Monday, June 25, 2012

படித்ததில் ரசித்தது

பூவையின் முகம் தாமரை ,கைகளோ காந்தள் மலர்

நள மகாராஜன் தமயந்தியுடன் திருமணம் முடிந்ததும் தேரில் தன்னாட்டுக்கு கூட்டிச் செல்கிறான்.வழியில் சோலையில் சில இயற்கைக் காட்சிகளை தமயந்திக்குக் காட்டுகிறான்.அதிலொன்று

“ ஒரு பெண் பூப்பறிக்கிறாள்.அவளது முகத்தையே தாமரை என்று எண்ணிக்கொண்டு  வண்டுகள் மொய்க்க வருகிறதாம்.அப்படி மொய்க்க வரும் வண்டுகளை அவள் கைகள் கொண்டு தடுக்கிறாள்.அப்படியும் அந்த வண்டுகள் போகாமல் அவள் கைகளைக் காந்தள் மலர் என்றெண்ணி மொய்க்கப் பாய அதனால் பயத்தால் நடுங்கும் அந்தப் பெண்ணைப் பார்.” என்று காட்டுக்றான்

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.


நள வெண்பா -புகழேந்திப் புலவர்

இதே காட்சியின் ஒரு பகுதியைக் கண்ணதாசன் இப்படி ஒரு படத்தில் பாடலாக எழுதியிருக்கிறார்.

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன் னிடம் உண்மை கூற...
                                                   (நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்)

இரு வல்லவர்கள் படத்தில் பி.சுசிலா,டி எம் எஸ் குரலில் பாடலும் சூப்பர் ஹிட்

பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயமாக.

http://youtu.be/gN1ERkg_dXQ

அன்புடன்...ச.சங்கர்

Sunday, May 13, 2012

அன்னையர் தினம் - 13th May

இன்று அன்னையர் தினம்

இந்த உலகத்தில் நல்ல ஒழுக்கமும் வீரமும் உடையவனாகக் கூடிய நல்ல மகனைப் பெற்றுத் தருதல் என்னுடைய தலையாய கடமை என்று பறை சாற்றிய வீரத் தமிழ்த் தாய்க் குலத்திற்கு "அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் "




ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிரு வாள் அருஞ்சமம் முருக்கிக்

களிரு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
புலவர்..பொன்முடியார், புறநானூறு..பாடல் எண் 312

உலகில் மகனைப் பெற்றுத் தருதல் என் தலையாய கடமை.அந்த மகனை சான்றோனாக ஆக்குதல் தந்தையின் கடமை.அவன் படைத் தொழிலில் சிறந்து விளங்க அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமை.அவனை நல்வழியில் ஈடுபடச் செய்து ஒழுக்கமுடையவனாகச் செய்வது அரசனின் கடமை.அந்தச் சிறந்த மகனானவனுக்கு கடமை என்னவென்றால் ( நாட்டைக் காக்க ) போர்க்களத்தில் போர் செய்து யானைகளை வீழ்த்தி வெற்றியோடு திரும்பி வருதலாகும்.
 
அன்புடன்...ச.சங்கர்