Friday, February 16, 2007

நன்றி Any indian . Com

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போன போது எனி இந்தியன்.காம் புத்தகக்கடை ஸ்டால் நம்பர் 326 க்கும் போயிருந்தேன் (13/1/07)

பரிசுப்போட்டி அறிவிச்சிருப்பாங்க போலிருக்கு..குலுக்கல் முறையில் முதல் பரிசு உங்களுக்கு அப்படீன்னு மெயில் வந்தது.

எனி இந்தியன்.காம் தளத்திற்குப் போய் உங்களுக்கு தேவையான (குறிப்பிட்ட தொகைக்குள்தான் :)) புத்தகங்களை தேர்ந்தெடுத்து மடல் அனுப்புங்க.பரிசு புத்தகங்களை 2/3 வாரங்களுக்குள் அனுப்பி வைக்கிறோம் அப்படீன்னு மடல் வந்தது.

நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்

ரப்பர்---------------------ஜெயமோகன்
சாயாவனம்-----------------ச.கந்தசாமி
ஒரு வயல் வெளியின் கதை---சூர்யகாந்தன்
அநாமதேயக்கரைகள்-------சதாரா மாலதி

புத்தகங்களை தேர்ந்தெடுத்து மடல் அனுப்பிய 2 நாட்களுக்குள் குரியரில் அனுப்பி வைத்து விட்டார்கள்.

சூப்பர் பாஸ்ட் சர்வீஸ்....ரொம்ப தாங்ஸுங்கோவ்

அன்புடன்...ச.சங்கர்

Friday, February 09, 2007

தமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா

கடந்த சில மாதங்களாகவே வரிசையாக முல்லை பெரியார், காவிரி, பாலாறு என நதி நீர் பிரச்சினைகள் தலைப்புச் செய்திகளை விடாமல் பிடுத்துக் கொண்டிருக்கின்றன.

அண்டை மாநிலம் (ஞாயமாகவோ அநியாயமாகவோ) நீர் தராததற்காக குறை பட்டுக்கொண்டு நாம் இந்திய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு பற்றியெல்லாம் தேவையா என வினா எழுப்புகிறோம் (என்னையும் சேர்த்துத்தான்)

ஆனால் இதிலெல்லாம் இந்திய ஒருமைப் பாட்டை ஒரு தமிழர் நிலையிலிருந்து சிந்திக்கின்றோம். ஒருகேரளர்,ஆந்திரர் அல்லது கன்னடர் நிலையிருந்தால் நமது பார்வை இவ்வாறாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

இங்கு நான் சரி தவறு என்பது பற்றி பேசவில்லை .நிலைபாட்டைப் பற்றி பேசுகிறேன்.

இது பற்றி எனக்கு மேலும் தோன்றும் சில சிந்தனைகள்.

இதற்கு நிரந்தரத் தீர்வு சண்டையில் இல்லை.I'll make an offer which even your mother cannot resist என்று ஆங்கிலப் படத்தில் ஒரு வசனம் வரும்.அதுபோல உரிமை,நிலவரம்,தேச ஒருமைப்பாடு,இறையாண்மை என்பதெல்லாம் விட்டு நல்ல ஒரு ஒப்பந்தத்தின் மூலமே...அந்த ஒப்பந்தத்தை (கடை பிடித்தால் நீர் கொடுக்கும் மாநிலத்துக்கு நல்ல லாபம் இல்லையேல் பெருத்த நஷ்டம் என்பது போல்) செய்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு பிறக்கும்.

இப்படி சிந்திப்போமே..ஆண்டாண்டு காலமாய் சண்டையிடுவதை விட்டு..காவிரி தமிழகத்தில் ஓடவில்லையெனில் விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் என்ன செய்வோம் என்று யோசித்து அதனடிப்படையில் என்ன திட்டங்கள் தேவையோ அதை செயல் படுத்துவதே இன்றைய தமிழகத்தின் தலையாய கடமை.அதை விடுத்து கோர்ட் கேஸ் என அலைவதெல்லாம் கண்துடைப்பாக இருக்குமே அன்றி மக்களுக்கு நல்ல விடிவை/நிரந்தர தீர்வை அளிக்காது.இது பாலாறு, முல்லை பெரியார் அனைத்திற்கும் பொருந்தும். தண்ணிரே இல்லாத அரபு தேசங்களும் பாலை வனங்களும் முன்னேறவில்லையா? அங்கு பெட்ரோல் வளம் என்று சொல்லாதீர்கள்..தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி, கட்டுமானம், கல்வி போற முன்னேற்றங்கள் நிறைய இருக்கிறது...முதலில் நம்மிடம் உள்ளவற்றை நாம் சரியாக பயன்படுத்துவோம்.

காவிரி.பாலாறு,முல்லை பெரியார் என நதி பங்கீட்டில் நம் உரிமைக்காக போராடும் அதே நேரத்தில் மழை நீரை சேகரிப்பது, நிலத்தடி நீரை அதிகரிக்கத் திட்டங்கள்,கடல் நீரை மாற்றும் திட்டம், நீரை வீணடிக்காத வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ,நீர் ஆதாரங்கள் , ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை, ஆறுகளில் கழிவு நீரை கலந்து கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு கடும் நடவடிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்தி நேர்மை தவறாமல் பாரபட்சமின்றி ஆட்சியாளர்கள் நடந்து கொண்டாலே நாம் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்தும் அவசியமே வராது.அவர்களே உங்களுக்கு நாங்கள் தண்ணீர் தருகிறோம் எங்களுக்கு இது தாருங்கள் அது தாருங்கள் என நம்மிடம் நிறைந்துள்Lள்aஅ செல்வங்களுக்காக யாசிக்கும் நிலை வரும்.


அடுத்தவரிடம் நாம் கையேந்துவதை கடமையாகவும் உரிமையாகவும் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது...அது அழிவின் ஆரம்பம்..ஆனால் தமிழகத்தில் தண்ணீரைப் பொருத்தவரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது...சீக்கிரம் விழித்துக் கொண்டால் நமக்கு நல்லது .

அன்புடன்...ச.சங்கர்

Tuesday, February 06, 2007

கண்ணால் காண்பதும் பொய்.....







மெயிலில் வந்தது...உங்கள் பார்வைக்கு


மீதி போட்டோக்களின் மீது மவுசை வைத்து கிளிக்கி பார்த்துக் கொள்ளுங்கள் :)

வெள்ளைச்சாமி

கிருஸ்மஸ¤க்கு முதல்நாள் இரவு .. வெள்ளைச்சாமி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தான்.வெள்ளைச்சாமிக்கு 9 வயது .கடந்த மூன்று மாதமாக பட்டணத்தில் ஜெயகுமார் கதிரேசன், யெஸ்தர் மேரியின் வீட்டில் எடுபிடி பையனாக வேலை பார்க்கிறான்.

முதலாளி மனைவியுடனும் மற்ற வேலையாட்களுடன் சர்சுக்கு போவதற்காய் காத்திருந்து , பின் மெதுவாக முதலாளியின் மேசையை திறந்து ஒரு பேனாவை எடுத்தான்.தனக்கு முன்னால் ஒரு கசங்கிய காகிதத்தை விரித்து வைத்து எழுதத் தொடங்கினான்.

எழுத ஆரம்பிக்கும் முன்னதாக மீண்டும் ஒரு முறை பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சலனமற்றிருந்த கதவுகளும்,சன்னல்களும்,பீரோக்களின் இருட்டு மூலைகளும் யாருமற்ற அவன் தனிமையை உறுதிப் படுத்த சின்ன நிம்மதிப் பெருமூச்சுடன் எழுத ஆரம்பித்தான்.

அன்புள்ள தாத்தா மாரிக்கு,
வெள்ளைச்சாமி எழுதும் கடிதம்.
தாத்தா...அப்பா அம்மா இல்லாத எனக்கு நீதான் எல்லாம்.நீ நல்லா இருக்கியா ?

எழுத ஆரம்பித்தவன் சிறிதளவே கண்ணை உயர்த்தி தனக்கு முன்னால் உள்ள சிலையில் பிரதிபலிக்கும் மெழுகுவத்தியின் ஒளியை பார்த்தான். மனதில் தாத்தாவின் உருவம் ஒரு அறுந்த நூலாம்படை போல் லேசாக அசைந்தது.

தாத்தாவுக்கு 65 வயது. ஒல்லியான தேகம்தான் என்றாலும் மிகவும் சுறுசுறுப்புமானவர்.எப்பொழுதும் சிரித்த முகமாக வளைய வருவார்.ஊரில் பண்ணையார் வீட்டில் காவல்காரன் வேலை.
பகலெல்லாம் குடிசையில் தூங்குவார் அல்லது பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் பெண்களிடம் குறும்பாக பேசி சீண்டிக் கொண்டிருப்பார்.இரவானால் ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு கம்பைத் தட்டிக் கொண்டே காவலுக்கு கிளம்பி விடுவார்.கருப்பு மணியும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே வாலை ஆட்டியபடி அவர் பின்னால் புறப்பட்டு விடும். மணி பார்க்கத்தான் சாது.பழகியவர், பழகாதவர் யாரையும் கடிக்காது.ஆனால் எப்போதும் யார் வீட்டிலாவது கோழியை திருடி அல்லது யார் வீட்டு தோட்டத்த்லாவது புகுந்து என்று வாரத்துக்கு ஒரு முறையாவது செத்துவிடுமோ என்கிற அளவுக்கு "நாயடி " படும். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் எப்படியோ பிழைத்து வந்து விடும்.

இந்நேரம் தாத்தா கிராமத்து சர்ச்சுக்கு முன்னால் நின்று வேலியைப் பிடித்துக் கொண்டு கையிலிருக்கும் கம்பால் செருப்பில் ஒட்டியிருக்கும் ஈர மண்ணை தட்டிக் கொண்டிருப்பார்.குளிரில் உடம்பை ஒடுக்கிக் கொண்டு பண்ணையில் பத்து பாத்திரம் தேய்க்கும் முனியம்மாளிடம் " என்ன தாயி..பொடி போடுரையா " என்று பொடி மட்டையை நீட்டுவார்.
முனியம்மாள் ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் வைத்து உறுஞ்சி பொடியின் காரத்தால் ஊகாரமிட்டு தொண்டை செருமும் போது " நல்ல காரமுல்லா " என்று சொல்லி பெருமிதத்துடன் சிரிப்பார்.
சில சமையம் தாத்தா மணியின் மூக்கில் பொடியை தூவி விட்டு சிரிக்க அது கோவத்துடன் தலையை ஆட்டிக் கொண்டே நகர்ந்துவிடும். ஆனாலும் பழக்க தோஷத்தால் குலைக்காமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டே போகும்.
உடலை இம்சிக்கும் இன்பமான குளிர், புல்லின் மேல் லேசாகப் படர்ந்த பனி, நிலா வெளிச்சத்தில் தெரியும் வீடுகள், வானத்தில் கொல்லென்று பூத்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் என்று கிராமத்தில் டிசம்பர் இரவு அருமையாக இருக்கும்

வெள்ளைச்சாமி நினைவலையிலிருந்து விடு பட்டு மீண்டும் பெருமூச்சு விட்டபடி எழுதுவதை தொடர்ந்தான்
" தாத்தா நேத்து நா சின்னப் பாப்பாவை தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிடே இருக்கும் போது என்னையறியாம தூங்கிட்டேனா.திடீர்னு பாப்பா முளிப்பு தட்டி சிணுங்கிச்சு .பாப்பாவை ஏண்டா அள விட்ட அப்படீன்னு எனக்கு செமத்தியாக அடி விளுந்திச்சு.மொதலாளி என்னை தலை மயிரை பிடிச்சு தரதரன்னு ரோட்டுக்கு இழுத்து வந்து மிதி மிதின்னு மிதிச்சுட்டாரு.அப்புறமும் கோபம் தீராம பெல்ட்டால வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.இப்பமும் எளிதிக்கிட்டு இருக்கும் போது கையில பெல்ட் பட்ட இடம் விண்ணுனு வலிக்குது.

இப்பிடித்தான்...போன வாரம் வீடு தொடைக்கும் போது... சரியா தொடைக்கலைன்னு சொல்லி மொதலாளியம்மா அழுக்கு தண்ணியை என் மூஞ்சில வீசியடிச்சாங்க.இதைப் பாத்து டிரைவரு ,தோட்டக் காரரு, மத்த எல்லாரும் விளுந்து விளுந்து சிரிச்சாங்க.எனக்கு அளுகை அளுகையா வந்துச்சு.ஆனா அவங்க முன்னாடி அளக்கூடாதுன்னு பேசாம நின்னேன்.ஆம்பளப் புள்ள அளுவக்கூடாது அப்படீன்னுட்டு நீ தான தாத்தா அடிக்கடி சொல்லுவ.நல்ல வேளையா மூஞ்சில அவங்க ஊத்துன அளுக்கு தண்ணி வளிஞ்சுக்கிட்டு இருந்ததால கண்ணுல மளுக்குனு கட்டுன தண்ணியை யாரும் பாக்கலை.

அப்பப்ப டிரைவரு ,தோட்டக் காரரு இவங்க குடிக்க சாராயம் வாங்கியார என்னை அனுப்புவாங்க..அப்படியே சமையக்கட்டுல போயி திங்குறதுக்கு எதுனா திருடிக்கிட்டு வந்து தர சொல்லுவாங்க.செய்யலைன்னா அடிப்பாங்க.

சாப்புடறுதுக்கு எனக்கு பளைய சோறு தவிர வேர ஒண்ணும் கிடைக்காது.வீட்டுல ஓரமா நடை பாதையிலதான் படுத்து தூங்குறேன்.அதுவும் ராத்திரி குழந்தை முளிச்சிக்கிட்டு அளுதா என் தூக்கம் அம்புட்டுதான்.

தாத்தா..என்னிய இக்கிருந்து எப்படியாச்சும் கிராமத்துக்கே கூட்டிக்கிட்டு போயிருங்க...உங்க காலைப் பிடிச்சு கெஞ்சி கேக்குரேன்..என்னால இங்க தாங்க முடியலை...அளுகை அளுகையாவருது ...நீங்க எப்படியாவது கூட்டிக்கிட்டு போலையின்னா நா செத்தே போயிருவேன்"

எழுதும் போதே வெல்ளைச்சாமியின் கண்களில் கண்ணீர் முட்டி நெஞ்சிலிருந்து ஒரு கேவல் புறப்பட்டது.கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுக்கு படிந்த புறங்கையால் துடைத்துக் கொண்டே மேலும் எழுதினான்.

" தாத்தா..அங்க வந்து நான் உங்களுக்கு வெத்தலை இடிச்சு தாறேன்...உங்களுக்கு பிடிக்காத எதுனா செஞ்சா என்னை அடிங்க..மிதிங்க... வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கேன்னு நெனைச்சீங்கன்னா மாடு மேய்க்க கூட போயிட்டு வாரேன்..அதுவுமில்லையின்னா கெஞ்சி கூத்தாடி பண்ணையார் வீட்டில மாட்டுக் கொட்டாயில சாணி அள்ளுறேன்.ஆனா இங்க என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.கிராமத்துக்கு ஓடி வந்துரலாமுன்னு பாத்தா கையில காசில்லை. நடந்தே வர வளி தெரியாது.தாத்தா நான் பெரியவனாயிட்டா உன்னை வச்சு நல்லா காப்பாத்துவேன்..நீ செத்துட்டியானா உனக்காக நான் பிரார்த்தனை பண்ணுவேன்..எங்க அம்மாவுக்கு பண்ற மாதிரி.என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிக்கிட்டு போயிரு".

"அப்புறம் தாத்தா....இங்க பட்டணம் கிராமத்தை விட ரொம்ப பெருசா இருக்கு..நெறைய ரிக்சா,ஆட்டோ,பஸ்ஸெல்லாம் ஓடுது...இங்க சின்னப் பசங்க டயரு உருட்டி வெளையாட மாட்டேங்குறாங்க...அளகளகா சைக்கிள் விட்டுக்கிட்டு போறாங்க..இங்க கடையில .தொட்டில அழகழா மீனு வச்சுருக்காங்க...நா ஒரு நா கடத்தெரு வளியா போகும் போது பாத்தேன்.அப்புறம் கசாப்பு கடையில ஆடு ,மீனு, கோளி, முயலு நம்ம ஊர்ல புடிப்பமே காடை அதெல்லாம் கூட விக்கிறாங்க...பாத்தேன்...எங்கேருந்து பிடிச்சுக்கிட்டு வருவாங்களோ தெரியாது.அப்புறம் தாத்தா...ஊருல பொங்கப் பானை வச்சு சாமி கும்பிடும் போது எனக்கு தனியா ஒரு கரும்பு எடுத்து வச்சுரு.யாரு கேட்டா எம் பேரனுக்கு..வெல்ளைச்சாமிக்கு அப்படீன்னு சொல்லிரு..யாருக்கும் வெட்டி குடுத்துராத".

வெள்ளைச்சாமிக்கு மீண்டும் பெரு மூச்சு வந்தது...பொங்கலுன்னா தாத்தா கூட காட்டுக்கு .மஞ்சக் கெழங்கு ..பூளைப் பூ செடி எல்லாம் புடுங்கிட்டு வர போறது ஞாபகம் வந்திருச்சு.தாத்தா இவனையும் கூடவே கூட்டிக்கிட்டு போயிருவாரு..தாத்த காட்டுக்குள்ளார போகும் போது சத்தம் போட்டுக்கிடே போவாரு.கட்டுலேருந்து வித விதமா பறவைங்க கத்துற சத்தம் வரும்.அதக் கேட்டு வெள்ளைச்சாமியும் சந்தோஷமா சத்தம் போட்டுக்கிடே போவான்.போகும் போது எங்கிட்டிருந்தாவது முயலோ...காடையோ விருட்டுன்னு ஓடும்.."பிடி..பிடி ன்னு தாத்தாவும் பேரனும் துரத்திக்கிட்டே ஓடுவாங்க..சில சமையம் பிடி படும்..பல சமையம் ஓடிரும்..அப்பல்லாம் தாத்தா..களவாணிப் பய புள்ள ..ஓடிருச்சு" அப்படீன்னு சொல்லிக்கிட்டே வெள்ளைச்சாமியைப் பார்த்து சிரிப்பாரு.தாத்தா மஞ்சக் கெழங்கு, மாவிலை , பூளைப் பூ எல்லாம் பறிச்சுட்டு பண்ணியார் வீட்டுக்கு வந்ததும் பொங்கலுக்கு தோரணம் கட்ட ஆரமிச்சுருவாரு...வெள்ளைச்சாமி அம்மா ராக்காயி இருந்த போது அவளும் பண்ணயார் வீட்டுலதான் வேலை செஞ்சா. பண்ணையார் வீட்டுல வேலை செய்யிற பூவாயி அக்காதான் வெள்ளைச்சாமிக்கு ரொம்ப பிடிச்ச அக்கா.எப்பவும் சுறு சுறுன்னு ஏதாவது செய்துகிட்டே இருக்கும்..இவனுக்கு திங்கிறதுக்கு ஏதாவது பண்டம் கொண்டு வந்து குடுக்கும்.ஒரு வேலையும் இல்லாத நேரத்துல வெள்ளைச்சாமிக்கு எழுதப் படிக்க கத்துக் குடுத்ததும் பூவாயி அக்காதான்.அம்மா செத்தப்புரம் கொஞ்ச நாள் பண்ணையார் வீட்டு சமையல் கட்டுல எடுபிடியா இருந்தான்.அப்புறம் அவனை பட்டணத்துக்கு அனுப்பிட்டாங்க.

வெள்ளைச்சாமி தொடர்ந்து எழுதினான். " கண்டிப்பா வந்துருங்க தாத்தா..வந்து என்னை கட்டாயம் கூட்டிக்கிட்டு போயிருங்க " " இங்க ரொம்ப அடிக்கிராங்க..சாப்பாடு போட மாட்டேங்கிறாங்க..சொல்ல மறந்துட்டனே ...ஒரு நா மொதலாளி என் தலைல படார்னு அடிக்க நான் மயக்கமாயி விழுந்துட்டேன்..தாத்தா இந்த எடத்துல இருந்து எப்படியாவது என்னை கூட்டிக்கிட்டு போயிரு..நம்ம கிராமத்துல பேச்சி கிழவி,பொன்னாத்தா,ராசப்பன் எல்லோரையும் கேட்டதா சொல்லு..மணி இன்னும் இருக்கா ?

இப்படிக்கு உன் அன்புள்ள பேரன் வெள்ளைச்சாமி ..எழுதி முடித்த பின் " தாத்தா..கண்டிப்பா வந்துருவல்ல." என்று பின் குறிப்பாக எழுதினான்.எழுதிய பேப்பரை நாங்காக மடித்து முந்தைய நாள் வாங்கி வைத்திருந்த கவரில் போட்டு ஒட்டினான்.பின் கொஞ்சம் யோசித்து கவரின் மேல் முகவரியை எழுதினான்.

"கிராமத்திலி இருக்கும் மாரி தாத்தாவிற்கு " பிறகு கொஞ்சம் தலையை சொரிந்தவாறு யோசித்து கீழே " முத்து மாரியப்பன்" என்று தாத்தாவி முழுப்பெயரையும் எழுதினான்.அதற்கு மேல் எழுத தெரியவும் இல்லை ...தோன்றவும் இல்லை .பிறகு கவரை எடுத்துக் கொண்டு போட்டிருந்த கிழிந்த அரைக்கை பனியனுடனே தெருவுக்கு ஓடினான்.

முதல் நாள் நாட்டார் கடையில் கவர் வாங்கிய போது நாட்டார் அவனுக்கு எப்படி தபாலை போஸ்ட் பாக்ஸிலிருந்து தபால்காரர் எடுத்துக் கொண்டு தபாலாபிஸிற்கு கொண்டு போய் அங்கிருந்து அது மெயில் வண்டி மற்றும் புகை வண்டியில் பயணப்பட்டு அவன் ஊருக்கு போய் சேர்ந்து அங்குள்ள தபால்காரர் அதை எடுத்துக் கொண்டுபோய் அவன் தாத்தாவிடம் கொடுப்பார் என்று சொல்லியிருந்தார்.

அதை நினைத்துக் கொண்டே புன் முறுவலுடன் வெள்ளைச்சாமி அந்த விலை மதிப்பில்லாத கடிதத்தை அங்கிருந்த சிவப்பு தபால் பெட்டியினுள் போட்டான்..

ஒரு மணி நேரம் கழித்து கடிதத்தின் நம்பிக்கை தந்த நிம்மதியில் வெள்ளைச்சாமி அமைதியாக தூங்கப் போனான்.

அவன் கனவில் போகியன்று கொளுத்தும் நெருப்பு தக தகவென்று எரிந்து கொண்டிருந்தது.நெருப்பின் அருகே தாத்தா காலாட்டிய படி அமர்ந்து பூவம்மாளுக்கும்,பொன்னாத்தாளுக்கும் வெள்ளைச்சாமியின் கடிதத்தை படித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.அவருக்கு அருகில் மணி வாலாட்டிய படி படுத்திருந்தது.நிறைய சிறுவர்கள் கையில் பறை வைத்துக் கொண்டு டப்..டப் என்று அடித்தவாறு நெருப்பை சுற்றி சுற்றி குதித்த படி வந்தனர்.அனைவரது முகமும் வெள்ளைச்சாமி முகமாகவே இருந்தது.