Friday, August 21, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம் - 21/08/09

பப்பு பரிட்சையில் ஏன் ஃபெயிலானான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் - விடை பதிவின் கடைசியில் :)
&&&&&&&&&&&&&&&&&
இனிமேல் அமெரிக்கா போவதானால் யோசித்துத்தான் செய்வேன் என்று ஷாருக் கான் சொல்லியிருக்கிறார். அவரைக் கேள்வி கேட்டுத் துருவியதே நிழல் உலகில் அவருக்கான தொடர்பினால்தான் என்று வரும் செய்தியைப் பார்த்தால் ஷாருக்கான் அமெரிக்கா போகும் போது யோசித்துச் செய்வது நலம் என்றுதான் தோன்றுகிறது,பொதுவாக தாவுத் இப்ராஃகிம் போன்றோருடன் ஷார்ஜா கிரிக்கெட் மேச்சில் ஒன்றாக நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் கூட்டம் இந்தியாவில் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம்..அமெரிக்காவிலெல்லாம் அரசல் புரசலாக சந்தேகப்பட்டாலே ஆப்புதான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைக்கு வலையில் கண்ணில் பட்டது புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் கொலை பற்றிய சந்தன முல்லையின் இந்தப் பதிவில் ( நான் பார்த்த வரையில்)நீண்ட நாட்களுக்குப் பின் முன்னாள் மூத்த பதிவர்??? :) முகமூடியின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். முகமூடியும் ராபினும் ஆண்வர்கத்தை ஓரளவு காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள்.:)

இந்தப் பதிவைப் பார்த்ததும் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் என்பவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது


The little rift between the sexes is astonishingly widened by simply teaching one set of catchwords to the girls and another to the boys. ~Robert Louis Stevenson



மேலும் சிலர் சொன்ன சுவாரஸ்யமான கருத்துக்கள்



You don't have to be anti-man to be pro-woman. ~Jane Galvin Lewis



Being a woman is a terribly difficult task, since it consists principally in dealing with men. ~Joseph Conrad



Women are the only oppressed group in our society that lives in intimate association with their opressors. ~Evelyn Cunningham


I do not wish them to have power over men, but over themselves. ~Mary Wollstonecraft



Whether women are better than men I cannot say - but I can say they are certainly no worse. ~Golda Meir



&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைய மெயிலில் வந்தது..பப்பு ஏன் ஃபெயிலானான் என்ற தலைப்பில் வந்த இந்த மெயிலைத் தமிழ்ப் படுத்தினால் ரசிக்காது என்று நினைத்ததால் இதையும் அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன்.








நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே

அன்புடன்...ச.சங்கர்
சென்னை- 21-08-09

Saturday, August 15, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம் ( 16-08-09)

Be a Roman in Rome என்ற பழமொழியை தமிழில் " ஊரோடு ஒத்து வாழ் " என்று சொல்வார்கள். இந்தப் பழமொழி அனேகமாக எல்லா மொழியிலேயும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சிலருக்கு குறிப்பாக ஷாருக்கான் போன்ற வேஷம் கட்டும், ஊர் சுற்றும் கூத்தாடிக்கு தெரியாமல் போனது ஏனென்று தெரியவில்லை.

அமெரிக்க நெவார்க் விமான நிலையத்தில் இமிக்ரேசன் சோதனையின் போது அவரை இரண்டாவது கட்ட விசாரணைக்கு உட்படுத்தி விட்டார்களாம். உடனே அவருக்கு அவமானம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதில் என் பெயர் கான் என்று முஸ்லிம் பெயராக இருந்ததனால் எனக்கு இந்த அவமானம் ??? என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

உடனே இந்தியாவில்லுள்ள ஒரு எம்பி க்கு ஃபோன் செய்ததுமில்லாமல், அந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது. மத்திய மந்திரி அம்பிகா சோனியும் தம் பங்குக்கு பொரிந்து தள்ளியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இன்னொரு நாட்டின் விதி முறைகளை அதுவும் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள விதி முறைகளையே கடைப் பிடிப்பதில் அப்படி என்ன கெளரவக்குறைவு ஏற்பட்டு விடுகிறதோ தெரியவில்லை.அப்பபடியே இது முஸ்லிம் இன மக்களுக்கு எதிரான அமெரிக்கர்களின் திட்டமிட்ட மானபங்கப் படுத்துதல் என்று கொண்டாலும் தினமும் ஆயிரக் கணக்கான இந்திய முஸ்லீம்கள் இந்த மாதிரியானன அவமரியாதைகளை கடந்து அமெரிக்கா போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு கொதித்தெழுந்து ஃபோன் செய்ய எந்த மந்திரியயும் தெரியாது என்பது ஒரு புறம் இருக்க இப்படிப் பட்ட நிகழ்வுகளுக்கு அம்பிகா சோனியோ அல்லது யாருமோ இதற்கு முன் ஒரு மயிரைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுடன் இப்பொது நடந்தது ஷாருக் கானுக்கு என்றவுடன் நன்றியுடன் வாலாட்டுகிறார்களே என்பதுதான் பெரிய எரிச்சல்.

நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமுக்கு இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஏற்பட்ட போது- அதுவும் ஒரு அமெரிக்க விமான கம்பெனியால்தான் ( புரோடகால் படி அது ஒரு தவறானன செயல் என்ற போதும் கூட) அவர் பெருந்தன்மையுடன் இருந்தார் என்பதும் வாய்க்கு வந்த படி ஸ்டேட்மென்ட்கள் கொடுத்துக் கொண்டு அலையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிச்சலுடனே கேட்கிறேன் " ஷாருக் கான் என்ன பெரிய மயிரா ? After all ஒரு கூத்தாடி" .

என்றுதான் புகழ் பெற்றவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் பணம் படைத்தவர்களும் சாதாரணர்களை விட எல்லாவிதத்திலும் உசத்தி " என்கிற மன்னர் பரம்பரை மனப்பான்மை மறைந்து " மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் " என்ற உண்மையான ஜனநாயக சுதந்திரம் வருமோ தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்றைய மெயிலில் வந்தது

ஒரு முறை தத்துவ ஞானி கன்ஃபூசியசிடம் ஒருவர் கேட்டாராம் " மனிதர்கள் உங்களை எந்த விஷயத்தில் ஆச்சரியப் படுத்துகிறார்கள்??" என்று

அதற்கு கன்ஃபூஷ்யஸ் சொன்னாராம்

மனிதர்கள் ஆரோக்கியத்தைச் செலவழித்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிரார்கள்..பின் ஆரோக்கியத்தை சம்பாதிக்க பணம் செலவழிக்கிறார்கள்

மனிதர்கள் நிகழ்காலத்தை எந்த அளவுக்கு மறந்து விடுகிறார்கள் என்றால் வருங்காலத்தைப் பற்றி கவலையுடன் சிந்திப்பதில் அவர்கள் நிகழ் காலத்திற்காகவும் வாழ்வதில்லை, வருங்காலத்திற்காகவும் வாழ்வதில்லை

மனிதர்கள் வாழும் போது , அவர்களுக்கு சாவே இல்லை என்பது போல வாழ்கிறார்கள்..சாகும் போதோ அவர்கள் வாழவே இல்லை என்பது போல சாகிறார்கள் (வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்தொழிந்து போய் விடுகிறார்கள்.)

How very true.
நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே

அன்புடன்...ச.சங்கர்
சென்னை- 16-08-09

எனது டைரியின் இன்றைய பக்கம்

லீவு நாளானதால் மிகவும் லேட்டாக எழுந்திருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் பேப்பரை மேய்ந்தால் பன்றிக் காய்ச்சலையும் சுதந்திர தினத்தையும் தவிர வேறு செய்திகள் வெகுவாக இல்லை.

இந்தியாவில் பருவ மழை பொய்த்ததால் கரீஃப் என்று சொல்லக் கூடிய கோடை காலப் பயிர் விளைச்சல் பாதிக்கப் பட்டிருப்பதுடன் இந்த நிலை (மழை குறைவு) இந்த மாதமும் தொடர்ந்தால் நிலத்தின் ஈரத் தன்மை கடுமையாக பாதிக்கப் படுமாகையால் ராBபி என்று சொல்லக் கூடிய குளிர் கால பயிர் விளைச்சலும் பாதிக்கப் படும் என்ற செய்தி மிரட்டுகிறது.

ஏற்கனவே ஏகத்துக்கும் ஏறிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியிலும், வீட்டு பட்ஜெட்டிலும் இது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்று யோசித்தாலே திகிலூட்டுகிறது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இதெல்லாம் பற்றிக் கவலைப் படுவாரா அல்லது நின்று போன இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை திரும்ப ஆரம்பித்து எப்படி கலெக்க்ஷன் பார்ப்பது என்று கவலைப் படுவாரா தெரியவில்லை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அப்படியே நெட்டைத் திறந்து மெயில்களையும் , வலைத் தளங்களையும் மேய்ந்தால் அங்கும் ஒரே " சுதந்திர தினம்" . அது தவிர சொல்லி வைத்தது மாதிரி நிறையப் பேர் சேரனின் " பொக்கிஷம் " படத்துக்கு விமர்சனம் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

படித்தவற்றுள் பெரும்பாலானா விமர்சனங்கள் "கொலை வெறியுடன் " ஒரே மாதிரியாக இருக்க பதிவர்கள் கேபிள் சங்கர் என்பவரின் இந்த விமர்சனமும், கார்த்திகைப் பாண்டியனின் இந்த விமர்சனமும் படிப்பதற்கு கொஞ்சம் தேவலை.

என்னைப் பொருத்த அளவில் விமர்சனம் என்பது " நிறைகுறைகளை அலசுவதாக இருக்க வேண்டுமே தவிர நம் கடுப்பையும் எரிச்சலையும் தீர்த்துக் கொள்ளும் களிம்பாக இருக்கக் கூடாது ".


உண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவதற்க்கு பதில் படிக்கும் அனைவருக்கும் படத்தின் சீடி அனுப்பி வைக்கலாம். அவர் எழுதின விமர்சனத்தைப் படிப்பதற்கும் படம் பார்ப்பதர்க்கும் அதே நேரம்தான் ஆகும் என்று நினைக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மெயிலில் வந்த ஒரு செய்தி.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளும் , புரளிகளும் , ஜோசியங்களும் , செய்ய வேண்டியவைகளும் , செய்யக்கூடாதவைகள் பற்றிய அறிவுரைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன . அதையெல்லாம் கடைப் பிடிக்கிறீர்களோ இல்லையோ......


காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது உங்கள் முகம் கீழ்க்"கண்டபடி" இருந்தால் கண்டிப்பாக ஆபிஸ் போகாதீர்கள்














நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே



அன்புடன்...ச.சங்கர்
சென்னை--15/08/2009

Friday, August 14, 2009

பன்றிக்காய்ச்சல் --அமெரிக்கர்களின் சதி அம்பலம்

இந்த வார குமுதத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அமெரிக்காவால் திட்டமிட்டு நடத்தப் படும் சதியா என்று சந்தேகம் எழுப்பிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் .

கீழ்க்கண்ட போட்டோக்களைப் பார்த்தால் அது உண்மைதான் என்பது போல் தெரிகிறது


















அதுனால அமெரிக்கர்களை முத்தமிடுரதா இருந்தா யோசிச்சு செய்யுங்க :)




இவங்க அடிக்கிற இந்தக் கூத்துல பன்னிக்கு காய்ச்சல் வராம இருந்தா சரி...

அன்புடன்...ச.சங்கர்

Wednesday, August 12, 2009

பகுத்தறிவு, பக்தி, பன்றிக்காய்ச்சல்

காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும் , துணை முதல்வர் ஸ்டாலினின் மகளுமான செந்தாமரை அவர் கணவருடன் திருவண்ணாமலையில் கிரி வலம் செய்து கடவுளை வழி பட்டதாக செய்தி வந்திருந்தது. இதைப் படித்த என் நண்பன் பகுத்தறிவு உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது , பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியுல் தாத்தா " நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே" என்று சித்தர் பாடலையெல்லாம் உதாரணம் காட்டி நாத்திகம் பேசியதை பேத்தி கேட்கவில்லையா" என்றான். கருணாநிதியும் ஸ்டாலினும் நாத்திகர்களாக இருந்தால் அவர்கள் குடும்பமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே என்றேன். அதற்கு நண்பன் " வீட்டுக்குள்ளேயே தன் மகளையும் பேத்தியையும் கன்வின்ஸ் பண்ணி திருத்த முடியாத இவங்களெல்லாம் நாட்டைத் திருத்துறேன்னு புறப்பட்டதுதான் கேலிக்கூத்து " கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போய் விடுவேன்" என்று மார் தட்டின கதைதான் என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி "ஆமாம்..கல்யாணம் ஆகி ரொம்ப நாளாகி விட்டது, குழந்தை இல்லையோ என்னமோ..அதான் எவனாவது ஜோசியன் கிரி வலம் சுற்றி வரச் சொல்லியிருப்பான். ஆத்திகமாவது.. நாத்திகமாவது...அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டுப் போனாள். " Both of them got a point there ".


சென்னையில் எல்லோரும் பன்றிக் காய்ச்சல் ஹைப்பில் இருக்கிறார்கள். அதன் பாதிப்பை விட இவர்கள் வம்பிற்காக அடிக்கும் லூட்டிதான் தாங்க முடியவில்லை.என் தங்கை மெனக்கெட்டு போன் பண்ணி உன் பிள்ளைக்கு மாஸ்க் போட்டு விட்டியா எனக் கிளப்பி விட , என் மனைவி உடனே என் அப்பாவை ஊரெல்லாம் சுற்ற வைத்து 2 மாஸ்க் வாங்கி வரச் செய்து பிள்ளைக்கு மாட்டி ஸ்கூலுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், அதை ஊரெல்லாம் ஃபோன் போட்டுச் சொல்லி பீதியை தன்னால் முடிந்த அளவு மேலும் கூட்டி விட்டாள்.பாவம்..வாழ்க்கையில் இதுவரை பன்றியே பார்த்திராத என் பையன் "கினியா பன்றி"யாகி மாஸ்க் மாட்டிக் கொண்டு தேமே என ஸ்கூலுக்கு போனான். எந்த ஒரு விஷயத்தையும் பொழுது போகாமல் வம்புக்கு அலையும் சென்னை மாமிக்களும் , மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்கி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது. இந்த விஷயத்தில் சக பதிவர் இட்லி வடை வலைப்பக்கத்தில் வந்துள்ள இந்தப் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு." Please spread the right message"


அன்புடன் ... ச.சங்கர்

Monday, July 06, 2009

தியாகத்தின் நினைவாக...

உண்மைச் சம்பவம் கலந்த கதை.

கார்கில் போரின் பத்தாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அந்தப் போரில் இந்திய மண்ணைக் காக்க உயிர் நீத்த வீர சகோதரர்களின் நினைவாக மீள் பதிவிடுகிறேன்

தோட்டாக்களின் பாதையில்

"சார்... நீங்கள் மென்பொருள் துறையில் பணி செய்கிறீர்களா?"
" ஆம்" விவேக் ப்ரதான் தனது லாப் டாப்பிலிருந்து பார்வையை அகற்றி கேட்டவரை பார்த்தான்.
அது சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் முதல் வகுப்பு பெட்டி. விவேக் ப்ரதானுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜராக பணி.விமானத்தில் செல்ல முடியுமானாலும் , பயணத்தின் போது வேலை செய்யக் கிடைக்கும் நேரம் காரணமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

கேள்வி கேட்ட பக்கத்து இருக்கை பயணிக்கு சற்றேறக்குறைய முப்பது வயதிருக்கும். திடகார்திரமாக பார்க்க விளையாட்டு வீரர் போல இருந்தார்.ஏனோ அவரைப் பார்த்தால் அந்த முதல் வகுப்புக்கு கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தார்.விளையாட்டு வீரர் யாராவது, பாசில் இலவச பயணம் செய்வாராக இருக்கும் என்று நினைத்தான் விவேக்.


" உங்களைப் போன்றவர்களால் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.எல்லாம் கணினி மயமாகிக் கொண்டு வருகிறது" என்றார் சக பயணி.


"நன்றி" என்றான் விவேக் ப்ரதான் கொஞ்சம் கர்வத்துடன்.

"உங்களைப் போன்றவர்களை பார்த்து நான் எப்போதுமே அதிசயித்துப் போவேன்" அவர் மேலும் தொடர்ந்தார். "நீங்கள் அறையில் அமர்ந்து கொண்டு கணினியை சொடுக்குகிறீர்கள்.அது ஆச்சரியகரமான பெரிய பெரிய வேலை யெல்லாம் செய்கிறது" குழந்தையைப் போல் அதிசயித்தார்.

விவேக் மேலும் கர்வமாக "அது வெறும் சொடுக்கும் விஷயமில்லை நண்பரே! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா ?" என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் அவருக்கு கணினியை பற்றி மேலும் விளக்கலாமா என்று யோசித்து பிறகு முடிவை மாற்றிக் கொண்டு "அது மிகவும் சிக்கலான விஷயம்" என்று தோளைக் குலுக்கினான்.


அவரும் விடாமல் "அப்படித்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் உங்களுக்கெல்லாம் சம்பளம் மிக மிக அதிகமாக இருக்கிறது " என்றார் அப்பாவியாக.

இது விவேக் ப்ரதானை கொஞ்சம் சுருக் என தைத்தது.மிக மென்மையான கோபம் மேலிடும் குரலில் "எல்லோரும் சம்பளத்தையே பார்க்கிறார்கள்.யாருமே நாங்கள் செய்யும் கடின உழைப்பை பார்ப்பதில்லை.கடின உழைப்பை பற்றி நம் நாட்டவருக்கு மிகக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது. A/C அறையில் இருந்து கொண்டு வேலை செய்வதால் நாங்கள் வியர்வை சிந்துவதில்லை என்று நினைக்கிறீர்களா?உங்களைப் போல் உடலை வருத்தி வேலை செய்தால் மட்டும் கடின உழைப்பு என்று அர்த்தமில்லை. நாங்களும் மூளையை கசக்கித்தான் வேலை செய்கிரோம்.அதுவும் சுளுவானதில்லை.. தெரிந்து கொள்ளுங்கள்"

விவேக் ப்ரதான் மேலும் அவருக்கு புரிய வைக்க எண்ணி தொடர்ந்தான்

" உதாரணத்திற்க்கு இந்த இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள்.பயணச்சீட்டு முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் மற்றும் இணைய தளங்கள் மூலமாக பயணச்சீட்டை பதிவு செய்கிறார்கள்.ஒரே தகவல் மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்லயிரக்கணக்கான தகவல் பரிவர்த்தனைகள்,தகவல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு,கணக்கு வழக்குகள் பராமரிப்பு என்று எவ்வளவோ இருக்கிறது! இந்த மாதிரி உள்ள ஒன்றை வடிவமைப்பதில் உள்ள நுட்பமும் , சிக்கலும் புரிகிறதா உங்களுக்கு ?? என்றான் விவேக்.


பக்கத்து சீட் பயணி திருவிழாவில் விடப்பட்ட சிறுவன் போல் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார்.இது அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது."நீங்கள் இதை போன்றவற்றை வடிவமைக்கும் பணியையா செய்கிறீர்கள்" என்று அப்பாவியாய்க் கேட்டார்.


"முன்னால் செய்து கொண்டு இருந்தேன்" கொஞ்சம் நிறுத்தி "ஆனால் இப்போது இது போன்றவற்றை வடிவமைக்கும் பலருக்கு மேலாளராக இருக்கிறேன்" என்றான்.


பக்கத்து சீட் பயணி "அப்படியானால் இப்போது உங்கள் வேலை சற்று சுளுவானதாக இருக்கும் " என்றார்.


அரசாங்கத்தில் மேலாளராகி விட்ட அதிகாரியைப் போல தன்னை எண்ணி விட்டாரே என்ற நினைப்பில் விவேக்கிற்க்கு அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.இவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் "ஐயா! மென் பொருள் துறையில் மேலே உயர உயர வேலை கடினமாகிக்கொண்டே போகும் . அதிக பொறுப்பு , அதிக வேலை பளுவை கொண்டு வரும். மென் பொருள் வடிவமைப்பது சுலபமல்ல .அதை இப்போது நான் செய்வதில்லை.ஆனால் அதைவிட அதிக பொருப்புகளை மேலாளர் என்ற முறையில் சுமக்கிறேன்.அது இன்னும் மிக அதிக மன அழுத்தத்தை தரும் வேலை.நான் மற்றவரிடம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தரமான வேலை வாங்க வேண்டும் . அதில் என்ன கஷ்டம்மென்றால், ஒரு பக்கம் வாடிக்கையாளர் தன் தேவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். உபயோகிப்பவரது தேவை வேறொன்றாக இருக்கும். மேலாளர் எல்லா வேலையையும் நேற்றே முடிக்க வேண்டும் என குதிப்பார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்". விவேக் நீண்ட உரையை நிறுத்தி அவரை ஒரு கணம் உற்று பார்த்தான்.


"நண்பரே !சுருக்கமாக சொன்னால் என் வேலை நாலா பக்கமிருந்தும் சீறிப் பறந்து வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குப் புரியாது" என்று சொல்லி கடைசியில் அவருக்குப் புரிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்புடன் முறுவலித்தான்.


"நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி... நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி... அது " இதனை இரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அந்த மனிதர் எதோ நினைவில் தன்னை இழந்தவராக எங்கோ வெறித்தார்.


திரும்ப அவர் பேச ஆரம்பித்த போது அவர் பேச்சிலிருந்த ஆழ்ந்த அமைதியும் உறுதியும் விவேக்கை துணுக்குறவும் ஆச்சரியப்படவும் வைத்தது. அவர் நினைவு எங்கேயோ யுகங்களைத் தாண்டி கடந்த காலத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.


"ஐயா சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்" அவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்


"இருட்டின் போர்வையில் ' Point 4875 ' மலை முகட்டை பிடிக்கச் சொல்லி உத்தரவு வந்த பொழுது நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மலை உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எங்கிருந்து யாரிடமிருந்து, எந்தத் திசையிலிருந்து தோட்டாக்கள் பறந்து வருகின்றன என்றே அறிய முடியாத நிலை. மறுநாள் காலையில் மலையுச்சியில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது உயிரோடு எஞ்சியிருந்தது நாங்கள் நாலே பேர்." சொல்லிவிட்டு நிறுத்தினார்


"ஐயா நீங்கள் ஒரு......" என்றான் விவேக்


"நான்... ஜம்மு - காஷ்மீர் பதிமூன்றாவது துப்பக்கி படைப்பிரிவிலிருந்து.......... சுபைதார் சுஷாந்த் சிங்..... கார்கிலில் "Point 4875" என்றழைக்கப் படும் மலையுச்சியைக் காவல் காக்கும் இராணுவப் பணியில் இருக்கிறேன்" வார்தைகள் நிதானமாக வந்தன.


"கார்கில் போர் முடிந்த போது , விரும்பினால் எல்லையிலுருந்து திரும்பி உள் நாட்டில் எங்காவது வேலை செய்யலாம் என்று பரிந்துரை வந்தது. ஆனால் நீங்கள் சொல்லுங்கள் !!வாழ்க்கை சுளுவானதாக இருக்கும் என்று நம் கடமையை விட்டு விட முடியுமா?" கேள்வி கேட்டு விட்டு எந்த பதிலையும் எதிர் பார்க்காமல் அவர் மேலும் தொடர்ந்தார்.


"Point 4875" முகட்டை கைப்பற்றிய அந்த காலைப் பொழுதில் நாங்கள் மறைவிடத்தில் பாது காப்பக நின்று கொண்டிருந்த போதுதான் எங்களது சக வீரன் ஒருவன் அடி பட்டு எதிரிகளின் தோட்டாக்களுக்கு இலகுவான இலக்காக பனியில் திறந்த வெளியில் விழுந்து கிடப்பதைப் பர்த்தோம். காலில் குண்டு பாய்ந்து அவனால் நடக்க முடியவில்லை.அவனை மறைவிடத்தில் பாதுகாப்பக கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு . ஏனென்றால் அவன் எனது படைப் பிரிவில் எனது ஜோடி வீரன்.

அவனைக் காப்பாறப் போவதற்கு மறைவிடத்தை விட்டு வெளியே வந்து சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும். தனியாக இருந்திருந்தால் யோசிக்காமல் செய்திருப்பேன்.ஆனால் இப்போதோ என் படைப்பிரிவின் மேஜர் என்னருகே நிற்கிறார், எனவே அவரது உத்தரவை அவசரமாய் நாடினேன்...அனால் மேஜரிடம் எவ்வளவோ கெஞ்சிய போதும் மறுத்து விட்டார். யாரும் மறைவிடத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார். எனக்கோ ஆத்திரம் தாளவில்லை..என் தோழன் அங்கே அடி பட்டுப் பனியில் புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கிறான் . மேஜரோ யாரும் காப்பாற்றப் போகக் கூடாதென்கிறார். ஆத்திரத்தின் எல்லைக்கே போன என்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் நான் துடித்துக் கொண்டிருக்கும் போதுதான் யாரும் எதிர் பார்க்காமல் அது நடந்தது. "

சற்றே பேச்சை நிறுத்திய அவரை விவேக் அவசரக் குரலில் கேட்டான் " பிறகு என்ன ஆயிற்று " அவனுக்கு விரு விருப்பான மர்ம நாவல் படிக்கும் போது பாதியுல் யாரோ பிடுங்கியது போலிருந்தது.

யாரும் எதிர் பாராத தருணத்தில் மேஜரே பாய்ந்து மறைவிடத்தை விட்டு வெளியே சென்று அந்த காயம் பட்ட வீரனைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார்.மீதமிருந்த எங்கள் மூன்று பேருக்கும் என்ன நடக்கிறதென்பதே ஒரு கணம் பிடிபடவில்லை. மேஜர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட மறுகணம் நாலா பக்கங்களிலிருந்தும் எதிரியின் தோட்டாக்கள் அவரை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன.மேஜர் மறைவிடத்தை விட்டு வெளியேறி அந்தக் காயம் பட்ட வீரனை இழுத்துக் கொண்டு மீண்டும் மறைவிடத்தை அடைந்தது பத்துப் பதினைந்து வினாடிகளுக்குள்தான் இருக்கும். அந்தக் காயம் பட்ட வீரன் மேலும் ஒரு குண்டடி கூடப் படாமல் பாதுகாப்பாய் மறைவிடதில்.. ஆனால் அந்தப் பதினைந்து வினாடிகளுக்குள் மேஜரின் உடம்பில் 18 குண்டுகள் துளைத்து விட்டிருந்தன. அந்தக் குண்டடிகளுக்கும் மத்தியுல் அந்தக் காயம் பட்ட வீரனை மறைவிடத்துக்கு இழுத்து வந்தது அவர் மன உறுதியேயன்றி வேறல்ல. மறைவிடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்த மேஜரைப் பார்த்ததும்தான் அவர் என்னைப் போகவிடாததின் நோக்கம் புரிந்தது.கண்ணீருக்கிடையில் "ஏனைய்ய இப்படிச் செய்தீர்கள் "என்று அவரைக் கேட்ட போது சாகும் தருவாயில் அவர் சொன்னது " இராணுவத்தில் நான் மேஜராக சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில் --- முதலில் என் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் அதன் பின் எனக்குக் கீழே பணி புரிவோரின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் சத்தியம் செய்தேன்.எந்த நிலையிலும் என் சொந்தப் பாதுகாப்பு கடைசி முக்கியதுவமே பெறும் எனவே நான் உயிரோடிருக்கும் வரை என் படைப்பிரிவினர் யார் உயிரையும் பணயம் வைக்க மாட்டேன்". இதுவே அவர் சொன்ன கடைசி வாக்கியமும் ஆகிப் போனது.

இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் "Point 4875" மலை முகட்டில் காவலுக்கு நிற்க்கும் போதும் இந்தக் காட்சி என் மனத்தை வியாபிக்கிறது. அதுவும் அந்த மேஜர் ,என்னைத் துளைக்க வேண்டிய தோட்டாக்களை தன் மேல் வாங்கி மடிந்த காட்சி... அப்பப்பா.... சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பது எனக்கும் கண்டிப்பாக தெரியும் ஐயா ஏனென்றால் நான் வாக்கிய உதாரணத்துக்காக அன்றி அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் " என்று சொல்லி நிறுத்தினார்.


விவேக் ப்ரதானுக்கு யாரோ தன்னை சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.பேச நா எழவில்லை. கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான். பிறகு நினைத்துக் கொண்டவன் போல் தனது லாப் டாப்பை மூடி சீட் பக்கத்தில் வைத்தான். கடைமையும் , வீரசாகசங்களும் தியாகமும் வாழ்க்கையின் சாதாரண அங்கமாக இருக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு முன்னால் எப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்வதாக காட்டிக் கொண்டாலும் அது ஒரு பகட்டாகவோ அல்லது அவரை இழிவு படுத்தும் செயலாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.


இரயில் வேகமிழந்து மெதுவாக பிளாட்பாரத்தினுள் நுழைந்தது. சுபைதார் சுஷாந்த் சிங் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.விவேக்கைப் பார்த்து புன்னகைத்து "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்சி " என்று கை நீட்டினார்.


விவேக் ப்ரதான் தன் நடுங்கும் கரத்தால் அவர் கைகளைப் பற்றி குலுக்கிய வண்ணம் இந்தக் கைகள்தானே கரடு முரடான மலைகளை ஏறிக்கடக்கிறது,நாட்டை காப்பாற்ற துப்பாக்கி விசையை இழுக்கிறது, இந்தியாவின் மூவர்ணக் கொடியை அயராது பறக்க விட்டு பாதுகாக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.உடனே அனிச்சையாக அவரைப்பார்த்து ஒரு சல்யூட் அடித்தான்.


பின் குறிப்பு : இதில் வர்ணிக்கப் பட்டுள்ள கார்கில் 4875 மலை முகட்டு வெற்றி ஒரு உண்மை சம்பவம்.மேஜர் விக்ரம் Bபத்ரா, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில், தனக்கு கீழ் பணி புரியும் வீரரை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்தார்.அவருடைய வீர மரணத்திற்குப் பிறகு நமது தேச இராணுவத்தின் மிக உயரிய "பரம வீர் சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.இது போன்ற வீர புருஷர்களால்தான் நாம் சீறி வரும் தோட்டக்களைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது.


Virtue does not always demand a heavy sacrifice - only the willingness to make it when necessary. ---------(Frederick Dunn)


பின்... பின் குறிப்பு : இந்தக் கதையை, சம்பவத் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.ஆனால் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுக்காது எனக்கு. உங்களுக்கும்தானே.


அன்புடன்......ச.சங்கர்