Sunday, February 17, 2013

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா

விஸ்வரூபம் படம் பார்த்தேன் .படம் டெக்னிகலாக நன்றாக எடுக்கப் பட்டிருந்தாலும் அதைத் தவிர யோசித்துச் சிலாகிக்கும் படியோ , திரும்பப் பார்க்கத் தூண்டும் படியோ பெரிதாக ஒன்றும் இல்லை.நிறைய காட்சிகளை மானாவாரியாக எடுத்துத் தள்ளி விட்டு பின் அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒட்ட வைத்து படம் பண்ணியது போலவும் , ” இரண்டாம் பகுதியில் ஒரு வேளை விளக்கம் சொல்லுவார் போல” என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படத்தில் லாஜிகல் சந்தேகங்களும் இருக்கிறது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியதெல்லாம் அபத்தம். முஸ்லிம் பெயரில் எழுதும் தமிழ் பதிவர்கள் நிறைய பேர் அந்த அபத்தத்தை வரிந்து கட்டிக் கொண்டு சப்போர்ட் பண்ணி எழுதுவது அதைவிட அபத்தமாக உள்ளது.முதல்வர் ஜெயலலிதா வருமுன் காப்போன் திட்டம் போல “சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விடாமல் போவதைப் பாதுகாக்கவே இந்தப் படத்தை தடை செய்தேன் “ என்று கூறியது காமடியின் உச்சகட்டம் மட்டுமல்லாது முஸ்லீம்களை சகிப்புத் தன்மை இல்லாத வில்லன்கள் போல சித்தரிக்கும் மாயைக்கு வழி வகுத்து மேலும் இமேஜ் டேமேஜ் செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இத்தனை பரபரப்பிற்கும் பின்னாலும் கூட இந்தப் படம் கமலின் மற்ற இண்டெலக்சுவல் ??? படங்கள் போலவே பெரு நகரங்கள் தவிர மற்ற இடங்களில் ” ஓட்ட “ வேண்டியிருக்கும்” என்பது என் கணிப்பு.




போனவாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்னொரு விவகாரம் “ ஹெலிகாப்டர் ஊழல் “ .டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நான்தான் இதை முதன் முதலில் கண்டு பிடித்தேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டு தினம் தினம் சில ஆவணங்களையும் வெளியிட்டுக் கொண்டு மத்திய அரசாங்கத்தை குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.மந்திரிகள் எம்பிக்கள் உட்பட காங்கிரஸ்காரர்கள் தினம் தினம் வந்து , வழ வழ , கொழ கொழ என பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இருவருமே இப்படி அடித்துக் கொள்ளத் தேவையில்லை.இந்த அரசாங்க ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும் ஊழலை திருத்தவோ சரி செய்யவோ எதுவும் செய்யாது என்பதனை அவர்களுடன் சேர்த்து மக்களும் நன்கு அறிவார்கள்.இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது ? இதில்(ஹிலிகாப்டர் விவகாரத்தில்) என்ன ஊழல் நடந்தது யார் யார் பெயர் அடிபடுகிறது என்றெல்லாம் எழுதப் போவதில்லை.டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இரண்டு நாள் பாருங்கள்..எந்த எபிசோடிலிருந்து பர்த்தாலும் உடனே புரியும் மெகா சீரியல் போல தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்.ஆனால் மெகா சீரியல் போலவே முடிவுதான் இல்லை.



போன வாரம் வந்த இன்னொரு செய்தி சில மாதங்களுக்கு முன் ஹரியானா மானில முன்னாள் மந்திரி கோபால் காண்டா என்பவரது தொடர் மிரட்டலால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படும் கீதிகா என்ற பெண்ணின்( இவர் அந்த மந்திரியால் நடத்தப் பட்டு வந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் ) தாயாரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதுதான். காரணமாக சொல்லப் படுவது அதே முன்னாள் மந்திரி , கீதிகா கேசை வாபஸ் வாங்கச் சொல்லி விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சல்தானாம். அதிகார மற்றும் பணபலமுள்ளவர்களுக்கு முன் கோர்ட் கேஸெல்லாம் ஒன்றும் பண்ணி விட முடியாது என்பதற்கு இந்தக் கேஸும் நல்ல உதாரணம்.கேஸை இழுத்தடித்தே ஒரு வழி பண்ணி விடுவார்கள்.சாமானியர்களின் கேஸ் பொது மக்கள் அல்லது மீடியாவின் பார்வையில் இருந்தால் மட்டுமே ஏதாவது உருப்படியாக நடக்க வாய்ப்புள்ளது டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு போல.இல்லாவிட்டால் அதோ கதிதான்.இந்த கேஸ் பற்றி தொலைக்காட்சியில் ஒலிபரப்பான விவாதத்தில் முன்னாள் போலிஸ் அதிகாரி கிரண் பேடி சொன்னது கவனத்தில் கொள்ளத்தக்கது.நமது குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரது /இழைத்தவரது உரிமை, பாதுகாப்பு பற்றியே பேசுகிறது,குற்றம் இழைக்கப் பட்டவரது அவர் சார்ந்தவரது உரிமை,பாதுகாப்பெல்லாம் பேசப்படுவது குறைவு. அவர் அரசு தரப்பாகி விட்ட படியால் போலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் தயவில் நீதியை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்,அரசு இயந்திரம் எப்படி செயல்படும் என்பது அனைவரும் அறிந்த்தே.இதனால் குற்றம் இழைக்கப்பட்டவர் ஏழையென்றால் அவர் நிலை பரிதாபத்துக்குறியதாகி விடுகிறது.இதனால்தான் பாதிக்கும் மேல் பாதிக்கப் பட்டவர்கள் நீதியே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்கள்.சாட்சி பாதுகாப்பு போன்ற உடனடி சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டால்தான் இந்த நிலை மாறும்.அது வரை ஏழைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு இரக்கப் பட்டு ஐயோ பாவம் என்று சொல்லி விட்டு விட்டு விடாமல் ’ அவ்வப்போது( சென்சேசனலாக இருக்கும் போது மட்டும்) குரல் கொடுக்காமல், நீதி கிடைக்கும் வரை அதை தொடர்ந்து ஃபோகஸில் வைக்க குரல் கொடுப்பது நம் அனைவரது கடமையாகிறது.



அன்புடன்...ச.சங்கர்

No comments: