Friday, July 22, 2005

இரண்டு கோப்பை தேநீர்

ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டவரா நீங்கள்?

அப்ப மேல படியுங்க.

ஒரு தத்துவ பேராசிரியரிடம் மாணவர்கள் சொன்னார்கள்"ஐயா,நேரமின்மையே மிகப் பெரிய பாரமாக எங்களை அழுத்துகிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டோம்.சொந்த வேலைகலையோ குடும்பத்தையோ கவனிக்க நேரம் கிடைப்பதே இல்லை.இதுவே பெரும்பாலானோரின் தலையாய பிரச்சினை"என்று கூறினர்.
அந்த ஆசிரியர் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை.பிறகு ஒரு பெரிய காலி ஜாடியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.ஒரு மாணவனை கூப்பிட்டு கால்·ப் (GOLF)பந்துகளால் அந்த ஜாடியை நிரப்பும்படி சொன்னார்,அவனும் அவ்வண்ணமே செய்தான்.
பின்னர் அவர் மாணவர்களை பார்த்து "ஜாடி நிரம்பி விட்டதா" என்று கேட்டார்.அவர்கள் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் ஒரு பெட்டி நிறய கோலி குண்டுகளை எடுத்து அந்த ஜாடியில் போட்டார். ஜாடியை லேசாக அசைக்க கோலிகள் கால்·ப் (GOLF)பந்துகளின் இடைவெளிகளை சென்று நிரப்பின.மாணவர்களை பார்து "இப்போது ஜாடி நிரம்பி இருக்கிறதா" என்று கேட்டார். அவர்கள் மீண்டும் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் புன்முறுவலுடன் ஒரு பெட்டி நிறைய குறுமணலை எடுத்து ஜாடியில் போட்டார்.ஜாடியை லேசாக அசைக்க மணல் கோலிகளின் இடைவெளிகளில் சென்று நிரம்பியது.மாணவர்களை பார்த்து ஜாடி நிறம்பி விட்டதா என்று கேட்டார்.அவர்கள் மீண்டும் ஆம் என்றனர்.
ஆசிரியர் மேஜைக்கடியில் வைத்திருந்த இரண்டு கோப்பை தேநீரை ஜாடிக்குள் ஊற்றி மணல் துகள்களுக்கிடையிலான வெற்றிதத்த நிறப்பினார்.வகுப்பில் சிரிப்பலை அடங்கிய பின் ஆசிரியர் பின் வருமாறு சொன்னார்.
"மாணவர்களே இதிலிருந்த்து நான் உங்களுக்கு உணர்த்த விரும்புவது என்னென்றால் இ¢ந்த ஜாடி உங்கள் வாழ்க்கையை குறிக்கிறது.கால்·ப் பந்துகள்தான் முக்கியமான வேலைகள்-கடவுள்,குடும்பம்,குழந்தைகள்,தேக ஆரோக்கியம்,நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு,கலை..போன்றவை.
வாழ்கையில் இவை தவிர மற்ற ஒன்றும் இல்லாமல் தொலைந்து போய் விட்டால் கூட வாழ்க்கை முழுமையானதாகவே இருக்கும்(கால்·ப் பந்து நிரம்பிய ஜாடி போல)
கோலிகுண்டுகள் உன்களுக்கு தேவையான விஷயங்களை குறிக்கும்-வேலை,வீடு,வாகனம் போலமணல் துளிகள் உஙள் வாழ்க்கையின் மற்ற எல்லா சின்ன சின்ன விஷயங்கள் போல.
"நீங்கள் ஜாடியில் முதலில் மணலைப் போட்டால், கோலிகளுக்கோ அல்லது பந்துகளுக்கோ இடமில்லாமல் போய்விடும்.நீங்கள் சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் நேரத்தைவிரயம் செய்தால் பின் அத்தியாவசியமான அதி முக்கியமான வேலைகளுக்கு நேரமில்லாமல் போய் விடும்.உங்கள் சந்தோஷத்துக்கு எது அதி முக்கியமானதோ அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள்.உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்,மனைவி / கணவனுடன் நேரம் செலவழியுங்கள், தேக ஆரோக்யத்த்ற்கான முன்னெச்சரிக்கை மருத்துவ சோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.கால்·ப் பந்துகளில் கவனம் செலுத்துங்கள்,மணல்துகள்களில் அல்ல.அதற்க்கேற்றவாறு உங்கள் நேரத்தை முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என் முடித்தார்.
ஒரு மாணவி எழுந்து "ஐயா...அந்த இரண்டு கோப்பை தேநீர் எதைக் குறிக்கிறது" என கேட்டார்.
பேராசிரியர் புன்முருவலுடன் "இதை நீ கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்சியளிக்கிரது.நமது வாழ்க்கை எவ்வளவு தான் முழுமையானதாகவும்,நேரமற்றதாகவும் தோன்றினாலும் எப்படி நிரம்பிய ஜாடியினால் இரண்ட் கோப்பை தேநீரை மேலும் உள் வாங்க முடிந்ததோ அப்படி நாமும் இனிய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு கோப்பை தேநீர் அருந்த நேரம் ஒதுக்க முடியும்" என்றார்.
அன்புடன்...ச.சங்கர்

Thursday, July 21, 2005

பாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்

தலை நகர் டில்லியில் திரும்பவும் நேற்று ஒரு வன்புணர்தல் (Rape) சம்பவம் அரங்கேறி யுள்ளது.
மாயாபுரி என்ற இடத்தில் அதிகாலை நாலரை மணியளவில் ஒரு பெண்ணை பலவந்தமாக காரில் கடதிய மூன்று பேரால் இந்த சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது. தடுக்க முயன்ற அப்பெண்ணுடன் சென்ற மற்ற இரண்டு பெண்கள் மூர்க்கமாக தாக்கப் பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் அந்தப் பெண் அந்த மூன்று படு பாதகர்களால் ஓடும் காரில் வன்புணரப்பட்டு பறகு நடுத் தெருவில் தூக்கி வீசப் பட்டிருக்கிறாள்.
உடனே அனைத்து டில்லி பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு இதப் பற்றி எழுதியிருக்கின்றன. அதில் அந்தப் பெண் எந்த வழியாக எப்படி நடந்து போனாள், எப்படி காரி வந்தவர்கள் அவளை பலவந்தப் படுத்தினர் அவளுடன் சென்று கொண்டிருந்த பெண்களை எப்படிதாக்கினர் என நேரில் பார்த்தது போல் படம் போட்டு விளக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம் மே மாதம் 9 ஆம் தேதி மாயபுரிக்கு அருகிலேயே "தௌலாகுவான்" என்ற பகுதியில் நடந்தேறியது. அதிகாலை 2.30 அளவில் கல்லூரிப் பெண் ஒருவரை காரில் பலவந்தப் படுத்தி நான்கு கயவர்கள் சுமார் 2 மணி நேரம் ஓடும் காரில் வன்புணர்ந்து பின் ரோடில் வீசி விட்டு சென்று விட்டனர்.இதைப் போல் நிறைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை சொல்லிக் கொண்டே போகலாம் .

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

இதை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் ஒரு சில நாட்களுக்கு ஆஹா ஓஹோ என கூக்குரலிடுவதும் சில நாட்களில் வேறு நிகழ்வு கிடைத்தவுடன் இந்த விஷயத்தை அம்போ என விட்டு விட்டு அடுத்ததற்கு தாவி விடுவதும் எந்த விதத்தில் இவர்களது பத்திரிக்கை தர்மத்தையும், நியாயமாக இருக்க வேண்டிய சமூக பொருப்புணர்சியையும் நியாயப் படுத்த முடியும்?
பத்திரிகை விற்பனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு "investigative journalism" "adventurejournalism " என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பெரும்பாலும் கீழ்த்தரமான ரசனைகளுக்கே தீனி போடும் இந்த பத்திரிக்கைகளும்,பிறகு சில நாட்களில் அதைப் பற்றிய மக்களின் படிப்பார்வம் குறைந்து விட்டதாக தோன்றினால் அதை அப்படியே அம்போ என விட்டு விட்டு அடுத்த காசு பண்ணக் கூடியநிகழ்விற்கு தாவி விடுகின்றன.(சிறிய,பெரிய -நாள் ,வார,மாத ஏடுகள் பெரும்பாலானவை இதில் அடங்கும்) இப்படிப்பட்ட பத்திரிகைகளின் தரம் கெட்ட போக்கும் இந்த மாதிரி சீரழிவுகளுக்கு முக்கிய காரணம் என்பது எனது கருத்து.
அன்புடன்...ச.சங்கர்

Monday, July 18, 2005

படிச்சிட்டு சிரிங்க....காசா? பணமா?-------2

மேலதிகாரியிடத்தில் அன்பு (Love for Boss )
--------------------------------------------------------

அனைத்து மேலதிகாரி விசுவாசிகளுக்கும் சமர்ப்பணம்

ஒரு கம்பனியில் வேலை பார்ப்பவர் தனது மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்தார்.ஆனால் எடுத்ததோ மேலதிகாரியின் மனைவி "ஐயோ , அவர் போன வாரமே இறந்து விட்டாரே" என்றார்

மறுநாளும் அவர் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.அதற்கு மேலதிகாரியின் மனைவி " நேற்றே சொன்னேனே... அவர் போன வாரம் இறந்து விட்டாரென்று" என்றார்

மூன்றாவது நாளும் அந்த ஆள் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.கடுப்பாகிப் போன மேலதிகாரியின் மனைவி "யோவ், நான் ஏற்கனவே ரெண்டு தடவை உனக்கு சொல்லி விட்டேன்.என் கணவர் அதாவது உன் மேலதிகாரி போன வாரமே இறந்து விட்டாரென்று? பிறகு தினமும் ஏன் போன் செய்து கேட்கிறாய்?ஏன்... .. ஏன் .....ஏன்....? என்று கத்தினார்.

அவன் சிரித்துக் கொண்டே "ஏனென்றால் நீங்கள் சொல்லும் விஷயம்(பதில்) எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது?! "என்றான்.

படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?

இன்னும் ஒரு சர்தார்ஜீ நகைச்சுவை
---------------------------------
ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நி¢ருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில்வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

Saturday, July 09, 2005

அவள் கேட்ட மூன்று வரங்கள்

ஆங்கிலத்தில் படித்தது.... நன்றாக இருப்பதாக பட்டதால் தமிழ்படுத்தி இருக்கிறேன்


ஒரு ஊர்ல ஒரு மாது (அதாங்க லேடி )இருந்தாங்களாம்.ஒரு நா காட்டு வழியா போய்க்கிட்டு இருக்கும் போது (ஏம்போனாங்கன்னு கேட்காதீங்க) ஒரு தவளை கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறத பார்த்தாங்க.அந்த தவளை ஒரு மந்திரவாதி தவளையாம்.

"என்னய இந்தக் கூண்டுலேர்ந்து வெளியேத்தி காப்பாத்துனீன்னா ஒனக்கு மூணு வரம் தருவேன்" அப்படீன்னுச்சாம்.அந்த மாதுவும் சரின்னுட்டு அதை கூண்டுலேர்ந்து காப்பாத்தினாங்களாம்.

தவளையும் "ரொம்ப டாங்சு... ஆனா வரத்துல ஒரு கண்டிசன் இருக்கு,அவசரத்துல சொல்ல விட்டுட்டேன் " அப்படீன்னுச்சாம்.அந்த அம்மாவும் இது என்னடா கெரகம் புடிச்சதா இருக்குன்னு நெனச்சுக்கிடே"சரி,சொல்லித் தொலை" அப்படீன்னாங்களாம்.

"நீங்க எது கேட்டாலும் ஒங்க புருஷனுக்கு அது பத்து மடங்கா கிடைக்கும் அதான் கண்டிசன் " அப்படீன்னுச்சாம்."சீ...இவ்வளவுதானா ஜுஜூபி "அப்படீன்னுட்டு அந்த அம்மா வரம் கேட்க ஆரமிச்சாங்களாம்.

""வரம் நம்பர் ஒன்"" " நான் ஒலகத்திலேயே ரொம்ப பேரழகியா ஆயிடணும்" அப்படீன்னாங்களாம்.

தவளை "ஒம்பாட்டுக்கு கேக்குரயே...ஒம் புருசன் ஒன்னய விட பத்து மடங்கு பேரழகனா ஆயிருவான்,அப்புறம் ஒலகத்துல மத்த எல்லா பொண்ணுன்களும் அவனத்தான் சுத்துவாங்க " அப்பிடீன்னுச்சாம்.


அதுக்கு அந்த பொம்பளை"பரவால்லியே. யாரு அவரை சுத்தினாலும் ஒலகத்துலியே ரொம்ப அளகான பொண்ணா நாந்தான இருப்பேன். அதுனால அவரு என்னியதா சுத்துவாரு " அப்படீன்னாக.

"புத்திசாலி பொண்ணா இருக்கியே " அப்படீன்னுட்டு தவளையும் வரத்த தந்திருச்சு.


"" வரம் நம்பர் ரெண்டு""" நா ஒலகத்திலேயே பெரிய பணக்காரியா ஆயிடணும் " அப்படீன்னாங்களாம்.

ஒடனே தவளை ஏதோ சொல்ல ஆரம்பிக்க " தெரியும்,தெரியும், எம் புருசன் என்னய விட பத்து மடங்கு பணக்காரனாயிருவாரு.அதத்தான சொல்லப் போர ? புருசம் பொண்டாட்டிக்குள்ள யாருக்கிட்ட அதிகமா பணம் இருந்தா இன்னா?அவரு பணம் என்னுது...எம் பணம் அவருது " அப்படீன்னுச்சாம். வரம் கெடச்சது.


"" வரம் நம்பர் மூணு""" எனக்கு லேசா நெஞ்சடைப்பு (அதாங்க ஹார்ட்டு அட்டாக்கு) வரணும்" அப்படீன்னு கேட்டுட்டு சிரிச்சிச்சாம் அந்த பொம்பள.


தவளை " ஆஹா...கிளம்பிட்டாய்ங்கய்யா ...கிளம்பிட்டாய்ங்கய்யா ...பயங்கர வெவரமால்ல இருக்காங்க அப்படீன்னு வடிவேலு ஸ்டயிலில நெனச்சிச்சாம்.


இந்தக் கதையிலேருந்து இன்னா தெரியுது :"பொம்பளைங்க பயங்கர புத்திசாலிங்க...அவங்கோ கிட்ட வம்பு தும்பு வச்சுக்காதிங்கோஓஒ...


இத்தப் படிக்கும் பெண்மணிகளே...தாய்மார்களே..இந்த லட்டரை படிக்கிறதை இத்தோட நிப்பாடிட்டு சந்தோசமா போய்ட்டு வாங்க.


இத்தப் படிக்கும் ஆண்களே ...அப்பாவிகளே .... அப்டீக்கா கீழ போய் தொடர்ந்து படிங்க.
>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>
மூணாவது வரத்துனால அந்தம்மா புருசனுக்கு அந்த்ம்மாவுக்கு வந்த லேசான ஹர்ட் அட்டக்க விட பத்து மடங்கு லேச ஹார்ட் அட்டாக் வந்திச்சாம்.


இதுலேர்ந்து இன்னா தெரியுது :பொம்பளைங்க உண்மையிலேயே புத்திசாலிங்க இல்லை. ஆனா அப்படி நெனைச்சிக்கிட்டு இருக்காங்க,..... அவங்க பாட்டுக்கு அப்படியே நெனைச்சுக்கிட்டு இருக்கட்டும்.


எம்மா..இதப்படிக்கிற நீங்க ஒரு பொண்ணுன்னா .... சொல்லச் சொல்ல கேக்காம இதுவரைக்கும் படிச்சிட்டு வந்திருக்கியளே.


இதுலேந்து இன்னா தெரியுது.....பொம்பளைங்க எப்பவுமே சொன்ன பேச்ச கேக்கவே மாட்டாங்க அப்படீன்னு நிரூபணம் ஆவுதில்ல....


ஐய்யயோ...பொம்பளைங்கள்ளாம் ஒண்ணா சேர்ந்து அடிக்க வாராங்களே....விடு ஜூட்...


அன்புடன்....ச.சங்கர்


முக்கியமான பின்குறிப்பு : தாய்க்குலமே,சகோதரிகளே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடும்மில்லை.சிரிப்புக்காக மட்டுமே எழுதப் பட்டது .இருந்தும் மனம் புண்பட்டிருப்பின் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன். ( consolation : இந்தக் ஜோக்கில் பெண்ணினிடத்தில் ஆணை வைத்து எழுதினாலும் சரியாக வரும் !!!!)

Friday, July 08, 2005

இதப் படிங்க மொதல்ல...முற்றிலும் உண்மை

இந்திய பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளமும் அரசு சலுகைகளும்
___________________________________________________________________________________

மாதாந்திர சம்பளம் : ரூபாய் 12,000

தொகுதிக்கான மாதாந்திர செலவுத்தொகை : ரூபாய் 10,000

அலுவலக மாதாந்திர செலவினங்களுக்காக : ரூபய் 14,000

பயண சலுகை (கி.மி க்கு ரூ 8/- வீதம்) : ரூபய் 48,000
(ஒரு முறை தில்லி சென்று திரும்ப 6000 கி.மி க்கு)

பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினப்படி : ரூபய் 500


வீட்டில் மின்சாரக் கட்டணம் : 50,000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லை

உள்ளூர் தொலைபேசி வசதி : 1,70,000 கால்களுக்கு(calls) கட்டணமில்லை

இரயிலில் முதல் வகுப்பு குளிர் சாதன வசதி : கட்டணமில்லை
(இந்தியா முழுக்க) எத்தனை முறை பயணித்தாலும்)

ஆகாய விமானத்தில் (business class) உயர் வகுப்பு பயணம் : இலவசம்(வருடத்திற்கு 40 முறை)(துணைவியாரோ அல்லது உதவியாளரோ உடன் செல்லலாம்)

டெல்லியில் பாரளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கும் வசதி : இலவசம்

ஆக மொத்தம் ஒரு உறுப்பினருக்கான வருடாந்திர செலவு : ரூபாய் .32,00,000

5 வருடத்திற்கான செலவு : ரூபாய் .1,60,00,000

534 உருப்பினர்களுக்கான 5 வருடத்திற்கான செலவு : ரூபாய் : 8,54,40,00,000

அதாவது கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.
(அல்லாம் நாம குடுக்கற வரிப் பணம்தானுங்கோவ்)

இவர்கள் அனைவரும் தங்களது சொந்த தகுதியின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு போனவர்கள் அல்ல.இந்திய மக்களால்,உலகிலேயே மிகப் பெரியது என போற்றப் படும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

போய் என்ன செய்கிறார்கள் ????

போகும் அவர்களுக்கும் ...படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்.

அன்புடன் ....ச.சங்கர்

நான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி

கல் பானை சோழிக்கல் -- முடிவு பகுதி -
கடைசியில் பொன்னம்மாவிற்கு என்ன ஆச்சு ?


இந்தப் பதிவிற்கு முன் என்னுடைய போன பதிவைப் போய் ஒரு எட்டு படித்து விட்டு வந்துஇதைத் தொடருங்கள்....அந்தக் கதையின் முடிவுப் பகுதிதான் இது. நன்றி.
வேலைப் பளுவில் பொன்னம்மாவை மறந்தே போனேன்.இன்று காலை திடிரென்று ஞாபகம் வந்தது.அடடா பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லி மூன்று நாளாயிருக்குமே என்ன ஆயிற்றோ என்று அரக்கப் பரக்க அந்த கிராமத்திற்க்கு ஓடினேன்.வழியில் ஆற்றங்கரையிலேயே பொன்னம்மாவை பார்த்து விட்டேன்.ஓட்டமும் நடையுமாக அவள் அருகில்சென்றேன்.
பொன்னம்மா என்னை கவனிக்கவில்லை.கவனமாக பானையை துலக்குவதில் ஈடுபட்டிருந்தாள்.கழுத்தில் புதிதாக ஏறிய தாலி மஞ்சள் பளபளப்புடன் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதை அறிவித்தது.
நான் "பொன்னம்மா " என்று கூப்பிட்டேன்.
பொன்னம்மா திரும்பிப் பார்த்து "ஐயா நீங்களா?வாங்க "என்றாள்
"பஞ்சாயாத்தில் என்ன நடந்தது? சோழிக்கல் எடுத்தியா?என்ன கல்? ... "என்று மூச்சு விடாமல் சராமாரியாகக் கேட்டேன்.
என்ன நடந்தது....இனி பொன்னம்மா வார்த்தைகளில்
"கன்னய்யனும் அவன் ஆளும் பேசுனதக் கேட்ட அன்னையிலிருந்து யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல ஆயிடுச்சு.அப்பதான் ஆனந்து,நோநோ யெல்லாம் வலைப்பூவுல பின்னூட்டமா சொல்லியிருந்த முடிவெல்லாம் படிச்சேன்.அதுல ஏதாவது யோசனைய செயல் படுத்தலாம்னு இருந்தேன்.ஆனா நோநோ அவுக சொன்ன மாதிரி என்னால ரெண்டு வெள்ளைக் கல்லை பானைக்குள்ள யாருக்கும் தெரியாம போட முடியல.இப்படியே அமாவசையும் வந்துடிச்சு.பஞ்சாயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஆனந்து அவக எளுதுனது படிச்சேன்.ஒரு கல்ல எடுத்து முளுங்கிட்டு பானையிலிருக்கும் அடுத்த கல்ல வச்சு நான் எடுத்த கல்ல முடிவு பண்ணிக்கங்க அப்படின்னு சொல்ல சொல்லியிருந்தாரு.நானும் அடடா இதுல்ல நல்ல யோசனை...அப்படின்னு நெனச்சு அப்படியே செய்யலாமுன்னுட்டு முடிவெடுத்துட்டு போனேன்.
பஞ்சாயத்துல கூட்டமான கூட்டம்.எல்லா சனமும் வேடிக்கை பார்க்க வந்துருச்சுங்க.
பூசாரி பூசை போட்டுட்டு "ஆத்தாள மனசுல நெனச்சுக்கிட்டு தைரியமா ஒரு கல்ல எடு தாயி...எல்லாம் நல்லதே நடக்கும்" அப்படின்னு சொல்லிக்கிட்டே என்ன உத்துப் பாத்தாரு.
நானும் ஒரு கல்ல எடுத்து வாயில போட்டு முளுங்கிட்டேன்.
அப்ப பஞ்சாயத்து பெரியவரு கல்லக் காட்டு பொன்னம்மான்னு சொன்னாரு.நானு ஆனந்து எளுதுனது மாதிரியே " பானையிலிருக்கிற கல்லைப் பாத்து னான் எடுத்த கல்லை முடிவு பண்ணிக்கங்க" அப்படீன்னு சொன்னேன்.
பூசாரியும் கன்னையனும் தேள் கொட்டுன திருடங்க மாதிரி முளிச்சாங்க.
கன்னைய்யன் பூசாரிய "இரு ஒன்னிய கவனுச்சிக்குறேன்" அப்படீங்கற மாதிரி ஒரு மொர மொரச்சாரு.
பூசாரி பதறியடுச்சுக்கிட்டு எங்கிட்ட வந்து "அதல்லாம் பானைக்குள்ளார இருக்குற கல்லைப் பாக்கக் கூடாது.வழக்கமில்லை சொன்னாக் கேளு...ஆத்தாவா வந்து அருள் வாக்கு சொல்ரேன்."அப்படீன்னாரு.
ஊருல எல்லாம் பூசாரி சொல்ரதுக்கு தலையாட்ட அரமிச்சாங்க.
பஞ்சாயத்து பெரியவரு "இப்ப என்ன செய்யிறது.அவ சொன்ன மாதிரியே அடுத்த கல்லை எடுத்து பார்த்துர வேண்டியதுதான்..பூசாரி நீரே அடுத்த கல்லை எடுத்து சபையில காட்டும்" அப்படீன்னு சொன்னாங்க.
எனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம்..ஆஹா..யோசனை பலன் கொடுத்துடிச்சு ...அப்படீன்னு நெனைச்சேன்.கன்னையன் முகத்தை தொங்கப் போட்டுக் கிட்டு சோகமா நின்னாங்க.நான் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே தலைய குனுஞ்சிக்கிட்டுநின்னேன்.
பூசாரி...பாவி ...பாவி.. அப்படீன்னு சொல்லிக்கிட்டே பானைகுள்ள கைய விட்டு அடுத்த கல்லை எடுத்தாரு.கண்ணுலருந்து தாரை தாரையாதண்ணி ஊத்துது.
ஊர்ப் பெரியவரு "பூசாரி சீக்கிரம் கல்லைக் காட்டுவே" அப்படீன்னு அதட்டினாரு.
பூசாரி கைய நீட்டினாரு.
"கருப்புக் கல்லுதான இருந்தது " நான் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவை கேட்டேன்.
பொன்னம்மா ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்து விட்டு "இல்லிங்க...வந்தது வெள்ளைக் கல்.... என்றாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஒரு நிமிடம் தலை சுற்றியது."என்னது...வெள்லைக் கல்லா?" என்றேன்.
" இப்படித்தாங்க ...ஊர்க் காரவுகளெல்லாம் கல்லைப் பாத்துட்டு ...வெள்ளைக் கல் .... வெள்ளைக் கல்... அப்படினுட்டு கத்துன போது ஒரு நிமிடம் எனக்கும் ஒண்ணுமே புரியல".கன்னையனும் வாயடச்சுப் போய் நின்னுட்டாக.நா கூட என்றென்றும் அன்புடன் பாலா அவுக சொன்ன மாதிரிஆத்தாதான் வந்து கல்லை மாத்திடிச்சோன்னு நெனைச்சேன்"
பஞ்சாயத்து பெரியவரு "அப்படீன்ன்னா பொன்னம்ம எடுத்தது கருப்புக் கல்லு...அதனால ஆத்தா மனசுப் படி பொன்னம்மா கன்னையனகட்ட வேண்டியது. கல்யாணம் நாளைக்கு கோயில்ல நடக்கும் .வீரய்யன் மாமனாராயிட்டதால கடன கன்னையன் திரும்ப கேக்கக் கூடாது "அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டாரு.
தீர்ப்பக் கேட்டு நான் மயக்கமா சாஞ்சுட்டேன்.என்ன பக்கத்துலருந்த வீட்டுல போட்டுட்டு பூசாரிய விட்டு (அவர்தான ஊர் வைத்தியரு)பார்க்கச் சொன்னாங்க.நான் கண்ணு முளிச்சப்ப பூசாரி என் பக்கத்துல சோகமா நின்னுக்கிட்டு இருந்தாரு.அறைல வேற யாரும் இல்ல.நான் "பூசாரி,கன்னையன் சொன்னானுட்டு பானையில ரெண்டும் கருப்பு கல்லுதான போட்டீங்க..பின்ன எப்படி? என்று கேட்டேன்.
பூசாரி"பாவி மகளே ...கன்னையன் பானையில ரெண்டும் கருப்பு கல்லு போடச் சொன்னது வாஸ்தவம்தான்.ஆனா நான் என் கடனுக்காகஒன்னோட வாள்க்கைய நாசம் பண்ணக் கூடாது அப்படீன்னுட்டு ரெண்டயுமே வெள்ளைக் கல்லாப் போட்டு வச்சேன்.அளவுக்கு மீறி யோசிச்சு காரியத்தை கெடுத்திட்டயே..நான் நல்லதுதான் நடக்கும் அப்படீன்னு சூசகமா சொன்னேனே..கேக்காம போயிட்டியே பாவீன்னாரு.
கொஞ்ச நேரம் சும்மா இருந்த பொன்னம்மா மெதுவாக "நா கன்னையனுக்கு வாக்கப் படணுமின்னுட்டு இருக்கு.என்ன செய்ய" என்றாள்.
நான் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.அப்போது அங்கு வந்த கன்னையன் "என்ன புள்ள..போகலாமா" என்றான்
"இதோ வந்துட்டேன்...மச்சான் " என்றவாரே என்னைப் பார்த்து முறுவலித்தாள்.போகிற போக்கில் "ஆனா ஒண்ணுங்கையா...நாம ஆசைப் படரவன விட நம்ம மேல ஆசை வக்கிரவன கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாதான் இருக்கும் " என்று சொல்லி விட்டு கன்னையனுடன் நடக்கலானாள்.
இதை உண்மையாக உணர்ந்து சொன்னாளா இல்லை சமாதானத்திற்காக சொன்னாளா என்று புரியாதவனாக நெடு நேரம் சிலையாக நின்றேன்.

அன்புடன்....ச.சங்கர்

Saturday, July 02, 2005

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்

ஒரு வித்தியாசமான கதை முயற்சி.

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்.

"கல்பானை சோழிக்கல்"

பொன்னம்மா அந்த கிராமத்தின் கனவு தேவதை என்று சொல்லக்கூடிய மாதிரித்தான் இருந்தாள்.சற்றே கருப்பானாலும் எடுப்பான தேகம்.களையான முகம்.பட்டாம் பூச்சி போல் படபடக்கும் கண்கள்.பொன்னம்மா அழகானவள் மட்டுமல்ல அதற்கேற்றாற் போல் புத்தி சாதுரியம் உள்ளவளும் கூட.

கன்னையனுக்கு அவள் மேல் ரொம்ப நாளாகவே ஒரு கண். கிராமத்திலேயே கொஞ்சம் பணம் காசுடன் வசதியாக வாழ்பவன்.மைனர்தனங்கள் கொஞ்சம் உண்டென்றாலும் ஒரேடியாக கெட்டவன் என்று சொல்லி விட முடியாது.சின்ன சின்ன சபலங்கள் உண்டென்றாலும் பெரிய தப்பெல்லாம் பண்ணும் அளவுக்கு தைரியம் கிடையாது. எவ்வளவோ தடவை பொன்னம்மாவின் தகப்பன் வேலுச்சாமியிடம் பொன்னம்மாவை பெண் கேட்டும் வேலுச்சாமி பிடி கொடுத்தே பேசவில்லை.

காரணம் வேலுச்சாமியின் அக்காள் மகன் அழகேசன்.அவன் கன்னையனைப் போல் பணக்காரன் இல்லை என்றாலும் ஓரளவு நிலம் வைத்து சொந்தமாக விவசாயம் பார்த்து கஷ்டமில்லாமல் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்தான். அழகேசன் பொன்னம்மாவிற்க்கு முறைப் பையன் என்பதாலும் பொன்னம்மாவிற்கும் அவன் மேல் கொஞ்சம் அபிமானம் உண்டென்று அரசல் புரசலாக பிறர் சொல்லி கேள்விப்பட்டதாலும் வேலுச்சாமி யோசித்துக் கொண்டிருந்தான்.

பொன்னம்மாவிற்கும் அழகேசனுக்கும் உடனடியாக பரிசம் போட்டு விடலாம் என்றால் அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. முன்பு வேலுச்சாமி விவசாய நஷ்டம் காரணமாக கன்னையனிடம் பெரும் தொகை கடனாக வாங்கி இருந்தான்.பரிசம் போடவோ அல்லது கடனை அடைக்கவோ அவனிடம் உடனடியாக பணம் இல்லை.

அந்த ஊரில் ஆண் பிள்ளையில்லாத கடனாளியான ஒருவர், தன் மகளுக்கு, கடன் கொடுத்தவர் தவிர வேறு ஒருவருக்கு பரிசம் போட வேண்டும் என்றால் கடன் கொடுத்தவரின் அனுமதி வேண்டும் என்பது கட்டுப்பாடு. கடன் கொடுத்தவர் சம்மதிக்காத பட்சத்திலும் அதே சமயம் அந்தப் பெண் கடன் கொடுத்தவரை மணக்க சம்மதிக்காத பட்சத்திலும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுதான் "கல் பானை சோழிக்கல் " போடுதல்.

அதாவது ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடத்தில் ஒரு கை மட்டுமே உள்ளே நுழையக் கூடிய சின்ன வாயுள்ள ஒரு கல் குடம் இருக்கும். ஊர்ப் பூசாரி கறுப்பு மற்றும் வெளுப்பு கலரில் கோலி அளவுள்ள ரெண்டு கூழாங்கல்லை ( சோழிக்கல்) பூஜையில் வைத்து பெளர்ணமி நாள் நள்ளிரவில் கல் பானையில் போட்டு அதன் வாயை மஞ்சள் துணி போட்டு கட்டி விடுவார்.அடுத்த அம்மாவாசையன்று ஊர் முன்னிலையில் அந்தப் பெண் கல் பானையில் இருந்து ஒரு சோழிக்கல்லை எடுக்க வேண்டும். எடுத்தது கருப்புக் கல்லாயிருந்தால் அந்தப் பெண் வாதியையே (கடன் கொடுத்தவர்) மணக்க வேண்டியது.வெள்ளைக் கல் என்றால் அந்தப் பெண் யாரை வேண்டுமானாலும் மணக்கலாம்.அவள் தகப்பன் கடனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இ.பி.கோ சட்டம், போலிஸ் எல்லாம் எட்டிப் பார்க்காத குக்கிராமமாகையால் இதுவே நடைமுறையாக இருந்தது.இடைப்பட்ட பதினைந்து நாளில் எதாவது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் "கல் பானை சோழிக்கல்" எடுப்பது தவிர்க்கப் படும்.
இப்படியாகத்தானே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பொன்னம்மா கல்யாணப் பிரச்சனை ஊர்ப் பஞ்சாயத்தின் முன் வந்து ஒரு சமாதானமும் ஆகாமல் " கல் பானை சோழிக்கல்" போட்டு விடுவது என்று முடிவாகியது.ஊர்ப்பூசாரி ஒரு பெளர்ணமி சுப யோக சுப இரவில் கோவிலில் அம்மன் முன் வைத்த சோழிக்கற்களை யாரும் பார்க்காமல் நள்ளிரவில் கல் பானையில் போட்டு மாலை மரியாதைகளோடு மஞ்சள் துணி போட்டு கட்டி வைத்து விட்டார்.
பொன்னம்மா தினமும் வயல்காட்டுக்கு போகும் பொழுது பஞ்சாயது கூடுமிடத்தை கடந்துதான் போக வேண்டும். கல் பானையைப் பார்க்கும் போதே அவளுக்கு தன் மற்றும் அப்பன் தலை எழுத்து பானைக்குள் ஒளிந்து கிடக்கிறதே என்று இருக்கும்.
இப்படியாக பத்து நாட்கள் போயிருக்கும்.
ஒரு நாள் அந்தியில் இருட்டிய பிறகு வயலில் இருந்து வீடு திரும்பும் போது திடீரென்று மழை சட சடத்தது. டக்கென ஒரு மரத்தோரம் ஒதுங்கிய பொன்னம்மாள் மாராப்பால் ஈரம் துடைத்தபடி நின்று இருந்த போது மரத்தின் அந்தப்பக்கமிறுந்து பேச்சரவம் கேட்டு அப்படியே அசயாது நின்றாள்.அந்தப் பேச்சில் பொன்னம்மா என்ற பெயர் அடி படவே உன்னிப்பாய்க் கேட்கலானாள்.கன்னையனும் அவன் கைத்தடிகளில் ஒருவனும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
கைத்தடி கேட்டான் "ஏண்ணே பொன்னம்மாவைக் கட்டிக்கிட ரொம்ப இஷ்டம்மாக இருந்தீங்களே.இப்ப கல் பானையிலிருந்து பொன்னம்மா வெள்ளைக்கல் எடுத்துட்டா என்ன செய்வீங்க ? என்றான்.
கன்னையன் ஒரு மாதிரியாக சிரித்து விட்டு "டேய் இது கூடவா நா யோசிக்காம இருந்திருப்பேன், பொன்னம்மா வெள்ளைக் கல்ல எடுக்க மாட்டா. எடுக்கவும் முடியாதுடா" என்றான்.
கைத்தடி ரொம்ப ஆச்சர்யமாக "எப்படிண்ணே இவ்வளவு உறுதியா சொல்றீங்க " என்றான்.
கன்னய்யன் "அடேய் இந்த பூசாரியும் என் கிட்ட கடன் வாங்கினவம்தானடா.ஆனா அது ஊர்ல யாருக்கும் தெரியாது .அதனால அவன மிரட்டி கல்பானைக்குள்ள ரெண்டயுமே கறுப்பு சோழியா போடச் சொல்லிட்டேன்.அப்புறம் எப்படிடா பொன்னம்மா வெள்ளைச் சோழிக்கல் எடுப்பா? என்னயக் கல்யாணம் கட்டாம இருப்பா? " என்று கேட்டான்.
இதைக் கேட்ட பொன்னம்மா அப்படியே விக்கித்துப் போய் நின்றாள்.முதலில் என்ன செய்வது என்றே ஒன்றும் தோன்றவில்லை.பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த படியே நடக்க லானாள். இந்த விஷயத்தை ஊருக்குள் சொல்வதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. பூசாரி தப்பு பண்ணி விட்டான் என்று நிரூபிக்கலாமே தவிர கன்னையன்தான் செய்யச் சொன்னான் என்று நிரூபிக்க முடியாது.அதனால் அவள் அப்பன் கடனுக்கு எந்த விடிவும் கிடையாது. அதனால் பஞ்சாயத்து அடுத்த பெளர்ணமியில் திரும்ப கல்பானை கட்டச் சொல்லும்.அதில் கறுப்புக் கல் எடுத்தாலும் கன்னையனைத்தான் கட்ட வேண்டும்.ஆனால் இந்த தடவை கல் எடுத்தால் கண்டிப்பாக கறுப்புதன் அப்புறம் கன்னையன்தான் கணவன் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடியே நடந்தாள்.
எது செய்தாலும் இன்னும் ஐந்து நாட்கள்தான் பாக்கி..........

இந்தக் கதையை ஆரம்பித்து விட்டேன். முடிக்கத் தெரியவில்லை .

வலைப்பூ வாசகப் பெருமக்களே / குழும நண்பர்களே இதன் முடிவு எப்படி இருக்கலாம் என்று யூகித்து எழுதுங்களேன்.நல்ல கற்பனைக்கு ஆயிரம் பொன் பரிசுன்னுலாம் அறிவிக்க மாட்டேன் . என் கிட்ட கிடையாது.ஒரு சபாஷ் அவ்வளவுதான்.
எழுதப் பட்ட முடிவுகளில் லாஜிக் இருக்க வேண்டும்.அதைப் பற்றி மற்றவர்கள் விமர்சிக்கலாம்.

பின் குறிப்பு : உண்மையில் பொன்னம்மாளுக்கு என்ன ஆயிற்றென்று அடுத்த பதிவில் சாவகாசமாய்.
அதற்குள் உங்களில் ஒருவர் சரியாக ஊகித்தாலும் ஊகிக்கலாம்.
எல்லாம் அவன் செயல்.

அன்புடன் ....ச.சங்கர்