்வாறு செய்து விட்டேன். இதனால் ஜெயிலுக்குப் போய் வேலை கிடைக்காமல் போனால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை " என்று அழுதான்.


இதைக் கேட்ட நந்தினிக்கு "திக்"கென்றது.இவன் ஏற்கனவே ஒரு பாதி செத்த பாம்பு . சமுதாயத்தால் மறுபடி மறுபடி பலமுறை அடிக்கப் பட்டு சொந்தமாக நல்லது கெட்டது கூட தெளிவாக சிந்திக்கத் தெரியாமல் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடக்கும் ஆயிரக் கணக்கான பாம்புகளில் ஒன்று . ஏதோ ஒரு சந்தர்பத்தால் தேங்கிக் கிடந்த ஆக்ரோஷத்தில் ஒரு கணம் படமெடுத்து விட்டது.இதை மேலும் மேலும் அடித்துதான் நமது தன்மானத்தை திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டுமா? சமுதாயம் மாறி மாறி அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட வலியினால் ஒரு கணம் படமெடுத்து விட்டது உண்மையிலேயே பாம்பின் குற்றம் தானா ? அதை மேலும் அடித்து துன்புறுத்தி கொல்வது சரியான முடிவுதானா ?


அதே சமயம் தனக்கு எற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்காமல் வாய் மூடி மௌனமாக போனால் இது வாழ்நாள் பூராவும் ஒரு கெட்ட கனவாக , முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்..இது போல தினம் தினம் பெண்களுக்கெதிராக நடக்கும் கோடானு கோடி தவறுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். பெண் என்ற முறையில் அதுவும் படித்த ,சுய சிந்தனையுள்ள பெண் என்ற முறையில் தன்னைத்தனே மேலும் இழிவு படுத்திக் கொள்ளும் செயலாகி விடும்...என்று குழப்பமாக யோசித்தாள்.


கையில் புகார் எழுதிய காகிதம் காற்றில் படபடத்தது.புகாரை வாங்கிப் பதிய அடுத்த அறையிலிருந்து இன்ஸ்பெக்டர் வரும் காலடிச் சத்தம் கேட்டது.


நந்தினி ......"என்ன செய்யப் போகிறாள் "

பின்குறிப்பு:

இன்ஸ்பெக்டர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த போது நந்தினி அங்கே இல்லை.

நாலாக மடிக்கப் பட்ட காகிதம் மேசை மேல் காற்றில் பட படத்தது.இன்ஸ்பெக்டர் அதை எடுத்து பிரித்தார் ..அதில் ..


"இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு,

நான் புகார் எழுதும் போது, அடுத்த அறையில் உங்கள் விசாரணை உரையாடல் காதில் விழுந்தது.அவன் சொன்ன பதில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

நான் இந்தப் புகாரை பதிவு செய்து அவனுக்கு சட்டத்தின் படி தண்டனை வாங்கிக் கொடுப்பதால் நாட்டில் மற்றவர் இது போன்ற தவறை செய்யாமல்இருந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது.அப்படி இருப்பின் தண்டனை அளிக்கப் பட்ட அனேக குற்றங்கள் நாட்டில் திரும்ப நடை பெறக் கூடாது.ஆனால் அவ்வகைக் குற்றங்கள் தினமுக் நடந்து வருகின்றன.தண்டனை அதிகமாக அதிகமாக குற்றவாளிகள் மேலும்நூதன முறையில் பிடிபடா வண்ணம் யோசித்து குற்றம் செய்ய துணிகின்றனர்.அல்லது பிடி பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டுதப்பிக்க முயல்கிறார்கள்.

ஆனால் அவன் சொன்ன காரணங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் அவனை மன்னித்து அதை அவனுக்கு தெரியுமாறுசெய்தால் கண்டிப்பாக இவன் திருந்தி விடுவான், இந்த மாதிரி தவறை வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் திரும்ப செய்ய மாட்டான் என எனக்கு தோன்றுகிறது.

எனவே சட்டத்தின் மூலம் பலரை திருத்த முயல்வதை விட மனிதாபிமானத்தால் கண்டிப்பாகஇவன் ஒரே ஒருவனைக் கூட நல்வழிப்படுத்தினால் அதுவே மற்ற பெண்களுக்கு நான் செய்யும் உபகாரமாக இருக்கும் என தோன்றுகிறது.எனவே நான் புகார் செய்யும் எனது எண்னத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.

உங்கள் நேரத்தை விரயம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.... இப்படிக்கு...நந்தினி " என எழுதியிருந்தது.


இன்ஸ்பெக்டருக்கு ஏனோ நேரம் விரயமானதில் கோவம் வரவில்லை.அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான் என்றே தோன்றியது.

திறந்திருந்த கதவு வழியாக

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை

சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்தடுத்துக் கொண்டே இருக்குது,

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே... பாப்பா ... திருடாதே "

பட்டுக்கோட்டையின் பாட்டு மிதந்து வந்து அவரை புன்னகைக்க வைத்தது.

கதை முற்றும்.

By அன்புடன்...ச.சங்கர்

Friday, July 22, 2005

இரண்டு கோப்பை தேநீர்

ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டவரா நீங்கள்?

அப்ப மேல படியுங்க.

ஒரு தத்துவ பேராசிரியரிடம் மாணவர்கள் சொன்னார்கள்"ஐயா,நேரமின்மையே மிகப் பெரிய பாரமாக எங்களை அழுத்துகிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டோம்.சொந்த வேலைகலையோ குடும்பத்தையோ கவனிக்க நேரம் கிடைப்பதே இல்லை.இதுவே பெரும்பாலானோரின் தலையாய பிரச்சினை"என்று கூறினர்.
அந்த ஆசிரியர் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை.பிறகு ஒரு பெரிய காலி ஜாடியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.ஒரு மாணவனை கூப்பிட்டு கால்·ப் (GOLF)பந்துகளால் அந்த ஜாடியை நிரப்பும்படி சொன்னார்,அவனும் அவ்வண்ணமே செய்தான்.
பின்னர் அவர் மாணவர்களை பார்த்து "ஜாடி நிரம்பி விட்டதா" என்று கேட்டார்.அவர்கள் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் ஒரு பெட்டி நிறய கோலி குண்டுகளை எடுத்து அந்த ஜாடியில் போட்டார். ஜாடியை லேசாக அசைக்க கோலிகள் கால்·ப் (GOLF)பந்துகளின் இடைவெளிகளை சென்று நிரப்பின.மாணவர்களை பார்து "இப்போது ஜாடி நிரம்பி இருக்கிறதா" என்று கேட்டார். அவர்கள் மீண்டும் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் புன்முறுவலுடன் ஒரு பெட்டி நிறைய குறுமணலை எடுத்து ஜாடியில் போட்டார்.ஜாடியை லேசாக அசைக்க மணல் கோலிகளின் இடைவெளிகளில் சென்று நிரம்பியது.மாணவர்களை பார்த்து ஜாடி நிறம்பி விட்டதா என்று கேட்டார்.அவர்கள் மீண்டும் ஆம் என்றனர்.
ஆசிரியர் மேஜைக்கடியில் வைத்திருந்த இரண்டு கோப்பை தேநீரை ஜாடிக்குள் ஊற்றி மணல் துகள்களுக்கிடையிலான வெற்றிதத்த நிறப்பினார்.வகுப்பில் சிரிப்பலை அடங்கிய பின் ஆசிரியர் பின் வருமாறு சொன்னார்.
"மாணவர்களே இதிலிருந்த்து நான் உங்களுக்கு உணர்த்த விரும்புவது என்னென்றால் இ¢ந்த ஜாடி உங்கள் வாழ்க்கையை குறிக்கிறது.கால்·ப் பந்துகள்தான் முக்கியமான வேலைகள்-கடவுள்,குடும்பம்,குழந்தைகள்,தேக ஆரோக்கியம்,நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு,கலை..போன்றவை.
வாழ்கையில் இவை தவிர மற்ற ஒன்றும் இல்லாமல் தொலைந்து போய் விட்டால் கூட வாழ்க்கை முழுமையானதாகவே இருக்கும்(கால்·ப் பந்து நிரம்பிய ஜாடி போல)
கோலிகுண்டுகள் உன்களுக்கு தேவையான விஷயங்களை குறிக்கும்-வேலை,வீடு,வாகனம் போலமணல் துளிகள் உஙள் வாழ்க்கையின் மற்ற எல்லா சின்ன சின்ன விஷயங்கள் போல.
"நீங்கள் ஜாடியில் முதலில் மணலைப் போட்டால், கோலிகளுக்கோ அல்லது பந்துகளுக்கோ இடமில்லாமல் போய்விடும்.நீங்கள் சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் நேரத்தைவிரயம் செய்தால் பின் அத்தியாவசியமான அதி முக்கியமான வேலைகளுக்கு நேரமில்லாமல் போய் விடும்.உங்கள் சந்தோஷத்துக்கு எது அதி முக்கியமானதோ அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள்.உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்,மனைவி / கணவனுடன் நேரம் செலவழியுங்கள், தேக ஆரோக்யத்த்ற்கான முன்னெச்சரிக்கை மருத்துவ சோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.கால்·ப் பந்துகளில் கவனம் செலுத்துங்கள்,மணல்துகள்களில் அல்ல.அதற்க்கேற்றவாறு உங்கள் நேரத்தை முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என் முடித்தார்.
ஒரு மாணவி எழுந்து "ஐயா...அந்த இரண்டு கோப்பை தேநீர் எதைக் குறிக்கிறது" என கேட்டார்.
பேராசிரியர் புன்முருவலுடன் "இதை நீ கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்சியளிக்கிரது.நமது வாழ்க்கை எவ்வளவு தான் முழுமையானதாகவும்,நேரமற்றதாகவும் தோன்றினாலும் எப்படி நிரம்பிய ஜாடியினால் இரண்ட் கோப்பை தேநீரை மேலும் உள் வாங்க முடிந்ததோ அப்படி நாமும் இனிய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு கோப்பை தேநீர் அருந்த நேரம் ஒதுக்க முடியும்" என்றார்.
அன்புடன்...ச.சங்கர்

Thursday, July 21, 2005

பாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்

தலை நகர் டில்லியில் திரும்பவும் நேற்று ஒரு வன்புணர்தல் (Rape) சம்பவம் அரங்கேறி யுள்ளது.
மாயாபுரி என்ற இடத்தில் அதிகாலை நாலரை மணியளவில் ஒரு பெண்ணை பலவந்தமாக காரில் கடதிய மூன்று பேரால் இந்த சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது. தடுக்க முயன்ற அப்பெண்ணுடன் சென்ற மற்ற இரண்டு பெண்கள் மூர்க்கமாக தாக்கப் பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் அந்தப் பெண் அந்த மூன்று படு பாதகர்களால் ஓடும் காரில் வன்புணரப்பட்டு பறகு நடுத் தெருவில் தூக்கி வீசப் பட்டிருக்கிறாள்.
உடனே அனைத்து டில்லி பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு இதப் பற்றி எழுதியிருக்கின்றன. அதில் அந்தப் பெண் எந்த வழியாக எப்படி நடந்து போனாள், எப்படி காரி வந்தவர்கள் அவளை பலவந்தப் படுத்தினர் அவளுடன் சென்று கொண்டிருந்த பெண்களை எப்படிதாக்கினர் என நேரில் பார்த்தது போல் படம் போட்டு விளக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம் மே மாதம் 9 ஆம் தேதி மாயபுரிக்கு அருகிலேயே "தௌலாகுவான்" என்ற பகுதியில் நடந்தேறியது. அதிகாலை 2.30 அளவில் கல்லூரிப் பெண் ஒருவரை காரில் பலவந்தப் படுத்தி நான்கு கயவர்கள் சுமார் 2 மணி நேரம் ஓடும் காரில் வன்புணர்ந்து பின் ரோடில் வீசி விட்டு சென்று விட்டனர்.இதைப் போல் நிறைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை சொல்லிக் கொண்டே போகலாம் .

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

இதை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் ஒரு சில நாட்களுக்கு ஆஹா ஓஹோ என கூக்குரலிடுவதும் சில நாட்களில் வேறு நிகழ்வு கிடைத்தவுடன் இந்த விஷயத்தை அம்போ என விட்டு விட்டு அடுத்ததற்கு தாவி விடுவதும் எந்த விதத்தில் இவர்களது பத்திரிக்கை தர்மத்தையும், நியாயமாக இருக்க வேண்டிய சமூக பொருப்புணர்சியையும் நியாயப் படுத்த முடியும்?
பத்திரிகை விற்பனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு "investigative journalism" "adventurejournalism " என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பெரும்பாலும் கீழ்த்தரமான ரசனைகளுக்கே தீனி போடும் இந்த பத்திரிக்கைகளும்,பிறகு சில நாட்களில் அதைப் பற்றிய மக்களின் படிப்பார்வம் குறைந்து விட்டதாக தோன்றினால் அதை அப்படியே அம்போ என விட்டு விட்டு அடுத்த காசு பண்ணக் கூடியநிகழ்விற்கு தாவி விடுகின்றன.(சிறிய,பெரிய -நாள் ,வார,மாத ஏடுகள் பெரும்பாலானவை இதில் அடங்கும்) இப்படிப்பட்ட பத்திரிகைகளின் தரம் கெட்ட போக்கும் இந்த மாதிரி சீரழிவுகளுக்கு முக்கிய காரணம் என்பது எனது கருத்து.
அன்புடன்...ச.சங்கர்

Monday, July 18, 2005

படிச்சிட்டு சிரிங்க....காசா? பணமா?-------2

மேலதிகாரியிடத்தில் அன்பு (Love for Boss )
--------------------------------------------------------

அனைத்து மேலதிகாரி விசுவாசிகளுக்கும் சமர்ப்பணம்

ஒரு கம்பனியில் வேலை பார்ப்பவர் தனது மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்தார்.ஆனால் எடுத்ததோ மேலதிகாரியின் மனைவி "ஐயோ , அவர் போன வாரமே இறந்து விட்டாரே" என்றார்

மறுநாளும் அவர் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.அதற்கு மேலதிகாரியின் மனைவி " நேற்றே சொன்னேனே... அவர் போன வாரம் இறந்து விட்டாரென்று" என்றார்

மூன்றாவது நாளும் அந்த ஆள் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.கடுப்பாகிப் போன மேலதிகாரியின் மனைவி "யோவ், நான் ஏற்கனவே ரெண்டு தடவை உனக்கு சொல்லி விட்டேன்.என் கணவர் அதாவது உன் மேலதிகாரி போன வாரமே இறந்து விட்டாரென்று? பிறகு தினமும் ஏன் போன் செய்து கேட்கிறாய்?ஏன்... .. ஏன் .....ஏன்....? என்று கத்தினார்.

அவன் சிரித்துக் கொண்டே "ஏனென்றால் நீங்கள் சொல்லும் விஷயம்(பதில்) எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது?! "என்றான்.

படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?

இன்னும் ஒரு சர்தார்ஜீ நகைச்சுவை
---------------------------------
ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நி¢ருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில்வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

Saturday, July 09, 2005

அவள் கேட்ட மூன்று வரங்கள்

ஆங்கிலத்தில் படித்தது.... நன்றாக இருப்பதாக பட்டதால் தமிழ்படுத்தி இருக்கிறேன்


ஒரு ஊர்ல ஒரு மாது (அதாங்க லேடி )இருந்தாங்களாம்.ஒரு நா காட்டு வழியா போய்க்கிட்டு இருக்கும் போது (ஏம்போனாங்கன்னு கேட்காதீங்க) ஒரு தவளை கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறத பார்த்தாங்க.அந்த தவளை ஒரு மந்திரவாதி தவளையாம்.

"என்னய இந்தக் கூண்டுலேர்ந்து வெளியேத்தி காப்பாத்துனீன்னா ஒனக்கு மூணு வரம் தருவேன்" அப்படீன்னுச்சாம்.அந்த மாதுவும் சரின்னுட்டு அதை கூண்டுலேர்ந்து காப்பாத்தினாங்களாம்.

தவளையும் "ரொம்ப டாங்சு... ஆனா வரத்துல ஒரு கண்டிசன் இருக்கு,அவசரத்துல சொல்ல விட்டுட்டேன் " அப்படீன்னுச்சாம்.அந்த அம்மாவும் இது என்னடா கெரகம் புடிச்சதா இருக்குன்னு நெனச்சுக்கிடே"சரி,சொல்லித் தொலை" அப்படீன்னாங்களாம்.

"நீங்க எது கேட்டாலும் ஒங்க புருஷனுக்கு அது பத்து மடங்கா கிடைக்கும் அதான் கண்டிசன் " அப்படீன்னுச்சாம்."சீ...இவ்வளவுதானா ஜுஜூபி "அப்படீன்னுட்டு அந்த அம்மா வரம் கேட்க ஆரமிச்சாங்களாம்.

""வரம் நம்பர் ஒன்"" " நான் ஒலகத்திலேயே ரொம்ப பேரழகியா ஆயிடணும்" அப்படீன்னாங்களாம்.

தவளை "ஒம்பாட்டுக்கு கேக்குரயே...ஒம் புருசன் ஒன்னய விட பத்து மடங்கு பேரழகனா ஆயிருவான்,அப்புறம் ஒலகத்துல மத்த எல்லா பொண்ணுன்களும் அவனத்தான் சுத்துவாங்க " அப்பிடீன்னுச்சாம்.


அதுக்கு அந்த பொம்பளை"பரவால்லியே. யாரு அவரை சுத்தினாலும் ஒலகத்துலியே ரொம்ப அளகான பொண்ணா நாந்தான இருப்பேன். அதுனால அவரு என்னியதா சுத்துவாரு " அப்படீன்னாக.

"புத்திசாலி பொண்ணா இருக்கியே " அப்படீன்னுட்டு தவளையும் வரத்த தந்திருச்சு.


"" வரம் நம்பர் ரெண்டு""" நா ஒலகத்திலேயே பெரிய பணக்காரியா ஆயிடணும் " அப்படீன்னாங்களாம்.

ஒடனே தவளை ஏதோ சொல்ல ஆரம்பிக்க " தெரியும்,தெரியும், எம் புருசன் என்னய விட பத்து மடங்கு பணக்காரனாயிருவாரு.அதத்தான சொல்லப் போர ? புருசம் பொண்டாட்டிக்குள்ள யாருக்கிட்ட அதிகமா பணம் இருந்தா இன்னா?அவரு பணம் என்னுது...எம் பணம் அவருது " அப்படீன்னுச்சாம். வரம் கெடச்சது.


"" வரம் நம்பர் மூணு""" எனக்கு லேசா நெஞ்சடைப்பு (அதாங்க ஹார்ட்டு அட்டாக்கு) வரணும்" அப்படீன்னு கேட்டுட்டு சிரிச்சிச்சாம் அந்த பொம்பள.


தவளை " ஆஹா...கிளம்பிட்டாய்ங்கய்யா ...கிளம்பிட்டாய்ங்கய்யா ...பயங்கர வெவரமால்ல இருக்காங்க அப்படீன்னு வடிவேலு ஸ்டயிலில நெனச்சிச்சாம்.


இந்தக் கதையிலேருந்து இன்னா தெரியுது :"பொம்பளைங்க பயங்கர புத்திசாலிங்க...அவங்கோ கிட்ட வம்பு தும்பு வச்சுக்காதிங்கோஓஒ...


இத்தப் படிக்கும் பெண்மணிகளே...தாய்மார்களே..இந்த லட்டரை படிக்கிறதை இத்தோட நிப்பாடிட்டு சந்தோசமா போய்ட்டு வாங்க.


இத்தப் படிக்கும் ஆண்களே ...அப்பாவிகளே .... அப்டீக்கா கீழ போய் தொடர்ந்து படிங்க.
>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>
மூணாவது வரத்துனால அந்தம்மா புருசனுக்கு அந்த்ம்மாவுக்கு வந்த லேசான ஹர்ட் அட்டக்க விட பத்து மடங்கு லேச ஹார்ட் அட்டாக் வந்திச்சாம்.


இதுலேர்ந்து இன்னா தெரியுது :பொம்பளைங்க உண்மையிலேயே புத்திசாலிங்க இல்லை. ஆனா அப்படி நெனைச்சிக்கிட்டு இருக்காங்க,..... அவங்க பாட்டுக்கு அப்படியே நெனைச்சுக்கிட்டு இருக்கட்டும்.


எம்மா..இதப்படிக்கிற நீங்க ஒரு பொண்ணுன்னா .... சொல்லச் சொல்ல கேக்காம இதுவரைக்கும் படிச்சிட்டு வந்திருக்கியளே.


இதுலேந்து இன்னா தெரியுது.....பொம்பளைங்க எப்பவுமே சொன்ன பேச்ச கேக்கவே மாட்டாங்க அப்படீன்னு நிரூபணம் ஆவுதில்ல....


ஐய்யயோ...பொம்பளைங்கள்ளாம் ஒண்ணா சேர்ந்து அடிக்க வாராங்களே....விடு ஜூட்...


அன்புடன்....ச.சங்கர்


முக்கியமான பின்குறிப்பு : தாய்க்குலமே,சகோதரிகளே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடும்மில்லை.சிரிப்புக்காக மட்டுமே எழுதப் பட்டது .இருந்தும் மனம் புண்பட்டிருப்பின் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன். ( consolation : இந்தக் ஜோக்கில் பெண்ணினிடத்தில் ஆணை வைத்து எழுதினாலும் சரியாக வரும் !!!!)

Friday, July 08, 2005

இதப் படிங்க மொதல்ல...முற்றிலும் உண்மை

இந்திய பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளமும் அரசு சலுகைகளும்
___________________________________________________________________________________

மாதாந்திர சம்பளம் : ரூபாய் 12,000

தொகுதிக்கான மாதாந்திர செலவுத்தொகை : ரூபாய் 10,000

அலுவலக மாதாந்திர செலவினங்களுக்காக : ரூபய் 14,000

பயண சலுகை (கி.மி க்கு ரூ 8/- வீதம்) : ரூபய் 48,000
(ஒரு முறை தில்லி சென்று திரும்ப 6000 கி.மி க்கு)

பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினப்படி : ரூபய் 500


வீட்டில் மின்சாரக் கட்டணம் : 50,000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லை

உள்ளூர் தொலைபேசி வசதி : 1,70,000 கால்களுக்கு(calls) கட்டணமில்லை

இரயிலில் முதல் வகுப்பு குளிர் சாதன வசதி : கட்டணமில்லை
(இந்தியா முழுக்க) எத்தனை முறை பயணித்தாலும்)

ஆகாய விமானத்தில் (business class) உயர் வகுப்பு பயணம் : இலவசம்(வருடத்திற்கு 40 முறை)(துணைவியாரோ அல்லது உதவியாளரோ உடன் செல்லலாம்)

டெல்லியில் பாரளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கும் வசதி : இலவசம்

ஆக மொத்தம் ஒரு உறுப்பினருக்கான வருடாந்திர செலவு : ரூபாய் .32,00,000

5 வருடத்திற்கான செலவு : ரூபாய் .1,60,00,000

534 உருப்பினர்களுக்கான 5 வருடத்திற்கான செலவு : ரூபாய் : 8,54,40,00,000

அதாவது கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.
(அல்லாம் நாம குடுக்கற வரிப் பணம்தானுங்கோவ்)

இவர்கள் அனைவரும் தங்களது சொந்த தகுதியின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு போனவர்கள் அல்ல.இந்திய மக்களால்,உலகிலேயே மிகப் பெரியது என போற்றப் படும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

போய் என்ன செய்கிறார்கள் ????

போகும் அவர்களுக்கும் ...படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்.

அன்புடன் ....ச.சங்கர்

நான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி

கல் பானை சோழிக்கல் -- முடிவு பகுதி -
கடைசியில் பொன்னம்மாவிற்கு என்ன ஆச்சு ?


இந்தப் பதிவிற்கு முன் என்னுடைய போன பதிவைப் போய் ஒரு எட்டு படித்து விட்டு வந்துஇதைத் தொடருங்கள்....அந்தக் கதையின் முடிவுப் பகுதிதான் இது. நன்றி.
வேலைப் பளுவில் பொன்னம்மாவை மறந்தே போனேன்.இன்று காலை திடிரென்று ஞாபகம் வந்தது.அடடா பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லி மூன்று நாளாயிருக்குமே என்ன ஆயிற்றோ என்று அரக்கப் பரக்க அந்த கிராமத்திற்க்கு ஓடினேன்.வழியில் ஆற்றங்கரையிலேயே பொன்னம்மாவை பார்த்து விட்டேன்.ஓட்டமும் நடையுமாக அவள் அருகில்சென்றேன்.
பொன்னம்மா என்னை கவனிக்கவில்லை.கவனமாக பானையை துலக்குவதில் ஈடுபட்டிருந்தாள்.கழுத்தில் புதிதாக ஏறிய தாலி மஞ்சள் பளபளப்புடன் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதை அறிவித்தது.
நான் "பொன்னம்மா " என்று கூப்பிட்டேன்.
பொன்னம்மா திரும்பிப் பார்த்து "ஐயா நீங்களா?வாங்க "என்றாள்
"பஞ்சாயாத்தில் என்ன நடந்தது? சோழிக்கல் எடுத்தியா?என்ன கல்? ... "என்று மூச்சு விடாமல் சராமாரியாகக் கேட்டேன்.
என்ன நடந்தது....இனி பொன்னம்மா வார்த்தைகளில்
"கன்னய்யனும் அவன் ஆளும் பேசுனதக் கேட்ட அன்னையிலிருந்து யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல ஆயிடுச்சு.அப்பதான் ஆனந்து,நோநோ யெல்லாம் வலைப்பூவுல பின்னூட்டமா சொல்லியிருந்த முடிவெல்லாம் படிச்சேன்.அதுல ஏதாவது யோசனைய செயல் படுத்தலாம்னு இருந்தேன்.ஆனா நோநோ அவுக சொன்ன மாதிரி என்னால ரெண்டு வெள்ளைக் கல்லை பானைக்குள்ள யாருக்கும் தெரியாம போட முடியல.இப்படியே அமாவசையும் வந்துடிச்சு.பஞ்சாயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஆனந்து அவக எளுதுனது படிச்சேன்.ஒரு கல்ல எடுத்து முளுங்கிட்டு பானையிலிருக்கும் அடுத்த கல்ல வச்சு நான் எடுத்த கல்ல முடிவு பண்ணிக்கங்க அப்படின்னு சொல்ல சொல்லியிருந்தாரு.நானும் அடடா இதுல்ல நல்ல யோசனை...அப்படின்னு நெனச்சு அப்படியே செய்யலாமுன்னுட்டு முடிவெடுத்துட்டு போனேன்.
பஞ்சாயத்துல கூட்டமான கூட்டம்.எல்லா சனமும் வேடிக்கை பார்க்க வந்துருச்சுங்க.
பூசாரி பூசை போட்டுட்டு "ஆத்தாள மனசுல நெனச்சுக்கிட்டு தைரியமா ஒரு கல்ல எடு தாயி...எல்லாம் நல்லதே நடக்கும்" அப்படின்னு சொல்லிக்கிட்டே என்ன உத்துப் பாத்தாரு.
நானும் ஒரு கல்ல எடுத்து வாயில போட்டு முளுங்கிட்டேன்.
அப்ப பஞ்சாயத்து பெரியவரு கல்லக் காட்டு பொன்னம்மான்னு சொன்னாரு.நானு ஆனந்து எளுதுனது மாதிரியே " பானையிலிருக்கிற கல்லைப் பாத்து னான் எடுத்த கல்லை முடிவு பண்ணிக்கங்க" அப்படீன்னு சொன்னேன்.
பூசாரியும் கன்னையனும் தேள் கொட்டுன திருடங்க மாதிரி முளிச்சாங்க.
கன்னைய்யன் பூசாரிய "இரு ஒன்னிய கவனுச்சிக்குறேன்" அப்படீங்கற மாதிரி ஒரு மொர மொரச்சாரு.
பூசாரி பதறியடுச்சுக்கிட்டு எங்கிட்ட வந்து "அதல்லாம் பானைக்குள்ளார இருக்குற கல்லைப் பாக்கக் கூடாது.வழக்கமில்லை சொன்னாக் கேளு...ஆத்தாவா வந்து அருள் வாக்கு சொல்ரேன்."அப்படீன்னாரு.
ஊருல எல்லாம் பூசாரி சொல்ரதுக்கு தலையாட்ட அரமிச்சாங்க.
பஞ்சாயத்து பெரியவரு "இப்ப என்ன செய்யிறது.அவ சொன்ன மாதிரியே அடுத்த கல்லை எடுத்து பார்த்துர வேண்டியதுதான்..பூசாரி நீரே அடுத்த கல்லை எடுத்து சபையில காட்டும்" அப்படீன்னு சொன்னாங்க.
எனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம்..ஆஹா..யோசனை பலன் கொடுத்துடிச்சு ...அப்படீன்னு நெனைச்சேன்.கன்னையன் முகத்தை தொங்கப் போட்டுக் கிட்டு சோகமா நின்னாங்க.நான் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே தலைய குனுஞ்சிக்கிட்டுநின்னேன்.
பூசாரி...பாவி ...பாவி.. அப்படீன்னு சொல்லிக்கிட்டே பானைகுள்ள கைய விட்டு அடுத்த கல்லை எடுத்தாரு.கண்ணுலருந்து தாரை தாரையாதண்ணி ஊத்துது.
ஊர்ப் பெரியவரு "பூசாரி சீக்கிரம் கல்லைக் காட்டுவே" அப்படீன்னு அதட்டினாரு.
பூசாரி கைய நீட்டினாரு.
"கருப்புக் கல்லுதான இருந்தது " நான் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவை கேட்டேன்.
பொன்னம்மா ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்து விட்டு "இல்லிங்க...வந்தது வெள்ளைக் கல்.... என்றாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஒரு நிமிடம் தலை சுற்றியது."என்னது...வெள்லைக் கல்லா?" என்றேன்.
" இப்படித்தாங்க ...ஊர்க் காரவுகளெல்லாம் கல்லைப் பாத்துட்டு ...வெள்ளைக் கல் .... வெள்ளைக் கல்... அப்படினுட்டு கத்துன போது ஒரு நிமிடம் எனக்கும் ஒண்ணுமே புரியல".கன்னையனும் வாயடச்சுப் போய் நின்னுட்டாக.நா கூட என்றென்றும் அன்புடன் பாலா அவுக சொன்ன மாதிரிஆத்தாதான் வந்து கல்லை மாத்திடிச்சோன்னு நெனைச்சேன்"
பஞ்சாயத்து பெரியவரு "அப்படீன்ன்னா பொன்னம்ம எடுத்தது கருப்புக் கல்லு...அதனால ஆத்தா மனசுப் படி பொன்னம்மா கன்னையனகட்ட வேண்டியது. கல்யாணம் நாளைக்கு கோயில்ல நடக்கும் .வீரய்யன் மாமனாராயிட்டதால கடன கன்னையன் திரும்ப கேக்கக் கூடாது "அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டாரு.
தீர்ப்பக் கேட்டு நான் மயக்கமா சாஞ்சுட்டேன்.என்ன பக்கத்துலருந்த வீட்டுல போட்டுட்டு பூசாரிய விட்டு (அவர்தான ஊர் வைத்தியரு)பார்க்கச் சொன்னாங்க.நான் கண்ணு முளிச்சப்ப பூசாரி என் பக்கத்துல சோகமா நின்னுக்கிட்டு இருந்தாரு.அறைல வேற யாரும் இல்ல.நான் "பூசாரி,கன்னையன் சொன்னானுட்டு பானையில ரெண்டும் கருப்பு கல்லுதான போட்டீங்க..பின்ன எப்படி? என்று கேட்டேன்.
பூசாரி"பாவி மகளே ...கன்னையன் பானையில ரெண்டும் கருப்பு கல்லு போடச் சொன்னது வாஸ்தவம்தான்.ஆனா நான் என் கடனுக்காகஒன்னோட வாள்க்கைய நாசம் பண்ணக் கூடாது அப்படீன்னுட்டு ரெண்டயுமே வெள்ளைக் கல்லாப் போட்டு வச்சேன்.அளவுக்கு மீறி யோசிச்சு காரியத்தை கெடுத்திட்டயே..நான் நல்லதுதான் நடக்கும் அப்படீன்னு சூசகமா சொன்னேனே..கேக்காம போயிட்டியே பாவீன்னாரு.
கொஞ்ச நேரம் சும்மா இருந்த பொன்னம்மா மெதுவாக "நா கன்னையனுக்கு வாக்கப் படணுமின்னுட்டு இருக்கு.என்ன செய்ய" என்றாள்.
நான் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.அப்போது அங்கு வந்த கன்னையன் "என்ன புள்ள..போகலாமா" என்றான்
"இதோ வந்துட்டேன்...மச்சான் " என்றவாரே என்னைப் பார்த்து முறுவலித்தாள்.போகிற போக்கில் "ஆனா ஒண்ணுங்கையா...நாம ஆசைப் படரவன விட நம்ம மேல ஆசை வக்கிரவன கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாதான் இருக்கும் " என்று சொல்லி விட்டு கன்னையனுடன் நடக்கலானாள்.
இதை உண்மையாக உணர்ந்து சொன்னாளா இல்லை சமாதானத்திற்காக சொன்னாளா என்று புரியாதவனாக நெடு நேரம் சிலையாக நின்றேன்.

அன்புடன்....ச.சங்கர்

Saturday, July 02, 2005

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்

ஒரு வித்தியாசமான கதை முயற்சி.

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்.

"கல்பானை சோழிக்கல்"

பொன்னம்மா அந்த கிராமத்தின் கனவு தேவதை என்று சொல்லக்கூடிய மாதிரித்தான் இருந்தாள்.சற்றே கருப்பானாலும் எடுப்பான தேகம்.களையான முகம்.பட்டாம் பூச்சி போல் படபடக்கும் கண்கள்.பொன்னம்மா அழகானவள் மட்டுமல்ல அதற்கேற்றாற் போல் புத்தி சாதுரியம் உள்ளவளும் கூட.

கன்னையனுக்கு அவள் மேல் ரொம்ப நாளாகவே ஒரு கண். கிராமத்திலேயே கொஞ்சம் பணம் காசுடன் வசதியாக வாழ்பவன்.மைனர்தனங்கள் கொஞ்சம் உண்டென்றாலும் ஒரேடியாக கெட்டவன் என்று சொல்லி விட முடியாது.சின்ன சின்ன சபலங்கள் உண்டென்றாலும் பெரிய தப்பெல்லாம் பண்ணும் அளவுக்கு தைரியம் கிடையாது. எவ்வளவோ தடவை பொன்னம்மாவின் தகப்பன் வேலுச்சாமியிடம் பொன்னம்மாவை பெண் கேட்டும் வேலுச்சாமி பிடி கொடுத்தே பேசவில்லை.

காரணம் வேலுச்சாமியின் அக்காள் மகன் அழகேசன்.அவன் கன்னையனைப் போல் பணக்காரன் இல்லை என்றாலும் ஓரளவு நிலம் வைத்து சொந்தமாக விவசாயம் பார்த்து கஷ்டமில்லாமல் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்தான். அழகேசன் பொன்னம்மாவிற்க்கு முறைப் பையன் என்பதாலும் பொன்னம்மாவிற்கும் அவன் மேல் கொஞ்சம் அபிமானம் உண்டென்று அரசல் புரசலாக பிறர் சொல்லி கேள்விப்பட்டதாலும் வேலுச்சாமி யோசித்துக் கொண்டிருந்தான்.

பொன்னம்மாவிற்கும் அழகேசனுக்கும் உடனடியாக பரிசம் போட்டு விடலாம் என்றால் அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. முன்பு வேலுச்சாமி விவசாய நஷ்டம் காரணமாக கன்னையனிடம் பெரும் தொகை கடனாக வாங்கி இருந்தான்.பரிசம் போடவோ அல்லது கடனை அடைக்கவோ அவனிடம் உடனடியாக பணம் இல்லை.

அந்த ஊரில் ஆண் பிள்ளையில்லாத கடனாளியான ஒருவர், தன் மகளுக்கு, கடன் கொடுத்தவர் தவிர வேறு ஒருவருக்கு பரிசம் போட வேண்டும் என்றால் கடன் கொடுத்தவரின் அனுமதி வேண்டும் என்பது கட்டுப்பாடு. கடன் கொடுத்தவர் சம்மதிக்காத பட்சத்திலும் அதே சமயம் அந்தப் பெண் கடன் கொடுத்தவரை மணக்க சம்மதிக்காத பட்சத்திலும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுதான் "கல் பானை சோழிக்கல் " போடுதல்.

அதாவது ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடத்தில் ஒரு கை மட்டுமே உள்ளே நுழையக் கூடிய சின்ன வாயுள்ள ஒரு கல் குடம் இருக்கும். ஊர்ப் பூசாரி கறுப்பு மற்றும் வெளுப்பு கலரில் கோலி அளவுள்ள ரெண்டு கூழாங்கல்லை ( சோழிக்கல்) பூஜையில் வைத்து பெளர்ணமி நாள் நள்ளிரவில் கல் பானையில் போட்டு அதன் வாயை மஞ்சள் துணி போட்டு கட்டி விடுவார்.அடுத்த அம்மாவாசையன்று ஊர் முன்னிலையில் அந்தப் பெண் கல் பானையில் இருந்து ஒரு சோழிக்கல்லை எடுக்க வேண்டும். எடுத்தது கருப்புக் கல்லாயிருந்தால் அந்தப் பெண் வாதியையே (கடன் கொடுத்தவர்) மணக்க வேண்டியது.வெள்ளைக் கல் என்றால் அந்தப் பெண் யாரை வேண்டுமானாலும் மணக்கலாம்.அவள் தகப்பன் கடனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இ.பி.கோ சட்டம், போலிஸ் எல்லாம் எட்டிப் பார்க்காத குக்கிராமமாகையால் இதுவே நடைமுறையாக இருந்தது.இடைப்பட்ட பதினைந்து நாளில் எதாவது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் "கல் பானை சோழிக்கல்" எடுப்பது தவிர்க்கப் படும்.
இப்படியாகத்தானே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பொன்னம்மா கல்யாணப் பிரச்சனை ஊர்ப் பஞ்சாயத்தின் முன் வந்து ஒரு சமாதானமும் ஆகாமல் " கல் பானை சோழிக்கல்" போட்டு விடுவது என்று முடிவாகியது.ஊர்ப்பூசாரி ஒரு பெளர்ணமி சுப யோக சுப இரவில் கோவிலில் அம்மன் முன் வைத்த சோழிக்கற்களை யாரும் பார்க்காமல் நள்ளிரவில் கல் பானையில் போட்டு மாலை மரியாதைகளோடு மஞ்சள் துணி போட்டு கட்டி வைத்து விட்டார்.
பொன்னம்மா தினமும் வயல்காட்டுக்கு போகும் பொழுது பஞ்சாயது கூடுமிடத்தை கடந்துதான் போக வேண்டும். கல் பானையைப் பார்க்கும் போதே அவளுக்கு தன் மற்றும் அப்பன் தலை எழுத்து பானைக்குள் ஒளிந்து கிடக்கிறதே என்று இருக்கும்.
இப்படியாக பத்து நாட்கள் போயிருக்கும்.
ஒரு நாள் அந்தியில் இருட்டிய பிறகு வயலில் இருந்து வீடு திரும்பும் போது திடீரென்று மழை சட சடத்தது. டக்கென ஒரு மரத்தோரம் ஒதுங்கிய பொன்னம்மாள் மாராப்பால் ஈரம் துடைத்தபடி நின்று இருந்த போது மரத்தின் அந்தப்பக்கமிறுந்து பேச்சரவம் கேட்டு அப்படியே அசயாது நின்றாள்.அந்தப் பேச்சில் பொன்னம்மா என்ற பெயர் அடி படவே உன்னிப்பாய்க் கேட்கலானாள்.கன்னையனும் அவன் கைத்தடிகளில் ஒருவனும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
கைத்தடி கேட்டான் "ஏண்ணே பொன்னம்மாவைக் கட்டிக்கிட ரொம்ப இஷ்டம்மாக இருந்தீங்களே.இப்ப கல் பானையிலிருந்து பொன்னம்மா வெள்ளைக்கல் எடுத்துட்டா என்ன செய்வீங்க ? என்றான்.
கன்னையன் ஒரு மாதிரியாக சிரித்து விட்டு "டேய் இது கூடவா நா யோசிக்காம இருந்திருப்பேன், பொன்னம்மா வெள்ளைக் கல்ல எடுக்க மாட்டா. எடுக்கவும் முடியாதுடா" என்றான்.
கைத்தடி ரொம்ப ஆச்சர்யமாக "எப்படிண்ணே இவ்வளவு உறுதியா சொல்றீங்க " என்றான்.
கன்னய்யன் "அடேய் இந்த பூசாரியும் என் கிட்ட கடன் வாங்கினவம்தானடா.ஆனா அது ஊர்ல யாருக்கும் தெரியாது .அதனால அவன மிரட்டி கல்பானைக்குள்ள ரெண்டயுமே கறுப்பு சோழியா போடச் சொல்லிட்டேன்.அப்புறம் எப்படிடா பொன்னம்மா வெள்ளைச் சோழிக்கல் எடுப்பா? என்னயக் கல்யாணம் கட்டாம இருப்பா? " என்று கேட்டான்.
இதைக் கேட்ட பொன்னம்மா அப்படியே விக்கித்துப் போய் நின்றாள்.முதலில் என்ன செய்வது என்றே ஒன்றும் தோன்றவில்லை.பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த படியே நடக்க லானாள். இந்த விஷயத்தை ஊருக்குள் சொல்வதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. பூசாரி தப்பு பண்ணி விட்டான் என்று நிரூபிக்கலாமே தவிர கன்னையன்தான் செய்யச் சொன்னான் என்று நிரூபிக்க முடியாது.அதனால் அவள் அப்பன் கடனுக்கு எந்த விடிவும் கிடையாது. அதனால் பஞ்சாயத்து அடுத்த பெளர்ணமியில் திரும்ப கல்பானை கட்டச் சொல்லும்.அதில் கறுப்புக் கல் எடுத்தாலும் கன்னையனைத்தான் கட்ட வேண்டும்.ஆனால் இந்த தடவை கல் எடுத்தால் கண்டிப்பாக கறுப்புதன் அப்புறம் கன்னையன்தான் கணவன் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடியே நடந்தாள்.
எது செய்தாலும் இன்னும் ஐந்து நாட்கள்தான் பாக்கி..........

இந்தக் கதையை ஆரம்பித்து விட்டேன். முடிக்கத் தெரியவில்லை .

வலைப்பூ வாசகப் பெருமக்களே / குழும நண்பர்களே இதன் முடிவு எப்படி இருக்கலாம் என்று யூகித்து எழுதுங்களேன்.நல்ல கற்பனைக்கு ஆயிரம் பொன் பரிசுன்னுலாம் அறிவிக்க மாட்டேன் . என் கிட்ட கிடையாது.ஒரு சபாஷ் அவ்வளவுதான்.
எழுதப் பட்ட முடிவுகளில் லாஜிக் இருக்க வேண்டும்.அதைப் பற்றி மற்றவர்கள் விமர்சிக்கலாம்.

பின் குறிப்பு : உண்மையில் பொன்னம்மாளுக்கு என்ன ஆயிற்றென்று அடுத்த பதிவில் சாவகாசமாய்.
அதற்குள் உங்களில் ஒருவர் சரியாக ஊகித்தாலும் ஊகிக்கலாம்.
எல்லாம் அவன் செயல்.

அன்புடன் ....ச.சங்கர்

Friday, June 17, 2005

"மெட்டி ஒலி" என்றொரு மூணரை வருட அவஸ்த்தை

சனிக்கிழமையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
என்னா விஷேஷம் தெரியுமா?என்னை நொந்த நூலாக்கிய, நாட்டு மக்களை பாடாய்ப் படுத்தி வந்த "மெட்டி ஒலி" மெகா அறுவை முடியப் போகிறது.

இந்த நேரத்தில் இது பற்றி சில கருத்துக்கள்- நம்மகிட்டதான் இதுக்கு பஞ்சமே இல்லயே.

காட்சி -1 நியூ ஜெர்சி, அமெரிக்கா

சமீபத்தில் குழந்தை பெற்ற என் தங்கையை பார்க்க + உதவிக்கு என் அம்மா அமெரிக்கா பயணப் பட்டார்.அச்சரவாக்கம் தாண்டாத அம்மா அமெரிக்கா தனியாக போகிராரே எப்படி சமாளிப்பார் என்று எனக்கு கொஞ்சம் பயம்தான்.ஒரு வழியாக இனிதே போய் சேர்ந்தார்.முதல் தடவையாய் வெளி நாடு போயிருக்கிராரே என்று போனில் அம்மா ..அங்க ஊர், வசதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.நல்ல வசதியாக இருக்கிறது.டி.வி யில் "மெட்டி ஒலி" யெல்லாம் வருகிறது தெரியுமா என்றார்.அம்மாவின் வயது 65.அமெரிக்காவின் வளர்சி /வசதியே டி.வி யில் "மெட்டி ஒலி"வருவதுவராததை வைத்து எடை போடப் படுவதை நினைத்து நொந்து நூலாகி போனை வைத்தேன்.

காட்சி -2 நியூ டெல்லி, இந்தியா

நல்ல கோடை காலமானதால் இரவு உணவுக்குப் பின் மனைவியுடன் பூங்காவில் சிறிது உலாவப் போவது வழக்கம்.அங்கு சற்றே அறிமுகமான ஒரு தமிழ் மூதாட்டி ஒருவர் இருந்தார்.அருகில் அவர் பேத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் மூன்று முறை வந்து மணி என்ன, மணி என்ன என்று கேட்டாள்.நான் ஏன் வீட்டில் அப்பா/அம்மா சீக்கிரம் திரும்பி வந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்டேன்.அதற்கு அந்த பாட்டி சீக்கிரம் திரும்பி வர கூடாது என்று அனுப்பினார்கள் என்றார்.ஆச்சரியமாக ஏன் என்றேன். 9 மணிக்கு வீட்டில் இருந்தால் டி.வி போட்டுக் கொண்டு "மெட்டி ஒலி" பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்.பார்க்க விடா விட்டால் ஒரே அழுகை என்றார்.சின்னக் குழந்தைதானே பார்த்து விட்டு போகட்டுமே என்றேன்.நீங்க வேற வயித்தெறுச்சலை கிளப்பாதீங்க.T.V. முன்னாடி உட்கார்ந்து கொண்டு " என்ன ரவி இன்னக்கி லீலாவ(பெண்டாட்டிய) அடிக்கலையா"என்று கேட்கிறாள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.பேத்தியின் வயது 4. நொந்து நூலாகி நடையைக் கட்டினேன்.


காட்சி --3 சிங்காரச் சென்னை , தமிழ் நாடு

ரொம்ப நாள் கழித்து சென்னை போயிருந்தேன்.நீண்ட நாளுக்குப் பிறகு நெருங்கிய பள்ளித் தோழன் ஒருவனை சந்தித்தேன்.பள்ளி நாட்களில் ஈருடல் ஓருயிர் போல திரிந்தோம்.பிறகு 15 வருடம் கழித்து இப்போதுதான் சந்திக்கிறோம்.கூட இருந்த மனைவியைஅறிமுகப் படுத்தினார்.பிறகு இளமைக் கால நினைவுகளில் மூழ்கினோம்.நண்பனின் மனைவி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.அவரும் தலையாட்டிய படியே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு கடிகாரத்தை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக நெளிந்தார்.என்ன ஏதாவது அவசர வேலையா என்றார்.இல்ல 9 மணிக்கு TV யில் "மெட்டி ஒலி" வரும்.என் பெண்டாட்டிக்கு அதை கண்டிப்பாய் பார்த்தாக வேண்டும் என்றார்.நண்பனின் மனைவியின் வயது சுமார் 26.நொந்து நூலாகி திரும்பினேன்.


மறுபடியும் முதல் பாராவை படியுங்கள்.

பி.கு : அலுவலகத்திலிருந்து லேட்டாக திரும்பிய ஒரு நாள் வீட்டு ஹாலில் அமர்ந்து காலணிகளை கழட்டிக் கொண்டிருந்த போதுTV யில் "மெட்டி ஒலி" ஓடிக் கொண்டிருந்தது.அனிச்சையாக கண் TV யை பார்க்க இரண்டு வயசானவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

muthiyavar 1 :"அடேடே வாங்க சம்பந்தி"

muthiyavar 2 "என்ன சம்பந்தி எப்படியிருக்கீங்க"

muthiyavar 1: "நல்லா இருக்கேன் சம்பந்தி. நீங்க எப்படி சம்பந்தி இருக்கீங்க?

muthiyavar 2: எனக்கென்ன சம்பந்தி. நானும் நல்லா இருக்கேன். அப்புறம் சம்பந்தி என் பொண்ணு எப்படி சம்பந்தி இருக்கா?

muthiyavar 1: அவளுக்கென்ன சம்பந்தி.ராணி மாதிரி இருக்கா சம்பந்தி. அப்புறம் என்ன சம்பந்தி இந்தப் பக்கம் திடீர்னு?

muthiyavar 2: அது ஒண்ணுமில்லை சம்பந்தி,பெரிய சம்பந்திய பாக்கப் போனேன் சம்பந்தி அப்படியே ஒங்க நியாபகம் வந்தது சம்பந்தி. அதுனால சின்ன சம்பந்தியையும் பாத்துட்டு போகலாமுன்னுட்டு வந்தேன் சம்பந்தி.

muthiyavar 1.அப்பிடியா சம்பந்தி, ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.


இத்துடன் TV யில் விளம்பர இடைவேளை ஆரம்பித்து விட்டார்கள். நான் கழட்டிய என் ஷ¥வாலேயே தலையில் அடித்துக் கொண்டு ஹாலை விட்டு வெளியே ஓடி விட்டேன்.


அன்புடன் ....ச.சங்கர்

-------------------------------------------------------------------------------------------------------------

Friday, June 10, 2005

நினைவில் நின்ற கதை ---2

சற்றே பெரிய உண்மைச் சம்பவம் கலந்த கதை
தலைப்பும் தமிழாக்கமும் என்னுடயது.


தோட்டாக்களின் பாதையில்
-----------------------------------------

"சார்... நீங்கள் மென்பொருள் துறையில் பணி செய்கிறீர்களா?"

" ஆம்" விவேக் ப்ரதான் தனது லாப் டாப்பிலிருந்து பார்வையை அகற்றி கேட்டவரை பார்த்தான்.

அது ஷதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் A/c முதல் வகுப்பு பெட்டி.
விவேக் ப்ரதானுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் திறனாய்வு மேலாளராக(Projecr Manager) பணி.விமானத்தில் செல்ல முடியுமானாலும் , பயணத்தின் போது வேலை செய்யகிடைக்கும் நேரம் காரணமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
கேள்வி கேட்ட பக்கத்து இருக்கை பயணிக்கு சற்றேறக்குறைய முப்பது வயதிருக்கும்.

திடகார்திரமாக பார்க்க விளையாட்டு வீரர் போல இருந்தார்.ஏனோ அவரைப் பார்த்தால் அந்த A/C முதல் வகுப்புக்கு கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தார்.விளையாட்டு வீரர் யாராவது, பாசில் இலவச பயணம் செய்கிரார் என்று நினைத்தான் விவேக்.

" உங்களைப் போன்றவர்களால் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.எல்லாம் கணினி மயமாக்கப் பட்டு வருகிறது" என்றார் சக பயணி.

"நன்றி" என்றான் விவேக் ப்ரதான் சற்றே கர்வத்துடன்.
"உங்களைப் போன்றவர்களை பார்த்து நான் எப்போதுமே அதிசயித்துப் போவேன்" அவர் மேலும் தொடர்ந்தார். "நீங்கள் அறையில் அமர்ந்து கொண்டு கணினியை சொடுக்குகிறீர்கள்.அது பெரிய பெரிய வேலை யெல்லாம் செய்கிறது"

"அது வெறும் சொடுக்கும் விஷயமில்லை நண்பரே! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா ?" ஒரு நிமிடம் அவருக்கு கணினியை பற்றி மேலும் விளக்கலாமா என்று யோசித்து பிறகு முடிவை மாற்றிக் கொண்டு "அது மிகவும் சிக்கலான விஷயம்" என்று தோளைக் குலுக்கினான்.

"அப்படித்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் உங்களுக்கெல்லாம் சம்பளம் மிக மிக அதிகமாக இருக்கிறது " என்றார் அப்பாவியாக.
இது விவேக் ப்ரதானை கொஞ்சம் சுருக் என தைத்தது.மிக மென்மையான கோபம் மேலிடும் குரலில் "எல்லோரும் சம்பளத்தையே பார்க்கிறார்கள்.யாருமே நாங்கள் செய்யும் கடின உழைப்பை பார்ப்பதில்லை.கடின உழைப்பை பற்றி நம் நாட்டவருக்கு மிகக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது. A/C அறையில் இருந்து கொண்டு வேலை செய்வதால் நாங்கள் வியர்வை சிந்துவதில்லை என்று நினைக்கிறீர்களா?உங்களைப் போல் உடலை வருத்தி வேலை செய்தால் மட்டும் கடின உழைப்பு என்று அர்த்தமில்லை. நாங்களும் மூளையை கசக்கித்தான் வேலை செய்கிரோம்.அதுவும் சுளுவானதில்லை தெரிந்து கொள்ளுங்கள்"
விவேக் ப்ரதான் மேலும் அவருக்கு புரிய வைக்க எண்ணி தொடர்ந்தான்
" உதாரணத்திற்க்கு இந்த இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள்.பயணச்சீட்டு முன்பதிவு முழுவதும் கணினி மயுமாக்கப்பட்டுள்ளது.நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டை பதிவு செய்கிறார்கள்.ஒரே தகவல் மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்லயிரக்கணக்கான தகவல் பரிவர்த்தனைகள்,தகவல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு,கணக்கு வழக்குகள் பராமரிப்பு என்று எவ்வளவோ இருக்கிறது! இந்த மாதிரி உள்ள ஒன்றை வடிவமைப்பதில் உள்ள நுட்பமும் , சிக்கலும் புரிகிறதா உங்களுக்கு ?? என்றான் விவேக்.

பக்கத்து சீட் பயணி திருவிழாவில் விடப்பட்ட சிறுவன் போல் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார்.இது அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது."நீங்கள் இதை வடிவமைக்கும் பணியையா செய்கிறீர்கள்"

"முன்னால் செய்து கொண்டு இருந்தேன்" கொஞ்சம் நிறுத்தி "ஆனால் இப்போது திறனாய்வு மேலாளராக(Projecr Manager) இருக்கிறேன்" என்றான்.

பக்கத்து சீட் பயணி "அப்படியானால் இப்போது உங்கள் வேலை சற்று சுளுவானதாக இருக்கும் " என்றார்.

விவேக்கிற்க்கு அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.இவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் "ஐயா! வாழ்க்கையில் மேலே உயர உயர வேலை கடினமாகிக்கொண்டே போகும் . அதிக பொறுப்பு அதிக வேலை பளுவை கொண்டு வரும். மென் பொருள் வடிவமைப்பது சுலபமல்ல .அதை இப்போது நான் செய்வதில்லை.ஆனால் அதைவிட அதிக பொருப்புகளை மேலாளர் என்ற முறையில் சுமக்கிறேன்.அது இன்னும் மிக அதிக மன அழுத்தத்தை தரும் வேலை.நான் மற்றவரிடம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தரமான வேலை வாங்க வேண்டும் . அதில் என்ன கஷ்டம்மென்றால், ஒரு பக்கம் வாடிக்கையாளர் தன் தேவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். உபயோகிப்பவரது தேவை வேறொன்றாக இருக்கும். மேலாளர் எல்லா வேலையையும் நேற்றே முடிக்க வேண்டும் என குதிப்பார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்".
விவேக் நீண்ட உரையை நிறுத்தி அவரை ஒரு கணம் உற்று பார்த்தான்.

"நண்பரே !சுறுக்கமாக சொன்னால் என் வேலை நாலா பக்கமிருந்தும் சீறிப் பறந்து வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குப் புரியாது"
கடைசியில் அவருக்குப் புரிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்புடன் முறுவலித்தான்.

"நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது உங்களுக்குப் புரியாது" இதனை ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அந்த மனிதர் எதோ நினைவில் தன்னை இழந்தவராக எங்கோ வெறித்தார்.

திரும்ப அவர் பேச ஆரம்பித்த போது அவர் பேச்சிலிருந்த ஆழ்ந்த அமைதியும் உறுதியும் விவேக்கை ஆச்சரியப்பட வைத்தது.அவர் நினைவு எங்கேயோ யுகங்களைத் தாண்டி கடந்த காலத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.

"ஐயா சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்" அவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்

"இருட்டின் போர்வையில் ' Point 4875 ' மலை முகட்டை பிடிக்கச் சொல்லி உத்தரவு வந்த பொழுது நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மலை உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எங்கிருந்து யாரிடமிருந்து, எந்தத் திசையிலிருந்து தோட்டாக்கள் பறந்து வருகின்றன என்றே அறிய முடியாத நிலை.மறுநாள் காலையில் மலையுச்சியில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது உயிரோடு எஞ்சியிருந்தது நாங்கள் நாலே பேர்."

"ஐயா நீங்கள் ஒரு......" என்றான் விவேக்

"நான்.... சுபைதார் சுஷாந்த் சிங்...... ஜம்மு & காஷ்மீர் பதிமூன்றாவது துப்பக்கி படைப்பிரிவிலிருந்து...... கார்கிலில் "Point 4875" மலை முகட்டை காவல் காக்கும் இராணுவப் பணியில் இருக்கிறேன்" வார்தைகள் நிதானமாக வந்தன.

"இப்போது விரும்பினால் எல்லையிலுருந்து திரும்பி உள் நாட்டில் எங்காவது சேவை செய்யலாம் என்று பரிந்துரை வந்திருக்கிறது.ஆனால் நீங்கள் சொல்லுங்கள் !!வாழ்க்கை சுளுவானதாக இருக்கும் என்று கடமையை விட்டு விட முடியுமா?" கேள்வி கேட்டு விட்டு எந்த பதிலையும் எதிர் பார்க்காமல் அவர் மேலும் தொடர்ந்தார்.

"Point 4875" முகட்டை கைப்பற்றிய அந்த காலைப் பொழுதில் நாங்கள் மறைவிடத்தில் பாது காப்பக நின்று கொண்டிருந்த போது என் சக வீரன் ஒருவன் அடி பட்டு எதிரிகளின் தோட்டாக் களுக்கு இலகுவான இலக்காக பனியில் திறந்த வெளியில் விழுந்து கிடந்தான்.அவனை மறைவிடத்தில் பாதுகாப்பக கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கான உத்தரவை நான் என் படைப்பிரிவின் மேஜரிடம் கேட்ட போது மறுத்து விட்டு தானே முன் சென்று காப்பற்றுவதில் ஈடுபட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம் " இராணுவத்தில் பயிற்ச்சிக்காக சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில் --- முதலில் என் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் பிறகு எனக்குக் கீழே பணி புரிவோரின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் சத்தியம் செய்தேன்.எந்த நிலையிலும் என் சொந்தப் பாதுகாப்பு கடைசி முக்கியதுவமே பெறும் எனவே நான் உயிரோடிருக்கும் வரை என் படைப்பிரிவினர் யார் உயிரையும் பணயம் வைக்க மாட்டேன்".

"மேஜர் அடி பட்ட வீரனை தோட்டக்களிடமிருந்து மறைத்து பாதுகாப்பாக கொண்டு வரும்போது எதிரியின் தோட்டக்களால் சல்லடையாக துளைக்கப் பட்டு மடிந்தார்.
இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் "Point 4875" மலை முகட்டில் காவலுக்கு நிற்க்கும் போதும் இந்தக் காட்சி என் மனத்திரையை வியாபிக்கிறது. அதுவும் அந்த மேஜர் ,என்னைத் துளைக்க வேண்டிய தோட்டாக்களை தன் மேல் வாங்கி மடிந்த காட்சி... அப்பப்பா.... "
"சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பது எனக்கும் கண்டிப்பாக தெரியும் ஐயா" என்று சொல்லி நிறுத்தினார்.

விவேக் ப்ரதான் கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான்.
பிறகு நினைத்துக் கொண்டவன் போல் தனது லாப் டாப்பை off செய்தான்.

கடைமையும் , வீரசாகசங்களும் தியாகமும் வாழ்க்கையின் சாதாரண அங்கமாக இருப்பவருக்கு முன்னால் எப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்வதாக காட்டிக் கொண்டாலும் அது ஒரு பகட்டாகவோ அல்லது அவரை இழிவு படுத்தும் செயலாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

இரயில் வேகமிழந்து மெதுவாக பிளாட்பாரத்தினுள் நுழைந்தது.
சுபைதார் சுஷாந்த் சிங் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.

விவேக்கைப் பார்த்து புன்னகைத்து "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்சி " என்று கை நீட்டினார்.

விவேக் ப்ரதான் தன் நடுங்கும் கரத்தால் அவர் கைகளைப் பற்றி குலுக்கிய வண்ணம் இந்தக் கைகள்தானே கரடு முரடான மலைகளை ஏறிக்கடக்கிறது,நாட்டை காப்பாற்ற துப்பாக்கி விசையை இழுக்கிறது, இந்தியாவின் மூவர்ணக் கொடியை அயராது பறக்க விட்டு பாதுகாக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.உடனே அனிச்சையாக அவரைப்பார்த்து ஒரு சல்யூட் அடித்தான்.

பின் குறிப்பு : இதில் வர்ணிக்கப் பட்டுள்ள கார்கில் 4875 மலை முகட்டு வெற்றி ஒரு உண்மை சம்பவம்.மேஜர் விக்ரம் Bபத்ரா, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில், தனக்கு கீழ் பணி புரியும் வீரரை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்தார்.அவருடைய வீர மரணத்திற்குப் பிறகு நமது தேச இராணுவத்தின் மிக உயரிய "பரம வீர் சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.இது போன்ற வீர புருஷர்களால்தான் நாம் சீறி வரும் தோட்டக்களைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது.

Virtue does not always demand a heavy sacrifice - only the willingness to make it when necessary. ---------(Frederick Dunn)

பின்... பின் குறிப்பு : இந்தக் கதையை, சம்பவத் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.ஆனால் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுக்காது எனக்கு. உங்களுக்கும்தானே.

அன்புடன்......ச.சங்கர்




Sunday, June 05, 2005

படித்ததில் பிடித்ததில் மறக்காதது -- 1

உன் சந்தோஷக் கோட்டையை இடிக்க நினைப்பவன்
-----------------------------------------------------------------------
எதையுமே எதிர் மறையாக சிந்திக்கும் சிலர் உங்கள் சந்தோஷக் கோட்டையை இடிக்க முனைகையில் பின் வரும் சம்பவத்தை நினைவு கொள்ளுங்கள்.

ஒரு நாள் மூர்த்தி கோட்டு தைக்க துணி எடுத்துக் கொண்டு சின்னா டைலரிடம் போனார்.

"என்னா சார்....திடீர்னு கோட்டெல்லாம்"- டெய்லர் கேட்டான்

"Delhi-க்கு போரேம்பா,லீவுக்கு ஜாலியா f·பாமிலியோட" சந்தோஷம் மிளிர சொன்னார்.

"அட என்னா சார் நீ, Delhi போரேன்றியே, கேவலமான ஊரு சார்,செம வெய்யிலு, புழுதி, கூட்டம். அது சரி எப்பிடி போற?

" western Airlines" ல, டிக்கட் cheap-ஆக கிடைச்சுது

"அட போ சார், அத்ல எவனாவது போவானா? எப்ப பாத்தாலும் லேட்டு ,சின்ன flight வேறயாம், சாப்படு,தண்ணியெல்லாம் தர மாட்டாங்கனு வேற சொல்றாங்க.அத்த வுடு,Delhi-ல எங்க தங்க போறீங்க?

"கரோல் பாக்ல சொர்ண விஹார்னு ஹோட்டல்...." முடிக்கும் முன்னாலேயே மறித்து

"மேல சொல்லாத,புரிஞ்சிடிச்சி,ஏன் சார் f·பாமிலியோட போர.அங்க போய் தங்குவேன்றியே..A/c கடியாது.·பேனும் ஓடாது.மூட்டப் பூச்சி வேற. சரி, எங்கெல்லாம் சுத்திப் பாக்கப் போற?"
கொழந்தைகளுக்கு ரொம்ப நாளா குடியரசுத் தலைவர பாக்கணும்னு ஆசை.முடிஞ்சா கூட்டிட்டுப் போயி காட்டலாமுன்னுட்டு...."
"இதப்பார்டா..!! அவரு இன்னா... நீ எப்ப வருனேனுட்டு காத்துகினிருக்காராங்காட்டியும்.அவரப் பாக்க பிரதமர்,மந்திரி இவங்களே தல கீழா நிக்கிறாங்க.ஜோக்கடிக்காத சார்."
மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை.
"இன்னாவோ போ, தண்டமா போப் போது பாத்துக்க " சின்னா நக்கலாக சிரித்தான்.
2 மாதம் கழித்து மீண்டும் கடைத்தெருவில் சின்னா மூர்த்தியை பார்த்தான்.
"என்னா சார் Delhi போய் வந்துட்டியா?ஒரே வெயில் தான? "
"இல்லப்பா நா போனப்ப நல்லா மழை பெஞ்சு விட்டதால வெயிலுமில்ல, புழுதியுமில்ல அப்புறம் metro train ஓடுறதால இப்ப Delhi ல traffic jam எல்லாம் கெடையாது.ரொம்ப நல்லா இருந்தது"
சின்னா விடாமல் "Flight எவ்வளவு நேரம் லேட்டு" என்றான்
"அதை ஏன் கேக்குற, அன்னக்கி அந்த air lines ஆரமிச்சு 1 வருஷம் ஆச்சாம்.அதுனால சரியான டயத்துக்கு போனதுமில்லாம flight-ல் எல்லாருக்கும் விருந்தே வச்சிட்டங்க.அது தவிர Delhi ல இறங்கும் போது ஆளுக்கு ஒரு வாச்சு வேற பரிசா குடுத்தாங்க."
"ம்..ம்.. சொர்ண விலாஸ் ஹோட்டல் அதே மூட்டப் பூச்சியோட....." என்று இழுத்தான்.
மூர்த்தி''அதாம்பா இல்ல..இப்ப அத இடிச்சி மூணு நட்சத்திர ஹோட்டலாக்கிட்டான்.நாங்க போகும் போது ஹோட்டல் full. நாங்க அட்வான்சா புக் செஞ்சிருந்ததால் எங்களுக்கு extra காசு வாங்காமல் ஒரு suit குடுத்துட்டான்.காலையில் டிபன் வேற free.பசங்க நல்லா enjoy பண்ணினாங்க" என்றார்.

"குடியரசு தலைவர் மாளிகை பக்கம் கூட விட்டிருக்க மாட்டானே,security அது இதுன்னுட்டு"

"நாங்க அந்தப் பக்கம் போயிட்டிருக்கும் போது security எங்களை கூப்பிட்டு குடியரசு தலைவர் ஒரு சுற்றுலா வந்த குடும்பத்துடன் பேச ஆசைப் படுகிறார்.நீங்க வர முடியுமான்னு கேட்டான்.நான் ம்..ன்னதும் நேர கூட்டிக்கிட்டு போயி அவர் முன்னாடி நிறுத்திட்டான்.எனக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை.குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம் தாங்கல.அவர் கூட போட்டோ வேற எடுத்துக்கிட்டோம்."

சின்னா பிரம்மிப்புடன் "உங்கிட்ட குடியரசுத்தலைவர் என்ன பேசினார்" என்று கேட்டான்.

" யார் உனக்கு இவ்வளவு கேவலமாக கோட்டு தைத்தது ? இனிமேல் வேறு எங்காவது நல்ல டைலரிடம் தைக்கக் கொடு என்று சொன்னார்" மூர்த்தி சிரித்தவாரே சொல்லிவிட்டு நடந்தார்.

சின்னா முகம் கறுத்து நின்றான்.

எனவே நண்பர்களே!! சின்னா போன்று அறிவிலிகள் மற்றும் உங்கள் சந்தோஷத்தில் அக்கறை இல்லாதோர் உங்களை சோகப்படுத்த முயலும் போது மேற்சொன்ன கதையை நினைத்துப் பாருங்கள்.

Sunday, May 22, 2005

பிடித்த பழமொழி

களவும் கற்று மற